இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சமூக ஊடகம் மூலம் இதனை அறிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் மோதியின் பதிவில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அதன் கீழ் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதிவிகிதமாக குறைப்பதாகவும் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார் டிரம்ப்.
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி,” என பிரதமர் மோதி தெரிவித்திருந்தார்.
எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு “மோதி மீதான டிரம்பின் அழுத்தம் தெளிவாக தெரிகிறது,” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் பல முறை கூறியதைப் போல, பிரதமர் மோதியை ஒரு சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பால் நான் உற்சாகமாக இருக்கிறேன். அமெரிக்கா-இந்தியா உறவில் நிறைய திறன் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே உறவு பல ஏற்றஇறக்கங்களைச் சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 25% கூடுதல் விதிக்கப்பட்டு ஒட்டுமொத்த வரி 50% ஆனது.
டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் தனது பதிவில், “இந்தியப் பிரதமர் மோதியுடன் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. அவர் என்னுடைய சிறந்த நண்பர்களில் ஒருவர் மட்டுமல்ல அவரது நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினோம். ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிலிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவில் இருந்தும் எண்ணெய் வாங்க அவர் ஒப்புக்கொண்டார்.” எனத் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர இது உதவும் எனக் கூறிய டிரம்ப், “பிரதமர் மோதி உடனான நட்பு மற்றும் அவர் மீதான மரியாதைக்காக அவரது கோரிக்கையின் பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன் கீழ் பரஸ்பர வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.” என்றார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்ட டிரம்ப் தன்னுடைய பதிவில், “இந்தியா தனது வரியை பூஜ்யமாக்குவதையும் அமெரிக்கா உடனான வரி அல்லாத தடைகளை அகற்றுவதையுயும் நோக்கி நகரும். அமெரிக்காவில் இருந்து கூடுதல் கொள்முதலை மேற்கொள்ள பிரதமர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். இதில் 500 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க எரிபொருள், தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்கள் அடங்கும்.”
இனி வரும் காலங்களில் இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு மேலும் வலுவாகும் எனக் கூறிய டிரம்ப், “மோதியும் டிரம்பும் வேலையை செய்து முடிக்கும் நபர்கள், பெரும்பாலான நபர்கள் அப்படிக் கிடையாது.” என்றார்.
மோதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் பதிவில், “எனது அருமை நண்பரான அதிபர் டிரம்புடன் பேசியது பெரும் மகிழ்ச்சி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. 140 கோடி இந்திய மக்களின் சார்பில் இந்த அறிவிப்புக்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும் ஜனநாயகமும் கொண்ட இரு நாடுகள் இணைந்து பணியாற்றினால் அது நமது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் பரஸ்பர நன்மைக்கான எண்ணற்ற வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் மோதி தெரிவித்தார்.
“உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கு அதிபர் டிரம்பின் தலைமை முக்கியமானது. அமைதிக்கான அவரின் முயற்சிகளில் இந்தியா உறுதியாக அவருடன் நிற்கிறது. நம்முடைய கூட்டணியை எதிர்பாராத உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அவருடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்வினையாற்றி உள்ளார்.
“ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதாக அவர் (டிரம்ப்) வாஷிங்டனில் இருந்து அறிவித்தார். ரஷ்யா மற்றும் வெனிசுவேலாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் பற்றிய தகவலையும் அவர் வாஷிங்டனில் இருந்து வழங்கினார். தற்போது இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பையும் அவர் வாஷிங்டனில் இருந்து அறிவித்திருக்கிறார். அதன் முழு விவரம் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.” என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்
மேலும் அவர், “மோதி மீதான டிரம்பின் அழுத்தம் அல்லது செல்வாக்கு தெளிவாகத் தெரிகிறது. தற்போது டிரம்பிடமிருந்து ஒரு இடைவெளியை மோதி கடைபிடிப்பதாகத் தெரிகிறது. மோதி விட்டுக் கொடுத்துவிட்டார் எனத் தெரிகிறது. இது ‘மிகப்பெரிய ஒப்பந்தம்’ ஆக இருக்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.