பட மூலாதாரம், MEA
இந்தியா- பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து வருவது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று கூறிய மிஸ்ரி, “பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால், பதிலடி தரப்படும்” என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பதற்றத்தைக் குறைக்குமாறு ஐ.நாவும் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தற்போது வரை 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான நிகழ்வுகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்குவதற்காக, இந்திய அரசு தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
‘பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைக்கிறது’
பட மூலாதாரம், MEA
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் இன்று நடத்திய கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வ்யோமிகா, இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலிருந்த கருத்துகளையே மீண்டும் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி, “தற்போதைய சூழ்நிலையைச் சுற்றியுள்ள தவறான தகவல்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை, ஆனால் ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் தான் பதற்றம் அதிகரித்ததன் தொடக்கம் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்” என்று கூறினார்.
நேற்றைய வான்வழித் தாக்குதல், அந்த கொடிய பஹல்காம் தாக்குதலுக்கான ஒரு பதில் என்றும் அவர் கூறினார்.
மேலும், “பாகிஸ்தானின் ராணுவ தளங்களை நாங்கள் குறிவைக்கவில்லை. நாங்கள் எந்த மதவழிபாட்டு தலங்களையும் குறிவைக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைக்கிறது. அதன் தாக்குதலில், அப்பாவி இந்தியர்கள் 16 பேர் உயிரிழந்தனர்” என்று கூறினார்.
இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று கூறிய மிஸ்ரி, “பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால், பதிலடி தரப்படும்” என்று கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், “இந்திய வான்வழித் தாக்குதல்களால் நீலம்-ஜீலம் அணை சேதமடைந்ததாக பாகிஸ்தான் கூறுவது, அப்பட்டமான பொய், ‘பயங்கரவாத உள்கட்டமைப்புகள்’ மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது” என்று மிஸ்ரி குறிப்பிட்டார்.
“தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத கட்டமைப்புகளுடன் தொடர்புடையவை” என அவர் வலியுறுத்தினார்.
‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க மத வழிபாட்டு தலங்களை பயன்படுத்துகிறது’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது நாட்டில் எந்தவொரு ‘பயங்கரவாத உள்கட்டமைப்பும்’ இல்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், சீக்கிய சமூகத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக மிஸ்ரி குற்றம் சாட்டினார்.
பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு குருத்வாரா மீது பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்ததாக அவர் கூறினார்.
மிஸ்ரியின் இந்த குறிப்பிட்ட கருத்துக்கு பாகிஸ்தான் இன்னும் பதில் அளிக்கவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் விமானங்கள் ரத்து
பட மூலாதாரம், Getty Images
விமான நிறுவனங்களின் பயண ஆலோசகர்கள் மற்றும் ஊடகத் தகவல்களின்படி, வட இந்தியாவில் இருக்கும் கிட்டத்தட்ட 20 விமான நிலையங்கள், மே 10ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையமோ, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகமோ இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
புதன்கிழமை, பாகிஸ்தான் மீது இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல விமான நிலையங்கள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை வழங்கின.
நானூறுக்கும் அதிகமான விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. விமான நிலையங்களில் இருந்து பயணிகள் திருப்பி அனுப்பப்படுவதை தொலைக்காட்சி செய்திகள் காட்டின.
பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் இருந்து ‘நிர்வாக காரணங்களுக்காக’ விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்த நாட்டின் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மசாலாவில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தர்மசாலாவில் வரும் ஞாயிறு நடப்பதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்-க்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் நடக்க இருக்கும் அந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் அகமதாபாத்தில் நடைபெறும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அனில் படேல், உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மே 10 வரை மூடப்பட்டிருக்கும் விமான நிலையங்களுள் தர்மசாலாவும் ஒன்று என்பதால், இந்தப் போட்டி நடப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
பாகிஸ்தானின் பாதிப்பை விளக்கும் புதிய செயற்கைக்கோள் படங்கள்
பட மூலாதாரம், Maxar Technologies
புதன்கிழமை மாலை, மாக்சர் டெக்னாலஜிஸ் எனும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் புதிய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது. அதில் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட பாகிஸ்தானின் இரண்டு முக்கிய இடங்களில் ஏற்பட்ட சேதத்தைக் காண முடிகிறது.
தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் மற்றும் நங்கல் சஹ்தான் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டுகின்றன.
பஹவல்பூரில், நகரின் மேற்கு புறநகரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியின் கூரையின் ஐந்து குவிமாடங்களில் மூன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 165 மீ தொலைவில், அதன் அருகிலுள்ள கட்டடங்களும் தாக்கத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன.
நங்கல் சஹ்தான் என்ற சிறிய நகரத்தில், சுமார் 150 மீட்டர் இடைவெளியில் இருக்கும் இரண்டு கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக படங்கள் காட்டுகின்றன. ஒன்று பகுதியளவு சேதமடைந்ததாகவும், மற்றொன்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பட மூலாதாரம், Maxar Technologies
பாகிஸ்தான் தாக்குதலில் 16 பொதுமக்கள் உயிரிழப்பு – இந்தியா தகவல்
புதன்கிழமை காலையில் இருந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 15-ல் இருந்து 16 ஆக உயர்ந்தது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் முன்னறிவிப்பு இல்லாமல் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியா ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் குப்வாரா, பாராமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் பீரங்கிகள் மற்றும் அதிக திறன் கொண்ட ராணுவ ஆயுதங்கள் மூலம் நடத்தி வருகிற தாக்குதல்களை பதில் நடவடிக்கைகளை எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம் – ஜெய்சங்கர்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுடனான ‘நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்’ இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் ‘மிகவும் உறுதியான பதிலடி’ வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் இந்தியாவிற்கு வந்திருக்கும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன.
“ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்,” என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
“ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்” என்று இரானிய வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டிரோன்களை அழித்ததாகக் கூறும் பாகிஸ்தான்
நேற்றிரவு வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 25 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்தார்.
இந்தக் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
லாகூர், குஜ்ரன்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹவல்பூர், மினாவலி, கராச்சி ஆகிய பகுதிகளில் இந்த டிரோன்களை அழித்ததாக லெஃப்டினெண்ட் ஜெனரல் சௌத்ரி கூறியுள்ளார்.
இவற்றில் ஒரு டிரோன் கீழே விழுந்ததில் சிந்த் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
லாகூரில் உள்ள ஒரு ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒரு கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தநிலையில், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை குறி வைத்து அழித்ததாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
“லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது,” என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா எவ்வாறு அமைப்புகளை குறிவைத்தது என்பது பற்றிய விவரங்களை அறிக்கையில் அளிக்கவில்லை.
இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை
ஷார்ட் வீடியோ
உலக நாடுகளின் கோரிக்கை
இரு தரப்பிலும் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் அமைதிக்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிபிசியிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
“இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றோம். நீண்ட கால அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கான தீர்வை நோக்கி இரு நாடுகளும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்,” என்று செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
முன்னதாக, வெளியுறவுத்துறையில் செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் டாம் பேட்மன், “இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையிலான அமெரிக்காவின் கோரிக்கையில் ஒரு தெளிவு இல்லாதது, அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் சமீப ஆண்டுகளில் வலுவடைந்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெளிவாகிறது,” என்று தெரிவித்தார்.
நேற்றிரவு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மோதல் விரைவாக முடிவுக்கு வந்து, அமைதியான தீர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு விமான நிலையங்களில் விமான சேவையை நிறுத்திய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் “செயல்பாட்டுக் காரணங்களுக்காக” வியாழக்கிழமை காலை அனைத்து விமான சேவைகளையும் பாகிஸ்தான் இடைநிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பல விமான நிலையங்களை மூடிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், பாகிஸ்தான் வான்வெளி திறந்துள்ளதாகவும், “சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான சூழல்” இருப்பதாகவும் அந்நாட்டின் விமான நிலைய ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் உரை
பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கி இந்தியா தவறு இழைத்துவிட்டதாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார். “இந்தத் தாக்குதல்களுக்கு அவர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் பின்வாங்கிவிடும் என இந்தியா நினைத்து இருந்ததாகவும், ஆனால் “தங்கள் நாட்டுக்காகப் போராடத் தெரிந்த தேசம் இது என்பதை இந்தியா மறந்துவிட்டது” என்றும் அந்த உரையில் அவர் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவின் தாக்குதலை எதிர்த்ததாகக் கூறினார். அப்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தக் கூற்றை இந்தியா உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவின் தாக்குதலுக்கு “எங்கள் தரப்பிலான பதிலடி அது” எனக் கூறிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், இந்தியா நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்படப் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் தீவிரவாத இலக்குகளை மட்டுமே குறி வைத்ததாகவும் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் இந்தியா கூறுகிறது.
“உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் நாங்கள் பழி தீர்ப்போம் என்று சத்தியம் செய்கிறேன்,” என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Gurdev Singh
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாபின் சில கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தங்கள் உடைமைகளை டிராக்டர் ட்ராலிகளில் ஏற்றிக்கொண்டு, எல்லையில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் அல்லது தங்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
எல்லையிலிருந்து வெளியேறும் சில குடும்பங்களிடம் பிபிசி பேசியபோது, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க குடும்பத்தில் ஓரிரு பேர் வீட்டில் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தானுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் ஹுசைனிவாலா எல்லையில் சுமார் 12-14 கிராமங்கள் உள்ளன.
ஜுகே ஹஸாரா சிங் கிராமத்தை சேர்ந்த ஜீத் சிங் கூறுகையில், “இங்கு பயம் நிறைந்த சூழல் உள்ளது. இங்கு உள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்” என்றார்.
வயதான பெண்மணியான பஞ்சோ பாய் கூறுகையில், “நாங்கள் எங்கள் தானியங்களை எடுத்துக்கொண்டு மோகா மாவட்டத்துக்குச் செல்கிறோம். இங்கு போர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. பாகிஸ்தான் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள
இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து மலாலா கவலை
பட மூலாதாரம், Getty Images
பதற்றங்களைக் குறைக்கவும், மக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“வெறுப்பும் வன்முறையும்தான் நமது பொதுவான எதிரிகள்” என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
“இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி மக்களின் அன்புக்கு உரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆபத்தான நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எங்களுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சிறுமிகளையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச சமூகம் இப்போது ராஜ்ஜீய பேச்சுவார்த்தையை வளர்ப்பதில் செயல்பட வேண்டும்,” என்று மலாலா கூறியுள்ளார்.
“நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான ஒரே பாதை அமைதிதான்” என்று அவர் எழுதினார்.
கடந்த 2012ஆம் ஆண்டில், பெண் கல்வியை ஊக்குவித்து வந்த மலாலா, தாலிபன் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டார். மலாலா இப்போது ஒரு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலராகத் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 2014ஆம் ஆண்டில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்தியா, சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. மேலும் பாக்லிஹார் அணை மதகுகளை மூடியது இந்தியா.
பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, தடை விதித்தது. இந்நிலையில், நேற்று (மே 7) அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டது.
அதுகுறித்த அறிக்கையில், “பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட, நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதில் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இரான் உள்ளிட்ட உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் காட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு