பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பல்வேறு வகையான உணவு மற்றும் விவசாய பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா நீக்கியுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியில், விவசாய அமைப்புகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கத்தின் ‘முழுமையான சரணடைதல்’ என்று வர்ணித்துள்ளதுடன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ‘உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டு அறிக்கையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயல், ‘முக்கியமான விவசாயம் மற்றும் பால் பண்ணை பொருட்களில்’ இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை கூறுகையில், “விவசாயிகளே எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். மதிப்பிற்குரிய பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு ‘துரோகம்’ இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா இதுகுறித்துக் கூறுகையில், “டிரம்பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியா அமெரிக்காவின் குப்பைக்கிடங்காக மாறியுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி, நாம் 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி, நாம் 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். இதன் பொருள், இந்தியா தனது இறக்குமதியை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதாகும். அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் 40-42 பில்லியன் டாலர் அளவை, 100 பில்லியன் டாலராக நாம் அதிகரிக்க வேண்டியிருக்கும். அதற்காக அமெரிக்காவிலிருந்து என்ன பொருட்களை வாங்குவோம் என்பதுதான் கேள்வி, பியூஷ் கோயலிடம் இதற்கு பதில் இல்லை” என்று கூறினார் .
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வேளாண் அமைச்சர் பதில்
பட மூலாதாரம், Getty Images
பியூஷ் கோயல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி இறைச்சி, பால், சீஸ், எத்தனால் (எரிபொருள்), புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளார்.
வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள பால் மற்றும் விவசாயப் பொருட்களின் நீண்ட பட்டியலை வெளியிட்டார்.
இதுகுறித்து சௌகான் கூறுகையில், “நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்றும், விவசாயிகளின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் மோதி கூறியிருந்தார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இவை இரண்டும் கவனிக்கப்பட்டுள்ளன…” என்று தெரிவித்தார்.
“விவசாயம் மற்றும் விவசாயப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்திய விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு பொருளும் இதில் சேர்க்கப்படவில்லை. அத்தகைய பொருட்கள் அனைத்தும் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
“சோயாபீன், சோளம், அரிசி, கோதுமை, சர்க்கரை, தானியங்கள், கோழி இறைச்சி, பால் பொருட்கள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, சிட்ரஸ் பழங்கள், பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, எண்ணெய் வித்துக்கள், எத்தனால், புகையிலை போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. நமது முக்கிய பயிர்கள், பழங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு அமெரிக்காவிற்கான கதவுகள் திறக்கப்படவில்லை”என்று சௌகான் கூறியுள்ளார்.
“திரவப் பால், பவுடர், கிரீம், தயிர், மோர், வெண்ணெய், நெய், பட்டர் ஆயில், பன்னீர் அல்லது சீஸ் ஆகியவை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படாது. நமது மசாலாப் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. இந்தியாவின் பல விவசாயப் பொருட்கள் பூஜ்ஜிய வரி விகிதத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்திய சந்தையில் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்படவில்லை”என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், ‘மசாலாப் பொருட்கள், தேநீர், காபி, தேங்காய், வெற்றிலை, முந்திரி, அவகேடோ, வாழைப்பழம், மாம்பழம், கிவி, பப்பாளி, அன்னாசி உள்ளிட்ட பல விவசாயப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா 50 சதவீதத்திலிருந்து பூஜ்யமாகக் குறைத்துள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து, வேளாண் நிபுணர் தேவேந்தர் சர்மா கூறுகையில், முதல் முறையாக இந்திய சந்தையில் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இதுவரை கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுகிறார்.
பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அவர், “ஜெகஜீவன் ராம் வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவின் சந்தையைத் திறக்க அமெரிக்க விவசாய லாபியிடமிருந்து அழுத்தம் இருந்தது. பல ஆண்டுகாலமாக , உலக வர்த்தக அமைப்பில் இருந்தும் தனது விவசாயச் சந்தையைத் திறக்க இந்தியா அழுத்தத்திற்கு உள்ளாகி வந்துள்ளது,” என்றார்.
“இந்தியா இதுவரை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்து வந்தது உண்மைதான், ஆனால் இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சந்தையைத் திறந்துவிட்டதாகவும், இது அமெரிக்க கிராமப்புற பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும் அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் ஏன் கூறினார் என்பது புரியவில்லை,” என்கிறார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா அமெரிக்காவிற்கு சில சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்று ஏற்கனவே நம்பப்பட்டாலும், பருத்தி இறக்குமதி மீதான வரியைக் குறைப்பது போன்ற சில நடவடிக்கைகளை இந்திய அரசு கடந்த சில மாதங்களில் எடுத்துள்ளது.
ஆனால் தேவேந்தர் சர்மா கூறுகையில், “ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் கட்டமைப்பின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை வாங்கும். இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்வதே இதற்கு காரணம். இதில் இந்தியாவின் தவறு என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விவசாய வர்த்தகம் 8 பில்லியன் டாலர் மதிப்புடையது. இந்தியா அரிசி, இறால் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா நட்ஸ், ஆப்பிள்கள் மற்றும் பருப்பு வகைகளை அனுப்புகிறது.
அமெரிக்க விவசாயச் செயலாளர் புரூக் ரோலின்ஸ் கூறுகையில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தகப் பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக உள்ளது என்றும், இந்த வர்த்தக ஒப்பந்தம் அந்தப் பற்றாக்குறையைக் குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான தனது 45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி ஆகிய முக்கிய விவசாய ஏற்றுமதிகளுக்கு இந்தியா வழிவகை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேவேந்தர் சர்மா, “இது எப்படி பரஸ்பர வரி விகிதமாகும்? ஒரு பக்கம் இது பூஜ்ஜிய சதவீதமாகவும், மறுபக்கம் 18 சதவீதமாகவும் உள்ளது,” என்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க அரசாங்கம் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு சராசரியாக 64,000 டாலர் (சுமார் ரூ. 60 லட்சம்) மானியம் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு விவசாயிக்கான இந்த மானியம் சுமார் 64 டாலராக மட்டுமே உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
‘பருத்தி ஒரு உதாரணம்’
பட மூலாதாரம், Getty Images
பருத்தியை உதாரணமாகக் காட்டி, இந்திய மற்றும் அமெரிக்க விவசாயிகளுக்கு இடையிலான போட்டி சரிசமமான களமாக இல்லை என்பதை தேவேந்தர் சர்மா விளக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவில் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள் எட்டாயிரம் பேர் உள்ளனர், அதேசமயம் இந்தியாவில் 98 லட்சம் பருத்தி விவசாயிகள் உள்ளனர். அமெரிக்காவில் பருத்தி வயல்களின் சராசரி அளவு 600 ஹெக்டேர். இங்கே அது ஒன்று முதல் மூன்று ஏக்கர் வரை மட்டுமே உள்ளது,” என்கிறார்.
“அமெரிக்கா தனது பருத்தி விவசாயிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ. 90 லட்சம்) மானியம் வழங்குகிறது. இங்கே, பருத்தி விவசாயிகளுக்கு வெறும் 27 டாலர் மட்டுமே மானியமாக கிடைக்கிறது” என்றும்,
“கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்வதற்கான வரியை இந்தியா 11 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைத்தது. இந்த மூன்று மாதங்களில், தேவையை விட அதிகமான 30 லட்சம் பருத்தி பேல்கள் இறக்குமதி செய்யப்பட்டன,” என்றும் குறிப்பிட்டார்.
“அதிகப்படியான சப்ளை காரணமாக, இந்திய பருத்தி விவசாயிகளுக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை குறைவான விலையே கிடைத்தது. இது வெறும் மூன்று மாதங்களில் நடந்த விஷயம். அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைப்புகளின் வாதம்
பட மூலாதாரம், Getty Images
சம்யுக்த கிசான் மோர்ச்சா சனிக்கிழமை ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பின் முக்கிய விதிமுறைகளே “பியூஷ் கோயலின் வாதங்களை மறுப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் பால் பொருட்கள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. இப்போது வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்கள், வர்த்தக அமைச்சர் திட்டமிட்டு பொய் சொல்கிறார் என்பதை மறுக்க முடியாதபடி நிரூபித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள வாதம்:
- சோளம் இனி உலர்த்தப்பட்ட காய்ச்சி வடித்த தானியமாகவும் (DDG), சோளம் சேர்க்கப்பட்ட கால்நடைத் தீவனமாகவும் விற்கப்படும். இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் கால்நடைத் தீவன சந்தையில் ஏகபோக உரிமையைப் பெறும்.
- அமெரிக்கா ஏற்கனவே சோளம், சோயாபீன் மற்றும் பருத்தி போன்ற பயிர்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
- அமெரிக்க கோதுமை ஒரு கிலோ ரூ. 18.50 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது இந்திய சந்தைகளுக்குத் திறந்துவிடப்பட்டால், இந்திய விவசாயிகள் பேரழிவைச் சந்திப்பார்கள்.
- மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மற்றும் விதைகளின் தடையற்ற இறக்குமதியை அனுமதிப்பது இயற்கையான வளத்தை அழிப்பதுடன், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- சோயாபீன் எண்ணெய் இறக்குமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எத்தனால் இறக்குமதியும் தடையின்றி அனுமதிக்கப்படும்.
- அமெரிக்கா 18% வரி விதிப்பதும், இந்தியா பூஜ்ஜியத்தை விதிப்பதும் சுதந்திர வர்த்தகம் அல்ல. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீதான வரிகள் பூஜ்ஜியத்திலிருந்து 3% ஆகவும், பின்னர் 18% ஆகவும் மாற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 30% முதல் 150% வரை இருந்த அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான இந்தியாவின் வரிகள் இப்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
- இது இந்திய விவசாய சந்தையை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் வலையில் சிக்க வைக்கும்.
- இந்தியா-அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திடக் கூடாது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
- பிப்ரவரி 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தத்தில் இணையுமாறு இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு