• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

இனவெறித் தாக்குதலால் நபர் கொலை: இங்கிலாந்தில் இரு சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை

Byadmin

Feb 21, 2026


இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள Barry நகரில், தனது தாய்க்கு மளிகைப் பொருட்களை வழங்கச் சென்ற ஒருவரை இனவெறி நோக்கத்தில் கொலை செய்த இரு சிறுவர்களுக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

38 வயதான கம்ரான் அமான் என்பவர், கடந்தாண்டு ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில் Barry வீதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு மளிகைப் பொருட்களை வழங்கச் சென்றார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 17 வயதான மார்கஸ் ஸ்டானிஃபோர்த் (Marcus Staniforth) மற்றும் மற்றொரு 16 வயது சிறுவன் ஆகியோர் அமானை வழிமறித்தனர். எவ்வித தூண்டுதலும் இன்றி அமானை நோக்கி இனவெறி வார்த்தைகளை வீசிய அந்தச் சிறுவர்கள், அவரைத் கொடூரமாகத் தாக்கினர்.

இந்தத் தாக்குதலின் போது, மார்கஸ் ஸ்டானிஃபோர்த் வீட்டிற்குள் ஓடிச் சென்று ஒரு பெரிய கத்தியை எடுத்து வந்து, அமானின் இதயத்தில் குத்தியுள்ளார். கத்திக் குத்தப்பட்டு அமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையிலும், அந்தச் சிறுவர்கள் தொடர்ந்து அவரை இனவெறி வார்த்தைகளால் திட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆதாரங்களை அழிப்பதற்காக கத்தியையும் கைகளையும் ப்ளீச் (bleach) கொண்டு ஸ்டானிஃபோர்த் கழுவியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்டர் ஜஸ்டிஸ் கிரிஃபித்ஸ், இது ஒரு “திட்டமிடப்பட்ட, தூண்டுதலற்ற மற்றும் கொடூரமான இனவெறித் தாக்குதல்” என்று விவரித்தார்.

இதனையடுத்து கொலையில் நேரடியாக ஈடுபட்ட மார்கஸ் ஸ்டானிஃபோர்திற்கு 17 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு 16 வயது சிறுவனுக்கு 15 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கம்ரான் அமானின் மனைவி கலீலா ஜேம்ஸ், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், இந்தச் சம்பவத்தால் தங்களின் நான்கு வயது மகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாகவும், தந்தை மீண்டும் வரமாட்டார் என்ற பயத்தில் பிரிந்து செல்ல அஞ்சுவதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார். அமானின் தாயார் ஷாநாஸ் அமான் கூறுகையில், தனது மகன் கொல்லப்பட்ட பிறகு தங்கள் குடும்பமே அச்சத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டார்.

Race Equality First அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அலியா முகமது, இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது போன்ற இனவெறி வன்முறைகள் தனி ஒரு நபரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்றும், நீதிமன்றம் இதனை இனவெறித் தாக்குதலாக அங்கீகரித்தது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

By admin