இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதிகோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் ஆஜராகினர். அப்போது அசோக்குமாருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 30-க்கு தள்ளிவைத்துள்ளார்.