இஸ்ரேல் – இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேநேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு புறமுமே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது.
அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
டெஹ்ரானில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளதால், அது அதிக ஆபத்து நிறைந்தது என்று டெஹ்ரானின் தீயணைப்புத் துறை முன்பு எச்சரித்திருந்தது.
இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய டெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமும் தங்களது இலக்குகளில் அடங்கும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது இரான் சரமாரி ஏவுகணை வீச்சு
இஸ்ரேலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது சரமாரியாக ஏவுகணைகளை இரான் ஏவியது. ஒரே இரவில் இரண்டு முறை அலையலையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாமில்ஒரு கட்டடம் இரான் தாக்குதலுக்கு இலக்கானதில் 3 பேர் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது. அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் நடந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று MDA இன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்ரேலின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளை இந்த நேரத்தில் பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.