இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டுக் காணாமல்போன 18 வயது மாணவன் பார்த்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
பிள்ளையானின் கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரைத் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் திருக்கோவில் மற்றும் மட்டு. சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஜ.டியினர் கைது செய்தனர்.
இவர்களுடன் இனியபாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் – விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்னேஸ்வரன், வெலிகந்தை – தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரையும் சி.ஜ.டியினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் – விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்தீபன், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு தம்பிலுவில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சி.ஜ.டியினர் கைது செய்யப்பட்டவர்களை தம்பிலுவில் இந்து மயானத்துக்குக் கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர். இதற்கமைய அந்த மயான இடத்தைத் தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் சி.ஜ.டியினர் அனுமதி கோரியதையடுத்து நீதிவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு இன்று பிற்பல் 2 மணிக்குத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்களும் மீட்கப்படவில்லை
இதேவேளை, அந்தப் பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
The post இனியபாரதியால் கடத்திக் கொல்லப்பட்டோர்: தம்பிலுவில் மயானத்தில் தோண்டும் நடவடிக்கை! (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.