• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து | leader wishes for Bakrid festival

Byadmin

Jun 7, 2025


பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, சென்னை நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இ்ந்த இனிய திருநாளில் எல்லோரிடமும், இறைஉணர்வும், தியாகச்சிந்தனையும் சகோதரத்துவமும், மலரட்டும். அது மனிதகுல நல்வாழ்வுக்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதாார எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஈகை, மனிதநேயம், மதநல்லிணக்கம் ஆகிய நல்லெண்ணங்கள் தழைத்தோங்கவும், எல்லா வளமும் நலமும் அனைவர் வாழ்விலும் பெருகிட வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து இஸ்ஸாமிய மக்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை: இன்றையஉலகம் பல்வேறு சோதனைகளை சந்திக்கும் நேரத்தில், பக்ரீத் திருநாள் நமக்கு விடுக்கும் முக்கிய அழைப்பு, ஒற்றுமையை வளர்ப்போம். மனிதநேயத்தை விரிப்போம், வெறுப்பை விலக்குவோம் என்பதுதான். இந்நன்னாளில் நமது சமூகத்தில் இனிய சகோதரத்துவம் வேரூன்றட்டும். மனிதம் வாழட்டும், வேற்றுமை ஓழியட்டும். ஒற்றுமை ஓங்கட்டும். முஸ்லிம் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஈதுல் அல்ஹா என்னும் ஈகையின் மாண்பினைக் கூறும் திருநாள்தான் பக்ரீத் பண்டிகை. இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது. மாறாக எங்கும் அன்பு சகோதரத்துவம், அமைதி நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம் என்று இந்த நன்னாளில் உலக மக்கள் உறுதியேற்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பக்ரீத் சொல்லும் பாடம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது அல்ல. உலகில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பாடம் அதுவாகும். அந்த பாடத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்; உலகம் முழுவதும் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் செழிக்க வேண்டும்.

மேலும், ஐயுஎம்எல் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.நாகூர் ராஜா, ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் பாஜக பிரமுகர் நடிகர் ஆர்.சரத்குமார், தமிழ்நாடு ஐஎன்டியுசி மூத்த துணை தலைவர் மு.பன்னீர்செல்வம்: ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



hare_save_container addtoany_content addtoany_content_bottom">

By admin