சமீப காலமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றம், கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிக்கைக்குப் பிறகு இந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
இரானின் எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் குறிவைக்கக் கூடும் என்றும், இந்த சாத்தியமான தாக்குதல் குறித்து அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டது என்றும் அதிபர் ஜோ பைடன் கூறினார்.
இரானின் எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா அதனை ஆதரிக்குமா என்று பைடனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பைடன், “அதுகுறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்றார். பைடனின் இந்த அறிக்கைக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்- இரான் இடையேயான மோதல்
இரான் கடந்த செவ்வாய் அன்று (அக்டோபர் 1) இரவு இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இரான் இஸ்ரேல் மீது 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது, அதில் பாலத்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஏப்ரலில், இரான் சுமார் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 30 குரூயிஸ் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கியது.
இரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் பதுங்கு குழியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இரான் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளது, அதற்கான விலையை அது கொடுக்கும்” என்று கூறினார்.
ஜூலை மாதம், ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு இரான், இஸ்ரேலைக் குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், இந்தப் படுகொலைக்குப் பிறகு உடனடியாக இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதன் பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இந்த இரு தலைவர்களும் இரான் ஆதரவாளர்களாக கருதப்பட்டனர். அவர்களது படுகொலைகளுக்கு இரான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று உள்நாட்டில் இருந்தே அழுத்தம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த இரண்டு கொலைகளுக்கும் பழிவாங்கவே இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதாக இரான் கூறுகிறது.
புதன்கிழமை அன்று இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, இஸ்ரேல் இரானின் சில முக்கியமான மூலோபாய இலக்குகளை சில நாட்களுக்குள் குறிவைக்கும். இந்த தாக்குதல்களுக்கான இலக்குகளில் இரானின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி நிலையங்களும் அடங்கும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
பேராசிரியர் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் உள்ள ‘நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வு மையத்தின்’ கல்வியாளர் ரேஷ்மி காசி, “மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் இருப்புகள் குறி வைக்கப்பட்டால், அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்” என்கிறார்.
ரேஷ்மா காசியின் கூற்றுப்படி, இது கச்சா எண்ணெய் விநியோகத்தை மட்டும் பாதிக்காது, இதனால் பல மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேசப் பாதைகள் மூடப்படலாம். இதன் காரணமாக, மற்ற பொருட்களை கொண்டு செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இது செலவு மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள சாமானியர்கள் மீது இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரேஷ்மா காசி நம்புகிறார்.
உலக எண்ணெய் சந்தையில் இரானின் முக்கியத்துவம்
உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரான் ஏழாவது இடத்தில் உள்ளது. இரான் தனது எண்ணெய் உற்பத்தியில் பாதியை ஏற்றுமதி செய்கிறது. அதன் முக்கிய வாடிக்கையாளர்களில் சீனாவும் அடங்கும்.
இருப்பினும், சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்தது மற்றும் சௌதி அரேபியாவில் இருந்து கிடைக்கும் போதுமான கச்சா எண்ணெய் விநியோகம் காரணமாக, இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏறுமுகம் காணவில்லை.
உலகில் நான்காவது பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட நாடு இரான். அதேசமயம் உலகின் இரண்டாவது பெரிய எரிவாயு இருப்பையும் அந்த நாடு கொண்டிருக்கிறது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் (OPEC) மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக இரான் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 3 மில்லியன் (30 லட்சம்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இரான் உற்பத்தி செய்கிறது. இது மொத்த உலக உற்பத்தியில் மூன்று சதவீதமாகும்.
இரானின் எண்ணெய் வளங்கள், கிணறுகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கினால், அது கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும். இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இதுகுறித்து பேசிய பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி, “இரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் தளங்களை இஸ்ரேல் தாக்கினால், அது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் வெளிப்படையாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று கூறுகிறார்.
மேற்குலகின் பொருளாதார தடைகள் காரணமாக, சீனா தற்போது இரானிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாகவும், அதேசமயம் இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் ராகுல் பேடி கூறுகிறார்.
இரானிடம் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால், மற்ற நாடுகளிடம் இருந்து அதனைப் பெற சீனா முயற்சிக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
இந்தியாவுக்கான சாதக, பாதகங்கள் என்ன?
இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. அதன் நேரடி தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் தெரியும்.
ஹசன் நஸ்ரல்லா படுகொலைக்குப் பின்னர், இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் மட்டுமே இருந்தது. ஆனால் அதே சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் மூன்று சதவீதம் அதிகரித்தது. இதிலிருந்து சர்வதேச எண்ணெய் சந்தையில் இந்த பிரச்னை செலுத்தும் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய சூழ்நிலையில், இரானின் எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் குறிவைத்தால், அது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரானின் எண்ணெய் வளங்கள் இஸ்ரேலால் தாக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
செவ்வாயன்று இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை இதுவரை 10 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 77 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 6,470.11 ரூபாய்) என்ற விலையை எட்டியுள்ளது.
“இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு இருக்கக் கூடிய சாதகமான ஒரு விஷயம் என்னவென்றால், இரானின் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்தால், ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயை இந்தியா அதிக விலைக்கு மற்ற நாடுகளுக்கு விற்கலாம். ஆனால் இதனால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான புவிசார் அரசியல் அழுத்தம் இருக்கும் அல்லது பாதிப்பு இருக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.” என்கிறார் ராகுல் பேடி.
பிப்ரவரி 2022இல் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. அதை சமாளிக்க, சர்வதேச சந்தையை விட, குறைந்த விலையில், இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளுக்கு, கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்தது.
கடந்த ஆண்டு மே மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பர்ரெல், “இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கி, அதைச் சுத்திகரித்து பின்னர் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதை நாங்கள் அறிவோம்” என்று கூறியிருந்தார்.
இது கட்டுப்பாடுகளை மீறுவதாக விவரித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் அறிக்கையின்படி, ‘2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு இந்தியாவின் எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி 70 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன’.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு