11
இங்கிலாந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் தேசிய குற்றவியல் முகமை (NCA) அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் வரை கைது செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள் ஒரே மாதிரியான குற்றச் சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைக்க உதவுவதாகவும், இதனால் குற்றவாளிகள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர் நியாயப்படுத்திக் கொள்ளும் ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் NCA அதிகாரி ராப் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பு இரகசிய இணையதளங்களில் (Dark Web) மட்டுமே காணப்பட்ட இக்குற்றங்கள், தற்போது சாதாரண சமூக வலைத்தளங்களிலேயே சிறுவர்களைக் கண்டறியும் அளவுக்கு வெளிப்படையாக மாறியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இது தொடர்பான புகார்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதோடு, மிகக்குறைந்த தொகையைச் செலுத்தி சிறுவர்கள் மீதான அத்துமீறல்களை நேரலையில் பார்க்கும் கொடூரமான குற்றங்களும் பெருகி வருகின்றன.
இந்த அச்சுறுத்தலைக் கையாள தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள இங்கிலாந்து அரசு, சட்டவிரோத உள்ளடக்கங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இணையப் பயன்பாடு மற்றும் நடத்தையில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.