• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்தது எப்படி? – அணுகுமுறை மாறியதால் வசமான உலகக் கோப்பை

Byadmin

Nov 3, 2025


இந்தியா உலக சாம்பியன்

அணுகுமுறையை மாற்றிய வீராங்கனைகள் - இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு.பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.

லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது.

மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காணவேண்டியிருந்தது, உறுதியாகப் போராடவேண்டியிருந்தது. இந்த அணி அவை அனைத்தையுமே செய்திருக்கிறது.

இறுதிப் போட்டியில் நல்ல தொடக்கம்

நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஓப்பனர்கள் ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவருமே இந்த இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்த ஜோடி.

மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராகக் களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கூட ஷஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்தப் போட்டியில் அது மாறியிருந்தது.



By admin