(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.
ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.
அந்த மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
பட மூலாதாரம், Getty Images
நீதிபதிகள் கூறியது என்ன?
அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
‘வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு அல்ல’
பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசி நிருபர் அந்தோணி ஸுர்ச்சர் அலசல்
வரி விதிக்கும் தனது திறனைக் கட்டுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு, ஒரு “பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்புப் பேரழிவு” மற்றும் “மோசமான” விளைவுகளை ஏற்படுத்தும் என்று டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக எச்சரித்து வந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் கொண்ட பெரும்பான்மை அமர்வு இன்று அமெரிக்க அதிபருக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, அவர் முன்வைத்த கவலைகளைப் பற்றிப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
அதிபருக்கு அல்ல, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே வரிகளை விதிக்கும் அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அதிபர் தனது சட்டப்பூர்வ தற்காப்பில் குறிப்பிட்ட 1977-ஆம் ஆண்டின் அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தில் (Emergency Economic Powers Act of 1977), டிரம்பிற்கு இத்தகைய விரிவான அதிகாரங்களை வழங்கும் அம்சம் ஏதுமில்லை என்றும் அவர்கள் கூறினர்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இந்த அதிபரின் விரிவான நிர்வாக அதிகாரப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட ஒரு அரிய தடையாகும்.
விரைவுபடுத்தப்பட்ட அடிப்படையில் பரிசீலிக்கப்பட்ட இந்த வழக்கு, அதிபர் அதிகாரத்தின் இத்தகைய விரிவான பயன்பாட்டின் ஒரு பாதையை அடைக்கிறது.
பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் ஃபெடரல் ரிசர்வ் கவர்னரை பதவி நீக்கம் செய்ய முயன்றது போன்ற சர்ச்சைக்குரிய நிர்வாக அதிகாரப் பயன்பாடு தொடர்பான பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வரும் மாதங்களில் டிரம்பிற்கு இது மட்டுமே பின்னடைவாக இருக்காது.
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரி
ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கும் வரிகளை அறிவித்தார். இதில் 10 முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டன.
இந்த வரிகள் மூலம், அரசுக்கு வரும் வரிவசூல் அதிகரிக்கும், அமெரிக்கர்கள் அதிகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார்கள், அமெரிக்காவில் முதலீடு அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார்.
ஆனால் விமர்சகர்கள், இதனால் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும், உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினர்.
பிற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க தான் விரும்புதாக டிரம்ப் கூறினார்.
சில சந்தர்ப்பங்களில், டிரம்ப் சுங்க வரிகளை பிற நாடுகள் மீது அழுத்தம் கொடுக்கவும் பயன்படுத்தினார்.
உதாரணமாக சீனா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு எதிராக வரிகளை அறிவிக்கும் போது, அந்த நாடுகள் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ‘பென்டனில்’ போதைப்பொருளை அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்க அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது இந்தியாவுக்கு 25% வரிகளை டிரம்ப் விதித்தார். பின்னர் ரஷ்ய கச்சா எண்ணொயை இந்தியா வாங்குவதாக கூறி வரிகளை 50% ஆக உயர்த்தினார். இந்தநிலையில் சமீபத்தில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீதான வரிகள் 18% ஆகக் குறைக்கப்பட்டது.
டிரம்பால் அறிவிக்கப்பட்ட பல வரிகள் பின்னர் திருத்தப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன.