புதன்கிழமை அன்று இரானின் முக்கியமான தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதைப்பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரின் முக்கிய எரிவாயு தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான் “கடுமையான சேதங்களை” ஏற்படுத்தியுள்ளது.
கத்தாருக்கு எதிராக இரான் மேலும் பதில் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என டிரம்ப் எச்சரித்துள்ளார்
இரானின் எரிவாயு உற்பத்தி நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி “மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக” இரான் மீது “கடுமையாக தாக்குதல் நடத்தியதாக” டிரம்ப் கூறியுள்ளார்.
கத்தாரின் வடக்கு எரிவாயு நிலையின் நீட்சியாக உள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையுடன் தொடர்புடைய தளங்களை ”இஸ்ரேல் இலக்கு வைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நகர்வு” என கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் கண்டித்துள்ளது.
தனது ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை மீதான இரானின் தாக்குதல் “வெட்கக்கேடானது” என்றும் “தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மீதான நேரடி அச்சுறுத்தல்” என கத்தார் அரசு குறிப்பிட்டிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
வளைகுடா நாடுகள் ‘அச்சப்பட்ட’ விஷயம்
இந்த அதிகரித்த பதற்றத்தை வளைகுடா அரபு நாடுகள் அச்சத்துடன் எதிர்கொண்டிருந்தன.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை குறிவைத்து நிகழ்ந்த இரானிய ஏவுகணை தாக்குதல்கள் தற்போது எரிசக்தி துறை மீதான தாக்குதலாக உருவெடுத்துள்ளன.
இதுதான் வளைகுடா பொருளாதாரங்களின் இதய துடிப்பாக உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோரசாயனங்கள்தான் வளைகுடா அரபு நாடுகளை சில பத்தாண்டுகளில் பணக்கார நாடுகளாக மாற்றின.
பிப்ரவரி மாதம் இரானை தாக்க வேண்டாம் என வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த பிறகும் அமெரிக்கா இரானைத் தாக்கியது கத்தாரை சீற்றமடையச் செய்தது.
இப்போது கத்தார் எரிவாயு துறையின் மணிமகுடமான ராஸ் லஃபான் ஒரே இரவில் இரு முறை தாக்குதலுக்கு உள்ளானது.
வளைகுடா அரபு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் திறம்பட உள்ளன.
12 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் நிலையில் ரியாத்தில் இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன.
ஆனால் இரானின் ஆயுதம் தற்போது வரை தீர்ந்துவிடவில்லை. அதன் ஆயுதங்களில் சில பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்ல முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் உத்தரவாதம்
இரான் மற்றும் கத்தார் மீதான இந்த தாக்குதல்கள் இந்த மோதலின் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.
கத்தார் மீதான இரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மொத்தமாக அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அதே வேளையில் கத்தாரை இரான் தாக்கவில்லை என்றால் தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்கிற டிரம்பின் உத்தரவாதம் உலகளாவிய எரிபொருள் சந்தைக்கு இந்த நிலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உணர்த்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளில் ஒன்று
இரான் எதிர்வினைக்கு விலை கொடுக்கும் வளைகுடா நாடுகள்
கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹப்ஷான் எரிவாயு உற்பத்தி நிலை மற்றும் பாப் நிலைகள் மூடப்பட்டுள்ளன.
இடைமறிக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து வந்த சிதறல்களால் அவை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சௌதி அரேபியாவும் இலக்கு வைக்கப்பட்டது, மேற்குப் பகுதியிலும் தலைநகர் ரியாத்திலும் தாக்குதல்களை தடுத்ததாக அந்நாடு தெரிவிக்கிறது.
ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் தனது உரிமையை நிறுத்தி வைத்திருப்பதாக சௌதி அரேபியா எச்சரித்துள்ளது.
இரான் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் சார்பாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருந்த அதன் அண்டை நாடுகளுடான உறவுகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இரான், இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்த அரபு நாடுகள்
இந்த நிலையில் ரியாத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு அரபு நாடுகள் கூட்டு அறிக்கை மூலம் இரானின் தாக்குதலைக் கண்டித்துள்ளன.
இவர்களில் பஹ்ரைன், குவைத், லெபனான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகள் அடங்கும்.
குடியிருப்பு பகுதிகள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் தூதரக கட்டடங்களை இலக்கு வைத்ததாக அவர்கள் கூறும் இரானின் “திட்டமிட்ட தாக்குதல்களை” அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தனர்.
எந்தச் சூழலிலும் இவற்றை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐ.நா பிரிவு 51-இன்படி தங்களின் தற்காப்புக்கான உரிமையையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இரான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சட்டம் மற்றும் சிறந்த அண்டைநாடுகள் கொள்கையை மதிக்க வேண்டும் எனக் கோரிய அந்த அறிக்கை, ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதை நோக்கமாகக் கொண்ட “நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களை” தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்த அரபு நாடுகள் அதனை “பிராந்தியத்தில் நிகழும் விரிவாக்க கொள்கை” என்றும் குறிப்பிட்டனர்.