சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பணிகளால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
எழும்பூர் நிலையத்தில் உள்ள 11 நடைமேடைகளும் மிகப்பிரமாண்டமாக நவீனப்படுத்தப்படுகிறது. விமான நிலையம் போல புறப்படக்கூடிய பகுதி, ரெயில்கள் வந்து சேரக்கூடிய பகுதி என பிரித்து புதிய வடிவில் கட்டமைக்கப்படுகிறது.
இதன் காரணமாக எழும்பூர் நிலையத்தில் இருந்து இயக்கக்கூடிய சில ரெயில்கள் தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. ஆனால் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இதே போல ராமேஸ்வரம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மறுஅறிவிப்பு வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு தற்காலிகமாக வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம்- ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் அதற்கேற்றவாறு பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.