படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்)
வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார்.
வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
லிண்ட்சே ஹாலிகன், “நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நமது குடிமக்களின் பாதுகாப்புக்கு (Safety and Security) ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகத் தெரிகிறது,” என்று கூறினார்.
“இந்த வழக்கில் உண்மைகளும் சட்டமும் தெளிவாக உள்ளன. நாங்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.”
இந்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் இரண்டரை லட்சம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லிஸின் வீட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 வயதான டெல்லிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (National Security Council) உறுப்பினராக இருந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ராய்ட்டர்ஸ் செய்திப்படி, எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit), அவர் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் (பென்டகன்) ஒப்பந்ததாரராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஆவணங்களின்படி, அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை அவர் மீது முறையாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டெல்லிஸ் வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான (Think Tank) கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பில் ஒரு மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.
டெல்லிஸ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்துத் தாங்கள் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு
எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், டெல்லிஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டடங்களுக்குச் சென்று, ரகசிய ஆவணங்களை அச்சிட்டுப் பைகளில் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.
சனிக்கிழமை, வெர்ஜீனியாவில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போது, “டாப் சீக்ரெட்” மற்றும் “சீக்ரெட்” என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன.
நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ சமர்ப்பித்த ஆவணங்களின்படி, “டெல்லிஸ் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். இவற்றில் ஒரு சந்திப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி வெர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் நடைபெற்றது. அங்கு அவர் ஒரு உறையை கொண்டு சென்றார், ஆனால் திரும்பி வரும்போது அவரிடம் அது இல்லை.”
வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தனது பங்கு காரணமாக டெல்லிஸ் “டாப் சீக்ரெட்” பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருந்தார். இதன் கீழ் அவருக்கு முக்கியமான தகவல்களை அணுகும் உரிமை இருந்தது என்று உறுதிமொழிப் பத்திரம் கூறியது.
சீன அதிகாரிகளுடனான சந்திப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இந்த விவகாரத்தில் தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை (சித்தரிப்புப் படம்)
ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை ஊழியர் 2023 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான இடங்களிலிருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித் துறையின்படி, டெல்லிஸ் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத மூத்த ஆலோசகராகவும், மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆஃபீஸ் ஆஃப் நெட் அசெஸ்மென்ட்டின் (இப்போது “டிபார்ட்மென்ட் ஆஃப் வார்”) ஒப்பந்தத்தாரராகவும் இருந்தார்.
அவர் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படுகிறார்.
நீதிமன்ற ஆவணங்களில், டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டில் “டாப் சீக்ரெட்” மற்றும் “சீக்ரெட்” என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் மீட்கப்பட்டன.
செப்டம்பர் 12 அன்று, அவர் அரசாங்க அலுவலகத்தில் தனது சகா ஒருவர் மூலம் பல ரகசிய ஆவணங்களை அச்சிட்டு பெற்றார். செப்டம்பர் 25 அன்று, அவர் அமெரிக்க விமானப்படையின் திறன் தொடர்பான ஆவணங்களை அச்சிட்டார்.
குற்றச்சாட்டுகளின்படி, அவர் கடந்த பல ஆண்டுகளாகச் சீன அரசாங்க அதிகாரிகளைப் பலமுறை சந்தித்துள்ளார். செப்டம்பர் 2022 இல் ஒரு உணவகத்தில் சீன அதிகாரிகளைச் சந்தித்தார். அதே சமயம், ஏப்ரல் 2023 இல் நடந்த ஒரு கூட்டத்தில், இரான்-சீனா உறவுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விவாதித்தது தெரியவந்தது.
ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், அவர் சீன அதிகாரிகளிடமிருந்து ஒரு பரிசுப் பையைப் பெற்றார்.
ஆஷ்லே ஜே. டெல்லிஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.
அவர் அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.
ஆஷ்லே ஜே. டெல்லிஸ் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (பொருளாதாரம்) பட்டங்களை பம்பாய் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
டெல்லிஸ், கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் உத்தி ரீதியான விவகாரங்களுக்கான டாடா சேரில் (Tata Chair for Strategic Affairs) மூத்த ஆய்வாளராக உள்ளார். அவர் குறிப்பாக ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் தொடர்பான சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றில் நிபுணர்.
அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரின் (Under Secretary for Political Affairs) மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இந்தியாவுடனான சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார். அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றினார்.
அரசு சேவைக்கு முன், அவர் RAND கார்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும், RAND பட்டதாரி பள்ளியில் கொள்கை பகுப்பாய்வுப் பேராசிரியராகவும் இருந்தார்.
அவர் ஆசிய ஆராய்ச்சி தேசிய பணியகத்தில் (National Bureau of Asian Research) ஆலோசகராகவும், அதன் மூலோபாய ஆசியா திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குநராகவும் உள்ளார்.