18
இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான சந்தன் குமார் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் – பெங்களூரு அருகே உள்ள நெலமங்களா பகுதியில் அமைந்துள்ள தியாமகொண்டலு கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார், கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டொராண்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்தன் குமார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தன் குமார், கனடாவில் கன்னட மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக ஒரு அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகளே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அவரது தந்தை நந்தகுமார் பேசுகையில், “கனடா சென்ற பிறகு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தியாவிற்கு திரும்புமாறு நாங்கள் பலமுறை கேட்டோம். இப்படியான சம்பவம் நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.