• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுடன் வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவோம் | கலாநிதி ஹர்ஷ டி சில்வா

Byadmin

Mar 30, 2026


இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே இப்போதாவது இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) குறித்து தீவிரமாகப் பேச வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு ஹர்ஷ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மீண்டும் ஒருமுறை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எங்களைக் காப்பாற்ற முன்வந்துள்ளார், அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள். நாம் ஒவ்வொரு முறை துயரத்தில் இருக்கும்போதும் அவர்கள் உதவியக்கரம் நீட்டுகிறார்கள்.

இந்தியா – இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்துவதை பல தசாப்தங்களாக எதிர்த்து வந்தவர்கள், இப்போதாவது யதார்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நாம் எப்போதும் உதவிக்காக மட்டுமே தொலைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது.

நாம் உதவி என்பதற்கும் மேலாக அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். வலுவான மற்றும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் ஒரு கூட்டாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தைச் சுற்றி வளைத்துப் பேசியது போதும், இப்போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து தீவிரமாகப் பேசுவோம்; நமது பொருளாதார இயந்திரங்களை ஒருங்கிணைப்பது குறித்துப் பேசுவோம்.

உற்பத்தி, சேவைகள், வலுசக்தி ஆகியவற்றில் இரு நாடுகளையும் இணைப்பது பற்றியும், தொலைதொடர்புகள் பற்றியும் பேசுவோம்; நிச்சயமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அளவீட்டு வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு ஒரு சமச்சீரற்ற கட்டமைப்பில் இதை முன்னெடுக்கலாம். இதற்கான வாய்ப்புகள் முடிவற்றவை. பழைய மலிவான அரசியல் வாதங்களைக் கடந்து செல்லும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என்று நம்புகிறேன்.

By admin