• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

இசை கலைஞர் ஹர்ஷவர்தனின்’ மாயம் நீயடி..’ எனும் சுயாதீன இசை அல்பம் வெளியீடு

Byadmin

Feb 25, 2026


தமிழ் திரையிசையுலகில் சாதனை படைத்த இசையமைப்பாளர் வித்யா சாகரின் வாரிசு- பின்னணி பாடகர் – மேடை பாடகர்- இசைக் கலைஞர் – நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்த இசை கலைஞரான ஹர்ஷவர்தன் ‘மாயம் நீயடி’ எனும் சுயாதீன இசை அல்பத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த சுயாதீன இசை விடியோ அல்பத்திற்கான பாடலுக்கு ஹர்ஷவர்தன் இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார்.

இந்த பாடலுக்கான காணொளியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதலர்களுக்கிடையேயான  காதல் ரசாயனத்தை கச்சிதமாக துண்டொளி ( மாண்டேஜஸ்) காட்சியில் வெளிபடுத்தி ரசிகர்களை மாயம் செய்து மயக்குகிறார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் வழக்கமான சுயாதீன இசை பாடலுக்கான காணொலியாக இல்லாமல்.. கொமர்சல் திரைப்படங்களில் இடம்பெறும் மெல்லிசை பாடலாக உருவாகி இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

புகைப்படக் கலைஞரான நாயகனுக்கும் ஓவியம் வரையும் நாயகிக்கும் இடையேயான அறிமுகம் – நட்பு – காதல் – புரிதல் – தனித்திறன்- காத்திருப்பு – சந்தோஷம் – ஏக்கம் – தவிப்பு – என ஒவ்வொரு உணர்வும் இனிமையான இசையுடன் காட்சியாக ஒளிரும் போது ரசிகர்களுக்கு அற்புதமான இசை அனுபவமும், திரை அனுபவமும் கிடைக்கிறது.

ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை அல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் இவர்.. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் ஹர்ஷவர்தன் இந்த ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புதுமுக நடிகராக அறிமுகமாகி தடம் பதிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

By admin