பட மூலாதாரம், Getty Images
இந்தியா ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெனிசுவேலா தற்போது மறைமுகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் அதன் எண்ணெய் துறையில் முதலீடு செய்து வருகின்றன.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தினால், வெனிசுவேலாவால் அதை ஈடுசெய்ய முடியுமா?
ஆற்றல் நுண்ணறிவு அறிக்கை, வெனிசுவேலாவால் ஓரளவு மட்டுமே உதவ முடியும் என்று தெரிவிக்கிறது.
ஆற்றல் நுண்ணறிவு அறிக்கையின்படி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் தொடர்ந்து சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மற்ற இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, வெனிசுவேலா எண்ணெய் என்பது ஒரு கடினமான மற்றும் ஆபத்தான செயல்பாடாகவே உள்ளது.
“வெனிசுவேலா எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதால், அரசுக்கு சொந்தமான பெட்ரோலியோஸ் டி வெனிசுவேலா, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு பேரலுக்கு 13 முதல் 15 டாலர்கள் வரை தள்ளுபடி விலையில் வழங்குகிறது” என ஆற்றல் நுண்ணறிவு அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கத் தடைகள் விநியோகத்தை சீர்குலைப்பதற்கு முன்பு, 2015-ஆம் ஆண்டில் வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 441000 பேரல்களை எட்டியதாக ஆற்றல் நுண்ணறிவு தெரிவிக்கிறது.
இதில் சுமார் முக்கால்வாசி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சென்றது, மீதமுள்ளவை ரஷ்யாவின் ரோஸ்நேஃப்ட் நிறுவனத்தால் இயக்கப்படும் நயாரா எனர்ஜியின் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்றன. அந்த நிறுவனம் இப்போது தடைகளின் கீழ் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா எந்த அளவுக்குத் திறன் மிக்கது?
எண்ணெய் விநியோகத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவிற்கு மாற்றாக வெனிசுவேலாவால் இருக்க முடியாது என்று எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா கூறுகிறார்.
இதற்கான காரணத்தை பிபிசியிடம் விளக்கிய தனேஜா, “இந்தியா ஒவ்வொரு நாளும் 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. வெனிசுவேலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தி தற்போது ஒரு நாளைக்கு 800000 பேரல்களாக மட்டுமே உள்ளது. அவர்களிடம் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு இருந்தாலும், அவர்களால் சுமார் 800000 பேரல்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. வெனிசுவேலா இப்போது தனது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. விலை தான் இங்கு பிரச்னையாக உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வெனிசுவேலா ஒரு நாளைக்கு 4 மில்லியன் பேரல் எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது. ஆனால் தற்போது அவர்களிடம் அந்த அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த நிலையை எட்டுவதற்கு முதலீடும் நீண்ட காலமும் (பல ஆண்டுகள்) தேவைப்படும். வெனிசுவேலா ஒரு நாளைக்கு 3 முதல் 4 மில்லியன் பேரல் எண்ணெயை உற்பத்தி செய்ய குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என்று நான் நம்புகிறேன். டிரம்ப் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது, அவருக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளன” என்றார்.
“வெனிசுவேலா எண்ணெய் ரஷ்ய எண்ணெயைப் போன்ற தரத்தைக் கொண்டுள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கனவே அதை சுத்திகரிக்கத் தயாராக உள்ளன,” என்று டார்டாய்ஸ் கேபிட்டல் எனும் முதலீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராபர்ட் தும்மல் அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என்-னிடம் தெரிவித்தார்.
“வெனிசுவேலாவின் எண்ணெய் அமைப்பு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது.1999ஆம் ஆண்டு அந்நாட்டின் சோசலிஸ்ட் அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன், ஒரு நாளைக்கு 3 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்ட அளவுக்கு மீண்டும் திரும்ப, கிட்டத்தட்ட பத்தாண்டு கால உழைப்பும், பல பில்லியன் டாலர் முதலீடும் தேவைப்படும்” என்று சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எண்ணெய் தரம்
வெனிசுவேலா எண்ணெய் மிகவும் கனமானது என்றும், அதிலிருந்து டீசலை மிக எளிதாகத் தயாரிக்க முடியும் என்றும் நரேந்திர தனேஜா கூறுகிறார்.
ரஷ்ய எண்ணெய்க்கு பதிலாக வெனிசுவேலா அல்லது அமெரிக்க எண்ணெயை பயன்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். ஆனால் காலப்போக்கில், இது ரஷ்யப் பொருளாதாரத்திற்கு கூடுதல் சவால்களை உருவாக்கக்கூடும்,” என்று அமெரிக்க வங்கி சொத்து மேலாண்மையின் மூத்த உத்தி முதலீட்டு இயக்குனர் ராப் ஹோவர்த் சிஎன்என்-னிடம் தெரிவித்தார்.
டெல்லியைச் சேர்ந்த உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, “இந்தியா தனது மொத்த எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. வெனிசுவேலா அந்த அளவு எண்ணெயைக் கூட உற்பத்தி செய்வதில்லை. டிரம்ப் இந்தியாவை மட்டுமல்ல, ஐரோப்பாவையும் சாதிக்க முடியாத பல வாக்குறுதிகளை அளிக்க வைக்கிறார். டிரம்ப் விரும்பும் மாற்றங்களுக்கு இப்போதைய அமைப்பு தயாராக இல்லை” என்றார்.
நிகழ்நேர எரிசக்தி தரவுகளை வழங்கும் கெப்லர் நிறுவனத்தின்படி, ஜனவரி 13 நிலவரப்படி இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி சராசரியாக ஒரு நாளைக்கு 1.1 மில்லியன் பேரல்களாக இருந்தது. இது 2025-இல் ஒரு நாளைக்கு 1.73 மில்லியன் பேரல்களாக இருந்தது.
“ரிலையன்ஸ் நிறுவனம் ஆசியாவிலேயே மிகவும் மேம்பட்ட எண்ணெய் கலப்பு கட்டமைப்புகளில் ஒன்றை கொண்டுள்ளது,” என்று பாரத் பெட்ரோலியத்தின் முன்னாள் சுத்திகரிப்பு இயக்குனர் மற்றும் எண்ணெய் துறை ஆலோசகருமான ஆர். ராமச்சந்திரன் ஆற்றல் நுண்ணறிவிடம் தெரிவித்தார்.
“வெனிசுவேலா எண்ணெயை வாங்குவதற்கான ஒரே பெரிய சாத்தியமான நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது.”
பட மூலாதாரம், Getty Images
விலை எப்படி இருக்கும்?
“அமெரிக்கத் தடைகளுக்கு முன்பு, இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 10 சதவீதத்தை வெனிசுவேலாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. வெனிசுவேலா எண்ணெய் மிகவும் கனமானது. இதை உலகின் எல்லா இடங்களிலும் சுத்திகரிக்க முடியாது. இதைச் சுத்திகரிப்பதற்கான இயந்திரங்கள் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. ஆனால் இது நல்ல டீசலை உற்பத்தி செய்கிறது.” என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.
வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது செலவு மிகுந்ததாக இருக்குமா?
இதற்குப் பதிலளித்த தனேஜா, “எண்ணெயை எவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவு அதிகமாகக் கப்பல் போக்குவரத்துச் செலவு இருக்கும். கப்பல் பயண நேரம் அதிகரிக்கும் போது, காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கிறது. காப்பீடு என்பது ஒரு நாளைக்கான கணக்காகும். வெனிசுவேலாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு வரும் ஒரு கப்பல் பொதுவாக 22 முதல் 27 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது, ஏனெனில் அது ஆப்பிரிக்காவைச் சுற்றி வர வேண்டும். அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வந்தால், அது இன்னும் கூடுதலான நேரத்தை எடுக்கும். ரஷ்யாவிலிருந்து வருவதற்கு 26 நாட்கள் ஆகின்றன.” என்றார்.
இந்தியாவிற்கு அருகிலுள்ள வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது எளிதானது. இந்த நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வந்து சேரும். இதன் விளைவாக, கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்பீட்டுச் செலவுகள் குறைவாக இருக்கும் என்றார் அவர்
தொடர்ந்து பேசிய அவர், “வெனிசுவேலாவை விட ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெயைக் கொண்டு வர இரண்டு முதல் மூன்று நாட்கள் கூடுதலாக ஆகும். வெனிசுவேலாவிலிருந்து வரும் கப்பல்கள் அரபிக்கடல் வழியாக, தென்னாப்பிரிக்காவின் கீழ் பயணித்து குஜராத்தை அடைகின்றன. சூயஸ் மேக்ஸ் எண்ணெய் கப்பல்கள் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இருப்பினும், விஎல்சிசி கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல முடியாது, அவை ஆப்பிரிக்காவைச் சுற்றித்தான் வர வேண்டும்” என்றார்.
“போக்குவரத்து நேரம் மற்றும் செலவை வைத்து பார்த்தால் வெனிசுவேலாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இந்தியாவின் எண்ணெய் நுகர்வில் டீசல் 45 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. எனவே, வெனிசுவேலா எண்ணெய் இந்தியாவிற்கு மோசமானது அல்ல. இந்தியா தற்போது 41 நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கிறது.”
பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவின் நிதி நிலைமை
ஆற்றல் நுண்ணறிவின் மற்றொரு அறிக்கை, வெனிசுவேலா வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும், அதன் எண்ணெய் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது எளிதல்ல என்றும் கூறுகிறது.
அந்த அறிக்கையின்படி, வெனிசுவேலாவின் தற்போதைய வெளிநாட்டு கடன் 150 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது அந்நாட்டின் மோசமான பொருளாதாரத்தின் அளவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
நார்வேயைத் தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ரிஸ்டாட் எனர்ஜியின் கூற்றுப்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 3 மில்லியன் பேரல்களாக மீட்டெடுக்க இப்போதிலிருந்து 2040-ஆம் ஆண்டிற்குள் வெனிசுவேலாவிற்கு 183 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு