டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து தரப்பு நலன்களையும் காக்கக் கூடிய, பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்கும் என நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முடிவுக்கு ‘பாரதூரமான விளைவுகள்’ இருக்கும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை பிப்ரவரி 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு அரசு ஞாயிறன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எந்த காரணமும் பாகிஸ்தான் அரசால் வழங்கப்படவில்லை.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்தது முதல் இந்த சர்ச்சை தொடங்கியது. வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
வங்கதேசத்தை ஆதரித்த பாகிஸ்தான், “பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாடு இன்னொரு நாட்டில் விளையாட மறுத்தால், வங்கதேசத்துக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா மறுத்தது. அதன் பிறகு இந்தியா ஆடிய போட்டிகள் துபையில் நடத்தப்பட்டன.
ஐசிசி கூறியது என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு ஐசிசி எதிர்வினை ஆற்றியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றும் பாகிஸ்தானின் முடிவு உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பில் தாக்கம் செலுத்தலாம் என்றும் ஐசிசி தெரிவிக்கிறது.
“டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பாக அந்நாட்டு அரசின் முடிவை ஐசிசி கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட கால அட்டவணையில் அனைத்து அணிகளும் தங்களது போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் தேர்ந்தெடுத்த சில ஆட்டங்களில் மட்டும் பங்கேற்பது என்பது விளையாட்டு உணர்வுக்கு ஏற்றதாக இல்லை.” என ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐசிசி தொடர்கள் விளையாட்டு நேர்மை, போட்டி, நிலைத்தன்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையிலானவை. விருப்பத்திற்கு ஏற்ப கலந்து கொள்வது என்பது இந்தத் தொடர்களின் நம்பகத்தன்மை மற்றும் விளையாட்டு உணர்வை பாதிக்கும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கொள்கை விவகாரங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதிக்கும் அதேவேளையில் இந்த முடிவு, பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்றும் ஐசிசி அறிக்கை தெரிவிக்கிறது.
“இந்த முடிவின் தீவிரமான மற்றும் நீண்டகால விளைவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருத்தில் கொள்ள வேண்டும் என ஐசிசி எதிர்பார்க்கிறது. இந்த முடிவு பாகிஸ்தான் உறுப்பினராகவும் பயனாளியாகவும் உள்ள உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பு மீது தாக்கம் செலுத்தக்கூடும்,” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஐசிசி, “ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே ஐசிசியின் முன்னுரிமையாக உள்ளது. இந்த பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்பட உறுப்பினராக உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் உள்ளது. அனைத்து பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எட்டும் என ஐசிசி நம்புகிறது,” என்றும் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதலளித்த சல்மான் அகா, “அது எங்களின் முடிவு இல்லை, இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்கள் அரசாங்கம், எங்களின் தலைவர் என்ன கூறினாலும் நாங்கள் செய்ய வேண்டும். அவர்கள் என்ன கூறினாலும் நாங்கள் அதைச் செய்வோம்.” எனத் தெரிவித்தார்.
ஐசிசி முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
2023-இல் ஏற்பட்ட வருவாய் பகிர்வு ஒப்பந்தத்தின்படி ஐசிசியின் ஒட்டுமொத்த வருவாயில் பாகிஸ்தான் 34.5 மில்லியன் டாலர் பெறும்.
இந்த வருவாய் பகிர்வில் பாகிஸ்தான் இழப்பைச் சந்திக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வசன் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “எனக்கு சிறிய வருத்தம் இருந்தாலும் ஆச்சரியமாகவும் உள்ளது. அவர்களுக்கு என்ன வேண்டும்? லீக் சுற்று போட்டியை தவிர்த்துவிட்டு மீண்டும் இந்தியாவைச் சந்தித்தால் அப்போது பாகிஸ்தான் என்ன செய்யும்? நீங்கள் இந்த முடிவை எடுத்ததால் ஐசிசிக்கு வேறு வாய்ப்பு கொடுக்கவில்லை. இது மிரட்டல் போல இருக்கும் என்பதால் ஐசிசி அவர்களை வெளியேற்ற வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இந்தியாவைப் பாதிக்கக் கூடிய வகையில் பதிலடி கொடுப்பதற்கான அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் ஆராய்ந்து வருவதாக அதுல் வாசன் தெரிவிக்கிறார். நிதி இழப்பு தொடர்பாக பதிலளித்த அவர், “அவர்கள் அழிவை நோக்கிச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை. ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டும் ஒன்று தான் என்கிற தவறான புரிதல் அவர்களிடம் உள்ளது. ஆனால் உண்மை அதுவல்லை. ஐசிசி தலைவராக ஜெய் ஷா இருப்பதால் இரண்டும் ஒன்று என ஆகிவிடாது.” என்றும் குறிப்பிட்டார்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 முறை சந்திதுள்ளன. அதில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 8 முறை சந்தித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வென்றது இல்லை.
புள்ளிகள் எவ்வாறு தரப்படும்?
பட மூலாதாரம், AFP via Getty Images
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. பாகிஸ்தான் விளையாடும் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7-ஆம் தேதி நெதர்லாந்துடன் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாட இருக்கிறது. அதன் பிறகு 10-ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிராகவும் 18-ஆம் தேதி நமீபியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் விளையாடுகிறது.
இந்தியாக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் 2 புள்ளிகளை இழக்க நேரிடும்.
ஐசிசி விதிகளின்படி, இந்த முடிவு பாகிஸ்தானின் நிகர ரன் ரேட்டை பாதிக்கும்.
இந்தியாவின் நிகர ரன் ரேட் பாதிக்கப்படாது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு ஐசிசி விதிகளை இந்தியா பின்பற்றும் என பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. கால அட்டவணையின்படி, செய்தியாளர் சந்திப்பை நடத்தி சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வந்து போட்டி தொடர்பாக ஆட்ட நடுவர் முடிவெடுக்கும் வரை காத்திருப்போம்,” என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.