சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.
வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் சென்ட்ரலில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், “அணியில் நிறைய நடந்து விட்டது, நாம் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக வொயிட் பால் கிரிக்கெட்டில் தோற்று வருகிறோம். எல்லா அணிகளுடனும் தோற்கிறோம். தற்போது துணிச்சலான முயற்சிகள் தேவைபடுகின்றன. தைரியமான இளம் வீரர்கள் நமக்கு தேவை. ஐந்து முதல் ஆறு மாற்றங்கள் அணியில் செய்யப்பட வேண்டும். 2026 T20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட வேண்டும். அவர்களுக்கு நிறைய நேரம் கொடுத்து விட்டோம். அவர்களை நட்சத்திர வீரர்களாக்கினோம். ஆனால் இனி அது நடக்கப்போவதில்லை” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அக்ரம் ,”தற்போது என்ன நடக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? தேர்வுக்குழு , கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அழைக்கப்பட வேண்டும். எதன் அடிப்படையில் யாருக்கு விளையாட வாய்ப்பளித்தார்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும். குஷ்தில் ஷா மற்றும் சல்மான் ஆகா ஆகியோரைப் பார்க்கும் போது, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை அவர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என தோன்றுகிறதா? ” என கேள்வி எழுப்பினார்.
“தற்போது ஆடும் 11 பேர் கொண்ட அணி சரியில்லை என நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மாற்றம் செய்ய விரும்பினால், செய்கிறோம் என கிரிக்கெட் வாரிய தலைவர் கூறுகிறார் . ஆனால் அதே 11 வீரர்களுடன் மீண்டும் அணி காலமிறங்குகின்றது. இதில் கேப்டனுக்கும் பங்கிருக்கிறது. ஏனென்றால், அவர்தான் அணியின் தலைவர். எந்த வீரருடன் விளையாடினால் போட்டியை வெல்ல முடியும் என்பது கேப்டனுக்கு தெரியாவிட்டால், அது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாகிஸ்தான் ரசிகர்கள் 20 ஓவர் முடிந்த உடனேயே துபை மைதானத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இது முன்னெப்போதும் நிகழாத ஒன்று” என வாசிம் அக்ரம் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கார் யூனுஸ் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்தார்.
“பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் ஒழுக்கம் இல்லை. பேட்டிங்கிலும் இதே நிலைமைதான். பாபர் நன்றாகத் தோன்றுகிறார். ஆனால் அவரால் அவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ரிஸ்வான் வந்த உடனேயே பவுண்டரி அடித்தார், ஆனால் இதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது” என யூனுஸ் கூறினார்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் போது, “தனித்துவமான எதுவும் நடந்துவிடவில்லை. இந்த நிலைமைக்கு நாம் தற்போது பழகிக் கொண்டோம். இது வீரர்களின் நோக்கத்தைப் பற்றியதல்ல. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு திறமையே இல்லை. திறமை இருந்ததால் இப்படி விளையாட மாட்டார்கள். புத்தியை பயன்படுத்தாமல் கேப்டன்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. தற்போது இது பற்றிய பேசுவதற்கும் எனக்கு விருப்பமில்லை” என கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
திறமை குறித்த கேள்வி
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ் பேசிய போது, ”பாகிஸ்தான் அணியிடம் திறமை இருக்கிறது. ஆனால் திட்டமிடடுவதில் சிக்கல் இருக்கிறது” என்றார். இதில் குறுக்கிட்ட ஷோயிப் அக்தர், ”அது என்ன திறமை? அது எதற்கு உதவும்?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முகமது ஹஃபீஸ்,” நாம் வேண்டுமென்றே நல்ல ஓபனிங் பேட்டரை வைத்துக் கொள்வதில்லை, நல்ல சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்துவதில்லை, நமக்கு இரண்டாவது ஸ்பின்னர் இல்லை. நம்மிடம் இருப்பவர்களும் ஒழுங்கற்றவர்களாக உள்ளனர். தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் நிலைமை வேறாக இருக்கும். இந்த பிட்சில் 241 ரன்கள் என்பது மோசமான டார்கெட்டாக நான் நினைக்கவில்லை” என்றார்.
ஷோயிப் அக்தர் பேசும் போது,” நாம் பாபரையும், விராட்டையும் ஒப்பிட முடியுமா? ரோகித் ஷர்மாவையும், ரிஸ்வானையும் ஒப்பிட முடியுமா? என்ன திறமையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? திறமை என்பது பேச்சில் இருக்கக் கூடாது, அது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஒரு நட்சத்திரம் என்பது இருட்டில் உருவாவதல்ல, ஒளிரக்கூடியது” என்றார்.
வக்கார் யூனுஸ் பதிலளிக்கும் போது,” ரிஸ்வான் மற்றம் சவுத் ஷகீல் பார்ட்னர்ஷிப்பில் 104 ரன்கள் குவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 144 பந்துகளில் 104 ரன்களை எடுத்தனர். இது ஒரு நாள் கிரிக்கெட்டுக்கானது அல்ல, இவர்கள் இருவரும் 24 ஓவர்கள் பேட்டிங் செய்தனர், இதில் 19 ஓவர்கள் 5 அல்லது அதற்கும் குறைவான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. 5 ரன்களும் கூட இரண்டு அல்லது மூன்று முறையே எடுக்கப்பட்டன. இந்தியா முதல் 10 ஓவர்களில் 11 பவுண்டரிகளை விளாசியது. ஆனால் பாகிஸ்தான் முதல் 30 ஓவர்களிலேயே 11 பவுண்டரிகளைதான் அடித்தது. ரிஸ்வான் மற்றும் ஷகீலின் பார்ட்னர்ஷிப்பே தோல்விக்கு காரணம் என நான் நம்புகிறேன்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஸா அவரது யூடியூப் சேனலில் பேசிய போது,” இந்தியாவுடன் தோல்வியடையும் போது, நிறைய மனவலியைத் தருகிறது. ஆனால் இதில் மேலும் வலி தரக்கூடியது என்னவென்றால், இந்தியா தற்போது நிறைய முக்கியத்துவம் தருவதில்லை. ஏனென்றால் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிவார்கள். தற்போது மக்கள் என்ன நம்பத்தொடங்கி விட்டனர் என்றால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடினால் நிச்சயமாகத் தோல்வி தான் என நினைக்கின்றனர்.”என்றார்
” வங்கதேசம் அளவுக்கு கூட நாம் சவாலைக் கொடுப்பதில்லை. எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா அறிந்து வைத்துள்ளது.” என்றார்.
“பாகிஸ்தான் அணியில் பல பிரச்சனைகள் உள்ளன. ரிஸ்வானின் கேப்டன்சி சிறப்பாக இருந்திருக்கலாம். பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு மிக பலவீனமாக உள்ளது. ஷகீல் மோசமான ஷாட்டுகளை ஆடுகிறார். சல்மான் அகாவும் இதையே செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக 241 ரன்கள் இலக்கை கொடுத்துவிட்டு நீங்கள் வெல்ல முடியாது. விராட் கோலி புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்திருக்கிறார், மிச்சிறப்பான உடற்தகுதியுடன் இருக்கிறார்.” என்றார் ரமீஸ் ராஸா.