பட மூலாதாரம், JIM WATSON/AFP via Getty Images
பிப்ரவரி 2, திங்கட்கிழமை அன்று இந்தியாவும் அமெரிக்காவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் ஏதும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.
இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் முடிவு செய்யப்பட்டு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட பல கருத்துக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோதியோ அல்லது இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்தோ தெளிவான பதில் எதுவும் இல்லை.
இது, இந்த ஒப்பந்தம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
1. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காதா?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்க எண்ணெயை அதிக அளவில் வாங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தியா வெனிசுவேலாவிலிருந்தும் எண்ணெய் வாங்கலாம் என்று அவர் கூறினார்.
இந்திய தரப்பு டிரம்பின் கருத்துக்களை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கா இந்த ஒப்பந்தம் குறித்து நிறைய பேசியுள்ள நிலையில், இந்திய அரசு மௌனம் காத்து வருவதாக பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிஸ்வஜித் தார் கூறுகிறார்.
“நமது எரிசக்தி பாதுகாப்பை நாமே தீர்மானிப்போம் என்பதுதான் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருந்தது. மேலும், ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் பெற முடிந்தால், அங்கிருந்து வாங்குவோம் என்பதை இந்தியா உணர்த்தியது. தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் கூறியிருப்பது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கத்தின் முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணானது. இதன் பொருள், அமெரிக்கா இப்போது நமக்கு கட்டளையிடுகிறது என்பதே. என் கருத்துப்படி, இது ஒரு மிகப்பெரிய சமரசமாகும்.” என்கிறார் பிஸ்வஜித் தார்
“டிரம்பின் கருத்துக்கு இந்தியத் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்பு எதுவும் வரவில்லை. டிரம்ப் கூறியது சரியல்ல என்றும், இந்தியாவின் கோணம் வேறு என்றும் இந்திய அரசு கூறும் வரை டிரம்பின் கருத்து உண்மையானதாக கருதப்படும்”
பிரான்சுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிபுணருமான மோகன் குமார், “ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளிவரவில்லை. எனவே, தற்போது இதைப் பற்றி கருத்து கூறுவது கடினம். ஆவணங்களைப் பார்க்காமல் என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏதேனும் ஒரு முறையான ஆவணம் கண்டிப்பாக இருக்கும், அதன் அடிப்படையில் தான் மேற்கொண்டு பேச முடியும். எனக்கு தெரிந்தவரை, இந்தியா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைத்துவிட்டது.” என்றார்
2. இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்குமா?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிலிருந்து இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியா ஓராண்டிற்கான மொத்த அமெரிக்க இறக்குமதி தற்போது 50 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது. இப்படியிருக்க, இந்த இலக்கை எட்டுவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம். அப்படியென்றால் இந்தக் கூற்று அடிப்படையற்றதா?
விவசாயப் பொருட்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார்.
“நமது விவசாயிகளின் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்று ஆகஸ்ட் 15 அன்று மோதி தெளிவாகக் கூறியிருந்தார்.” என்கிறார் அவர்
“இது நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பற்றியதுமாகும். 1960களில், நாம் அமெரிக்க இறக்குமதியைச் சார்ந்திருந்ததால் அவர்கள் நமக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள் அதன் பிறகு, இன்று நாம் சுயசார்பு கொண்டவர்கள் என்று பெருமையுடன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறின. இப்போது, அந்த சுயசார்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிகிறது.”
அமெரிக்காவின் வேளாண் செயலாளர் கூறியதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பிஸ்வஜித் தார்
“நாங்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வோம், எங்கள் (அமெரிக்க) விவசாயிகளுக்கு இதனால் பெரிய லாபம் கிடைக்கப்போகிறது என்று அவர் கூறியுள்ளார். அவர்களின் தரப்பிலிருந்து இது அதிகாரப்பூர்வமாக வருகிறது. விவசாயம் மற்றும் எரிசக்தி ஆகிய இரண்டு அடிப்படை விஷயங்களில் நாம் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டால் அது கவலைக்குரிய விஷயமாக இருக்கும்.”
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் “இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் போன்ற முக்கியமான துறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார். இறுதி உடன்பாடு எட்டப்பட்டவுடன் முழு விவரங்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய இரண்டுமே டிரம்பிற்கு மிகவும் முக்கியமான விஷயங்கள் என்கிறார் பிஸ்வஜித் தார்.
“ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி, அவர்களின் போருக்கு உதவக்கூடாது என்று அமெரிக்கா இந்தியாவிடம் கூறி வந்தது. அரசியல் ரீதியாக டிரம்பிற்கு இது மிக முக்கியமான விஷயமாக இருந்தது. இரண்டாவது விவசாயம். 2024 ஆம் ஆண்டில், விவசாயத் துறையினரும் டிரம்பிற்கு பெருமளவில் வாக்களித்தனர். அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த மாகாணங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் டிரம்பிற்கு கிடைத்தன. இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வேன் என்று டிரம்ப் கூறினார்” என்கிறார் பிஸ்வஜித் தார்
“எனவே, அங்கேயும் அவருக்கு அரசியல் அழுத்தங்கள் உள்ளது. விவசாயம் தொடர்பான அவரது கூற்றுக்கள் நடக்காவிட்டால், அதன் அரசியல் எதிரொலி அவருக்குச் சாதகமாக இருக்காது. அவர் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். அதனால்தான் சொல்கிறேன், இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் என்று அவர் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவர் சொன்னது தவறானது என்று நிரூபிக்கப்பட்டால், அதன் அரசியல் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.”
பட மூலாதாரம், Getty Images
3. அமெரிக்கா மீதான வரி மற்றும் வரி தடைகளையும் இந்தியா நீக்குமா?
டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’சமூக வலைதளப் பதிவில், அமெரிக்கப் பொருட்கள் மீதான அனைத்து வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்று கூறினார்.
ஆனால் இந்தியா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் இதை பற்றி குறிப்பிடவில்லை.
வேளாண்மை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தொடர்பாக, வெளிநாட்டு இறக்குமதிகளில் இந்தியா பாரம்பரியமாகவே எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.இந்த துறைகளில் சந்தைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கருதப்படுகின்றன.
கடந்த காலங்களில், வளர்ந்த நாடுகள் அதிக வரிகளை செலுத்த வேண்டும், வளரும் நாடுகள் குறைந்த வரிகளை செலுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார்.
“இப்போது இந்த நிலைமை முற்றிலுமாக தலைகீழாக மாறியுள்ளது. டிரம்ப் வெளியிட்ட கருத்தின்படி, அமெரிக்கா பூஜ்ஜிய சதவீத வரியை அதாவது தனக்கு வரியே விதிக்கக்கூடாது என எதிர்பார்க்கிறது.”
“டிரம்ப் வருவதற்கு முன்பு இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி சராசரியாக 2.5 சதவீதத்தில் இருந்து, இப்போது 18 சதவீதமாக உள்ளது. அதே சமயம் அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரி பூஜ்ஜியமானால், அது மிகப்பெரிய தலைகீழ் மாற்றமாகும். அதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.” என்கிறார் பிஸ்வஜித் தார்
மோகன் குமார் கூறுகையில், “இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, அவர் எந்தெந்தப் பொருட்களைப் பற்றிப் பேசுகிறார்? அதில் சேவைகள் (Services) சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக வரியை பூஜ்ஜியமாகக் குறைப்பது என்பதன் பொருள் என்ன? இதை ஆறு மாதங்களில் செய்ய வேண்டுமா, ஓர் ஆண்டிலா, ஐந்து அல்லது பத்து ஆண்டுகளிலா? இதற்கு அந்த ஒப்பந்தத்தின் நுணுக்கமான விவரங்களை நாம் கவனிக்க வேண்டும்.”
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும், “இது மிகவும் முக்கியமானது, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.” என்று மோகன் குமார் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு