சென்னை: இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 1-ம் தேதி மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாடு துறைக்கு கடிதம் வந்தது. அதில், கடந்த செப்.4-ம் தேதி முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் கோல்ட்ரிஃப் சிரப் குறித்த விவரம் இருந்தது.
இதையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் குழுவினர் ஆய்வு செய்ததில் அந்த மருந்தில் டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. மேலும் மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3-ம் தேதி நிறுவனம் மூடப்பட்டது.
நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில் தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடந்த 3-ம் தேதி இமெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு கடந்த 9-ம் தேதி அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (75) கைது செய்யப்பட்டார். முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள்மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு,ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.