5
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்படவுள்ள பள்ளிச் சீர்திருத்தங்களின் கீழ், சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் (SEND) உள்ள குழந்தைகளுக்கான “பயனுள்ள ஆதரவு” (effective support) திரும்பப் பெறப்படாது என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.
SEND அமைப்பைச் சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு நிதியைக் குறைக்கப்போவதில்லை, மாறாக அதிக பணத்தைச் செலவிடவுள்ளது என்று கல்வி அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார். 2028ஆம் ஆண்டு முதல், தற்போது உள்ளூராட்சி மன்றங்களால் ஈடுகட்டப்படும் SEND செலவுகளை அரசாங்கமே ஏற்கும். இதனால் சுமார் £6 பில்லியன் நிதி அழுத்தம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கல்வி, ஆரோக்கியம் மற்றும் பராமரிப்புத் திட்டங்கள் புதிய அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். அத்துடன், பள்ளி அளவிலான ‘தனிநபர் ஆதரவு திட்டங்கள்’ அனைத்து SEND குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டங்களுக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படும்.
2029ஆம் ஆண்டு முதல், ஆரம்பப் பள்ளி முடிந்து இரண்டாம் நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் தேவைகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஆண்டுதோறும் செய்யப்பட வேண்டிய EHCP (Education, Health and Care Plan) ஆய்வுகள் சரியாக நடப்பதில்லை என்று அமைச்சர் பிலிப்சன் குறிப்பிட்டார். “புதிய அமைப்பின் கீழ், அதிக குழந்தைகளுக்கு ஆதரவு கிடைக்கும். அதுவும் மிக விரைவாகவும், அவர்களுக்குத் தேவையான இடத்திலும் கிடைக்கும். இதற்காகப் பெற்றோர்கள் கடுமையாகப் போராட வேண்டிய அவசியமிருக்காது” என்று பிலிப்சன் உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் கல்வி அமைச்சர் லாரா ட்ரோட், இந்த மறுபரிசீலனைத் திட்டம் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், ஆதரவு திரும்பப் பெறப்படுவதை தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சில பெற்றோர்களும் தங்களுக்கு ஏற்கனவே கிடைத்து வரும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகள் பறிக்கப்படுமோ என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. மேலும், இந்தச் சீர்திருத்தங்களின் மூலம் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் இடையிலான கல்வித் தகுதி இடைவெளியைப் பாதியாகக் குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.