• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்கள் தேவை – இங்கிலாந்து பிரதமர்

Byadmin

Feb 16, 2026


இங்கிலாந்தில் இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கூடுதல் அதிகாரங்கள் தேவை என பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்ய தனது அரசு உறுதியுடன் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக ஸ்டாமர் பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு விதிக்கப்படலாம் என்றும், அதன் அடிப்படையில் பதின்ம வயதினர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இளையர்கள் சமூக ஊடக கட்டுப்பாடுகளைத் தவிர்க்க பயன்படுத்தும் VPN போன்ற தனிப்பட்ட இணைய அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றார்.

அதேபோல், தானியக்க உரையாடல் சேவைகள் (Chatbot) சிறுவர்களை அதிக அளவில் பாதிப்பதால், அவற்றுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என ஸ்டாமர் கூறினார்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சட்டங்களும் காலத்திற்கேற்ற வகையில் மாற்றம் அடைவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இணையப் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளில், இங்கிலாந்து உலக நாடுகள் பின்பற்றக்கூடிய முன்னுதாரணமாக விளங்கும் வகையில் செயல்படும் எனவும், இதன்மூலம் குழந்தைகள் மற்றும் இளையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் ஸ்டாமர் நம்பிக்கை தெரிவித்தார்.

By admin