பட மூலாதாரம், Getty Images
மே 7-ஆம் தேதி காலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 ‘தீவிரவாத கட்டமைப்புகளை’ தாக்கியதாக இந்தியா அறிவித்து இன்றோடு (ஜூன் 7) ஒரு மாதம் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதன் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக பாகிஸ்தானை இந்தியா நீண்ட காலமாக குற்றம் சுமத்தி வருகிறது. புல்வாமா (2019), மும்பை (2008) போன்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டுகிறது இந்தியா.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும் இத்தகைய குற்றச்சாட்டுகளை, அதாவது, தாக்குதல் நடத்தியவர்களை ஆதரிப்பதாக, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகிறது இந்தியா.
இந்த தாக்குதல்களில் தங்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை என்று கூறி இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சுதந்திரமாக விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மே மாதம் இந்தியா நடத்திய தாக்குதலில் மசூதிகள் மற்றும் மதம் தொடர்பான இடங்களே பாதிப்பை சந்தித்தன என்றும் அதில் பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. இந்த கூற்றை இந்தியா இன்னும் உறுதி செய்யவில்லை.
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தியாவின் தாக்குதல் தொடர்பான அறிவிப்பு வெளியான மே 7 முதல் அடுத்த நான்கு நாட்கள் (மே 10 வரை) அணு ஆயுதங்களைக் கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல்கள் வலுப்பெற்றன. 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு இத்தகைய சூழலை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் பலர் கூறினார்கள்.
இரண்டு நாடுகளும், ஒருவரை ஒருவர் தாக்குவதற்காக ட்ரோன்களை முதன்முறையாக பயன்படுத்தின.
மே மாதம் 10-ஆம் தேதி அன்று திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, போர் விமானங்கள், ஏவுகணைகள், மலையளவு குவிந்த தவறான செய்திகள், போலி செய்திகளால் இருநாடுகளுக்கும் இடையே நிலைமை பதற்றமடையத் தொடங்கியது.
இந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு இரண்டு நாடுகளும் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று கூறிக் கொள்கின்றனர். அதே நேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி வாழும் பல குடும்பங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
சிலர் அவர்களின் உற்றார், உறவினர்களை இழந்தனர். சிலரோ தாக்குதலின் போது தங்களின் சொந்த வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இராணுவ ஆதாயங்களுக்கான போட்டி
ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா “பதில் தாக்குதல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைகள் வலுத்தன. அப்போதே, இந்தியாவின் உடனடி பதில் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் மற்றும் இஸ்லாமாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும், பிராந்திய படிப்புகளுக்கான மையத்தின் தலைவருமான ஜோஹர் சலீம் இது குறித்து பேசிய போது, “ஆரம்ப கட்டத்தில் இந்தியா பின்பற்றிய ஆத்திரமூட்டும் போக்கானது,” பாகிஸ்தானை இக்கட்டான நிலைக்கு தள்ளியது என்று கூறுகிறார்.
இந்தியாவின் செயல்களுக்கு “எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, முன்னெச்சரிக்கையான ராஜாங்க நடவடிக்கைகளை தேர்வு செய்தது பாகிஸ்தானின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் என்பது அப்போது தெளிவானது,” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தானின் முயற்சி இந்தியாவை தாக்குதல் நடத்துவதில் இருந்து தடுத்து நிறுத்தவில்லை. “நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்” கொல்லப்பட்டதாகவும், அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை தாக்கியதாகவும் இந்தியா கூறுகிறது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவித்தது. சில மணி நேரத்தில், 3 ரஃபேல் உட்பட இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் கூறியது.
இதுகுறித்து இந்தியா உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்தியாவின் தலைமை தளபதி அனில் சௌஹானின் சமீபத்திய கருத்து, இந்த தாக்குதலின் போது இந்தியா போர் விமானங்களை இழந்திருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர்.
“போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைக் காட்டிலும் எதற்காக சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதே முக்கியமானது,” என்று அவர் ப்ளூம்பர்க் டிவிக்கு பேட்டியளித்த போது அவர் கூறினார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பலமாக நடத்தியதாகக் கூறும் பாகிஸ்தான், தாக்குதல் நடைபெற்ற இடங்களில் ஒன்றாக பஹவல்பூரையும் பட்டியலில் சேர்த்துள்ளது.
“துல்லியமாக இலக்கை குறி வைத்து அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, எல்லை தாண்டாமலே, இந்தியாவால் பாகிஸ்தானில் உள்ள ‘தீவிரவாத உள்கட்டமைப்புகளை’ அழிக்க முடிந்தது,” என்று இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு நிபுணருமான கமோதரே அனில் ஜெய் சிங் கூறுகிறார்.
9 தீவிரவாத முகாம்களை தாக்கி, முக்கிய தீவிரவாத தளபதிகளை கொன்றுவிட்டதாக கூறும் இந்தியா, பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு அமைப்பில் இருந்த பலவீனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாகக் கூறுகிறது.
இந்தியாவின் இந்த கூற்றை பாகிஸ்தான் நிராகரிக்கும் வேளையில், இஸ்லமாபாதை மையமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்புத்துறை நிபுணரான அமீர் ராணா, “தன்னைவிட அதிக பலம் கொண்ட எதிரி நாட்டின் தாக்குதலை எதிர்கொண்டு, பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்த இயலும் என்பது பாகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இது இந்தியாவுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது,” என்று கூறுகிறார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தின் புகழ் வலுப்பெற்றுள்ளது. அதன் தலைமை தளபதி அசீம் முனீர் பாகிஸ்தானில் மிகவும் சக்தி வாய்ந்த ஆளாக கருதப்படுகிறார். இதற்கு முன்பு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்தது மற்றும் இம்ரான் கான் ஆதரவாளர்களை குறி வைத்தது தொடர்பாக எழுந்த விமர்சனங்களை தாக்குதலுக்கு பிந்தைய சூழல் தவிடுபொடியாக்கிவிட்டது.
தாக்குதல்களுக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் என்ற கௌரவம் அவருக்கு கிடைத்துள்ளது.
கமோதரே சிங் இது குறித்து பேசும் போது, “இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கையானது தீவிரவாத தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும். ஆனால் அது மேலும் தொடர்ந்தால், பாகிஸ்தான் தன்னுடைய அழிவை நோக்கிச் செல்கிறது என்று பொருள்,” என்றார்.
இருப்பினும், எழுத்தாளரும், தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளின் நிபுணருமான அஜய் சஹ்னி, “பாகிஸ்தான் ஏற்கனவே வெற்றி பெற்றதற்கான ஒரு கதையை” உருவாக்கி வருவதை சுட்டிக் காட்டி, இந்தியாவின் தடுப்பு நடவடிக்கை பலனளிக்காது என்று கூகிறார்.
விமானப்படைத் தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டாலும், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், “பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக நிலைமைகளை மாற்றியது” என்று கூறினார்.
“இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தானில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அப்படி ஏற்படும் பட்சத்தில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் புதிய சூழலுக்கு தங்களை பழக்கிக் கொள்ளும் செயல்முறையை கற்று கொள்ளும்,” என்று சஹ்னி கூறுகிறார்.
இஸ்லாமாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்புத்துறை நிபுணர் ராணா, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட இயலாது என்று வாதிடுகிறார். உண்மையில், இந்த தாக்குதல், “புதிய ஆயுதப் போட்டியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.
தாக்குதல் நடைபெற்ற போது சீனாவின் ஆயுத தொழில்நுட்பங்களை பாகிஸ்தான் பயன்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் அந்த கூட்டமைப்புப் பற்றிய புதிய தகவல்கள் ஏதும் இல்லை என்பதையும் ராணா மேற்கோள்காட்டினார்.
சீனாவின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் எவ்வளவு திறம்பட பயன்படுத்தியது என்பது தான் முக்கியம் என்று ராணா தெரிவித்தார்.
இது குறித்து ஆழமான யோசனையை செலுத்திய இந்திய நிபுணர் சஹ்னி பாகிஸ்தானின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் ராணுவ “தொழில்நுட்ப சக்தி” என்ற பெருமை கொண்ட சீனாவுக்கு பாரிய உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்தார்.
“இதன் விளைவாக சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பிளவு அதிகரிக்கும். அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான சீனாவின் உறவும் ஆழமாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
பிரதிநிதிகளின் ராஜ்ஜிய நடவடிக்கைகள்
இருநாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழல், மே 10-ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தான் “முழுமையான மற்றும் உடனடியான” போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்த போது திசை மாறியது.
இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வரவேற்றது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை இந்தியா நிராகரித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்னைகளை இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணும் என்று இந்தியா வெகு காலமாக கூறி வருகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து விலகி நிற்பதற்காக இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் இந்த தாக்குதல் வீணடித்ததாக சிலர் கருதுகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பிறகு இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமானது.
ஆனால் உலக அரங்கில், குறிப்பாக அமெரிக்காவின் போர் நிறுத்தம் தொடர்பான அறிக்கைகளில் இவ்விரு நாடுகளும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு வருவது, ராஜாங்க ரீதியாக ஏற்பட்டுள்ள பின்னடைவையே சுட்டுகிறது என்று முன்னாள் ராஜாங்க அதிகாரியாக பணியாற்றிய நிரூபமா ராவ் தெரிவித்தார்.
தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறுவதற்காகவே அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்தது.
அதே நேரத்தில் பாகிஸ்தானும் தன்னுடைய பிரதிநிதிகளை ஐந்து நாடுகளுக்கு அனுப்பியது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம், உலகத்திற்கு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே தங்களின் பிரதிநிதிகளை அனுப்புவதாக கூறியது.
அஸர்பைஜான், துருக்கி, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமர் நேரடியாக கலந்து கொண்டார். இந்த இரண்டு நாடுகளும் பதற்றமான சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததை காணமுடிந்தது.
“இந்தியா இந்த பிராந்தியத்தை போர் சூழலை நோக்கி தள்ளுகிறது என்ற பாகிஸ்தானின் செய்தியை உலகிற்கு சொல்லவே பாகிஸ்தான் இத்தகைய முடிவை மேற்கொண்டது,” என்று ஜோஹர் சலீம் கூறுகிறார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் ராஜ்ஜிய நிலைப்பாடு மாறியுள்ளது. இந்திய மண்ணில் நடத்தப்படும் எந்த விதமான தீவிரவாத தாக்குதலும் போராகவே கருதப்படும் என்ற நிலைப்பாட்டை தற்போது கையில் எடுத்துள்ளது இந்தியா.
பட மூலாதாரம், Reuters
பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ‘ஐநாவால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட’ ஹஃபிஸ் அப்துல் ராவுஃப், இந்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாக இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்வை குறிப்பிட்டு விக்ரம் மிஸ்ரி பேசிய போது, இந்தியா தன்னுடைய ராஜ்ஜிய தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதே புகைப்படத்தை வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் காட்டினார்கள். பேராசிரியர் பண்ட் இது குறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசிய போது, “பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத செயல்பாடுகள் குறித்த இந்தியாவின் அணுகுமுறை மாறி வருகிறது என்ற நோக்கத்தை உறுதி செய்யும் வகையில் இந்திய பிரதிநிதிகள் செயல்படுகின்றனர்,” என்று கூறினார்.
ஆனால் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த நபர் தீவிரவாதி இல்லை என்றும் அவர் சாதாரண நபர் தான் என்றும் பாகிஸ்தான் கூறுகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவு மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முழுமையாக நிராகரிக்கிறது.
முரணாக, வெளிநாட்டிற்குச் சென்ற பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அடங்கிய குழுவின் நோக்கங்களில் ஒன்றாக , “பாகிஸ்தானுக்குள் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இந்தியா நிதி அளிக்கிறது” என்பதற்கான “ஆதாரங்களை” உலக நாடுகளுக்கு கையளிப்பதாக இருக்கிறது என்று சலீம் கூறுகிறார்.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது, சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மேற்கோள்கட்டுவது, அண்டை நாடுகளுக்கு இடையே நதி நீர் பகிர்வு குறித்த புரிதலை ஏற்படுத்துவது போன்றவையும் இந்த பயணங்களின் இதர நோக்கங்களாக உள்ளது என்று ஜோஹர் சலீம் கூறுகிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மக்களிடம் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “இரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது,” என்று கூறினார்.
அரசியல் விளைவுகள்
உலக நாடுகளில் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைக்க இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில் மோதி உள் நாட்டு அரசியல் சூழலை எதிர்கொண்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வெளிவரும் மோதியின் உரையாடல்களில் சிந்தூர் இடம் பெறுகிறது. ஓரிடத்தில் “நரம்புகளில் சிந்தூர் தான் (குங்குமம்) ஓடுகிறது,” என்றும் மற்றொரு முறை, ‘மோதியின் தோட்டா’ தாக்குதலுக்கு தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தானை எச்சரித்தார்.
அதேநேரத்தில் வெளியுறவு கொள்கையில் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜகவை காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் அதிதீ பாட்னிஸ், மோதி இந்த தாக்குதலை பிகார் தேர்தலில் பயன்படுத்துவார் என்று கூறுகிறார். இந்த ஆண்டு பிகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் மோதியின் பின்னால் ஓரணியாக திரண்டனர் என்பதை காண்பிக்க மேற்கொள்ளப்பட்ட யுத்தியாகவே வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்பியதாகவும் அவர் கூறுகிறார்.
மூத்த இந்திய பத்திரிகையாளரான நீரஜா சௌத்ரி, மோதியின் பின்னால் எதிர்க்கட்சியினர் ஓரணியாக திரள்வது மோதியின் பிம்பத்தை ஒரு தலைவராக உயர்த்திக் காட்டும் என்று தெரிவிக்கும் அவர் ஆனால் இதில் அபாயங்களும் உள்ளது என்று கூறுகிறார்.
“எதிர்க்கட்சியினரும் இதில் ஆதாயம் அடைந்துள்ளனர்,” என்று அவர் கூறுகிறார். “தேசியவாதத்துடன் கூடிய தாராள மதிப்பீடுகளை ஒன்றிணைத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றாக திரள்வதை நீங்கள் திடீரென பார்க்கின்றீர்கள்.”
தேர்தல் அரசியல் என்று வரும் போது தேசியவாதத்தை வைத்துக் கொண்டு பாஜக மட்டும் ஆதாயம் அடையாது என்பதை இது காட்டுகிறது. “அவர்கள் எதிர்க்கட்சியினருடன் தேசியவாத அரசியலை பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என்றும் நீரஜா கூறுகிறார்.
பாகிஸ்தானில், அந்த நாட்டின் ராணுவத்திற்கு பன்மடங்காக உயர்ந்திருக்கும் புகழ் ஒரு பெரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராணுவத் தளபதி அசீம் முனீர் மட்டுமின்றி, பாகிஸ்தானின் உளவுத்துறை தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் அசீம் மாலிக்கிற்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு இப்பொறுப்பு ராணுவத்தை சாராதவருக்கு வழங்கப்பட்டது.
பர்வேஸ் முசாரஃபை ஆட்சியில் இருந்து நீக்கிய பிறகு மக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவு பலவீனம் அடைந்துள்ளது என்ற கருத்து பொதுவாக நிலவியது என லாகூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மஜித் நிஸாமி கூறுகிறார்.
“ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவை அளித்து அவர்களின் பக்கம் மக்கள் துணை நின்றது இந்த கருத்தை மாற்றி அமைத்தது,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் பாகிஸ்தானில் அரசியல் கட்சிகள் இந்த நிகழ்வுகளினால் எந்தவிதமான ஆதாயத்தையும் அடையவில்லை என்று கூறுகிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு