படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி
இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கியதன் மூலம் அமெரிக்கா ‘எதையுமே சாதிக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.
“நடந்தவற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகைப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதை கேட்பவர்களுக்கு அவர் உண்மையை திரிக்கிறார் என்பது புரியும்” என்று தெரிவித்தார்.
காமனெயியின் கருத்துக்கு டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “ஆயதுல்லா அலி காமனெயி, இஸ்ரேல் உடனான போரை வென்றுவிட்டேன் என முட்டாள்தனமாக ஏன் சொல்கிறார்? இந்தக் கூற்று பொய் என அவருக்குத் தெரியும். அவர் பொய் சொல்லக்கூடாது.” என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி இரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், அதிபர் டிரம்ப் இரானின் அதி உயர் தலைவர் காமனெயி பற்றி அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தொனியில் பேசுவதை கைவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
ஒட்டுமொத்த உலகமும் இரான் மற்றும் அமெரிக்காவின் கருத்துக்களை கவனிப்புடன் பார்த்து வருகிறது. காமனெயியின் வீடியோ பதிவு பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டுள்ளன, அதிலும் குறிப்பாக அரபு நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் அந்த செய்தியை அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
அரேபிய ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கத்தாரின் அல்ஜசீரா ஊடகம்
கத்தாரின் அல்ஜசீரா ஊடகம் அந்தக் காணொளி உரை “இரானிய மக்களின் ஒற்றுமையை” வலியிறுத்துவதாகவும் போர்க்காலத்தில் இரான் சரணடைய வேண்டும் என்கிற டிரம்ப்பின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“காமனெயி இஸ்ரேல் மீது வெற்றியை அறிவித்து அமெரிக்காவுக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்” என எகிப்து அரசின் செய்தித்தாளான அல் அஹ்ரம் ஜூன் 27 அன்று தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டது.
லண்டனை மையமாகக் கொண்ட அரபு ஊடகமான ரே-அல் -யூம் உள்ளிட்ட பல ஊடகங்கள், “ஜியோனிச அரசின்” மீது இரான் வெற்றி பெற்றது என்கிற காமனெயியின் கருத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு
பல வாரங்களில் முதல் முறையாக ஜூன் 26 தேதியிட்ட காணொளி செய்தியில் பொதுவெளியில் தோன்றினார் காமனெயி. அப்போது 12 நாட்கள் இரான் – இஸ்ரேல் மோதல் முடிந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
“போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக பேசிய காமனெயி டிரம்ப் மற்றும் இஸ்ரேலுக்கு செய்தி வழங்கியுள்ளார்” என அல்ஜசீரா எழுதியுள்ளது.
ரே அல்-யூமின் ஆசிரியரான அப்துல் பாரி அட்வான் காமனெயியின் தோற்றம், டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பின்னடைவு எனத் தெரிவித்து “இரானிய அரசை மாற்றுவதில் அவர் தோல்வி கண்டதை” காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
“வரலாற்று வெற்றி என்கிற நெதன்யாகு மற்றும் டிரம்ப்பின் போலியான கூற்றுகளுக்கு காமனெயி பதிலளித்துள்ளார்” என அவர் கூறுகிறார்
“இந்தப் போரில் இரான் வெற்றி பெற்றது மற்றும் வரலாற்று வெற்றி என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறி வருவது பொய் என்பதில் காமனெயி உடன் நாங்கள் உடன்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை மையமாகக் கொண்ட ஸ்கை நியூஸ் அரேபியா “இரான் அமெரிக்காவின் முகத்தில் அறைந்தது” என காமனெயியை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு சௌதி நிதியுதவி பெறும் ஊடகமான அஷ்ரல் அல்-அவ்ஸத் செய்தித்தாள் காமனெயியின் பேச்சு பற்றிய செய்தியின் இறுதியில், “இரான் மீதான அமெரிக்கா தாக்குதலில் பாதிப்புகளைக்” காட்டும் கிராஃபிக்ஸ்களை வெளியிட்டுள்ளது.
லெபனானைச் சேர்ந்த தனியார் ஊடகமான அன் – நஹர் நாளிதழ் காமனெயியின் கருத்துக்களைப் பரப்புரை என விவரித்துள்ளது. “போருக்குப் பிறகான முதல் உரையில் காமனெயி வெற்றி பற்றிய மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டுள்ளார்” என எழுதியுள்ளது.
“போருக்குப் பிறகு காமனெயியின் நிலை அதே மாதிரி இருக்காது என்பது கிட்டத்தட்ட நிச்சயம்” என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெருசலோம் போஸ்ட் நாளிதழின் இணையதளம், “காமனெயி ரகசியமாக பதிவு செய்யப்பட்ட செய்தியில் தான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை வென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்” என எழுதியுள்ளது.
“அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம் எனக் கூறி இரானின் காமனெயி, அமெரிக்க தாக்குதல்களை டிரம்ப் மிகைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்” என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
காமனெயி செய்தியும், டிரம்ப்பின் பதிலும்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, காமனெயியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய டிரம்ப் அவரின் கூற்றுக்கள் பொய் எனத் தெரிவித்தார்.
தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா இரானுக்கு எதிராக இருந்துள்ளது என்கிற உண்மையை டொனால்ட் டிரம்ப் தெரியாமல் கூறிவிட்டார் என காமனெயி தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.
இரான் சரணடைவது பற்றிய டிரம்ப் பேசியபோது, அவர் மிகப் பெரிய விஷயத்தைக் கூறிவிட்டார் என காமனெயி தெரிவிக்கிறார்.
“இரான் போன்ற சிறந்த நாடு மற்றும் தேசத்திடம், சரணடைவது பற்றி குறிப்பிடுவதே ஒரு அவமானம்” என காமனெயி தெரிவித்துள்ளார்.
“இரான் தாக்கப்பட்டால், எதிரியும் ஆக்கிரமிப்பாளரும் நிச்சயம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது மேலும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காமனெயியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய டிரம்ப் அவரின் கூற்றுக்கள் பொய் எனத் தெரிவித்தார்.
“அவர்களின் நாடு (இரான்) அழிக்கப்பட்டது. அவர்களின் அணுசக்தி நிலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் எங்கு மறைந்திருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். இஸ்ரேல் அல்லது அமெரிக்கப் படைகள் அவர்களின் உயிரைப் பறிக்க நான் விடமாட்டேன்” என்று தெரிவித்தார் டிரம்ப்
மேலும் டிரம்ப், “அவரை மிகவும் அவமானகரமான ஒரு மரணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளேன். அவர் ‘நன்றி, அதிபர் டிரம்ப்’ எனத் தெரிவிக்க வேண்டியதில்லை” என்றுள்ளார்.
இரான் மீதான தடைகளை நீக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து தான் வேலை செய்து வந்ததாகக் கூறும் டிரம்ப் சமீபத்திய கருத்துக்கு பிறகு தான் அதனை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி டிரம்ப்பின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார். அமெரிக்கா இரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், அதிபர் டிரம்ப் இரானின் அதிஉயர் தலைவர் மீது அவமானகரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தொனியில் பேசுவதை கைவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
“ஒரு தேசமாக எங்களின் அடிப்படை மிகவும் எளிமையானது மற்றும் வெளிப்படையானது, எங்களுக்கு எங்களின் மதிப்பு தெரியும். எங்களின் சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் எங்களின் எதிர்காலத்தை வேறு யாரும் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம்” என எக்ஸ் தளப்பதிவில் எழுதியுள்ளார் அராக்சி.