• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையைச் சேர்ந்த ‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு

Byadmin

Apr 6, 2026


இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான ‘கயல்’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை வம்சாவளி நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள குடியிருப்பொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் இளம் நடிகையின் மரணம் சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது இல்லத்தில் சுபாஷினி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி, தமிழ் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு சென்றார். ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்ட அவர், தனது விடாமுயற்சியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

சன் டிவியின் மெகா ஹிட் தொடரான ‘கயல்’ அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். திரையுலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது சக கலைஞர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுபாஷினியின் மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “உங்களுடைய நடிப்பு மிகவும் உண்மையானது, எங்களால் இதை நம்ப முடியவில்லை” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு திறமையான கலைஞராகவும், போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு பெண்ணாகவும் சுபாஷினி எப்போதும் ‘கயல்’ தொடரின் வழியாகவும், அவரது யதார்த்தமான நடிப்பின் மூலமாகவும் நினைவு கூரப்படுவார்.

மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணமோ மேலோங்கும்போது, முறையான ஆலோசனையும் உதவியும் பெறுவது அவசியம். இதற்கான அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிக்கான தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சுமித்ரயோ அமைப்பு  வருடத்தில் 365 நாட்களும் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணிவரைத் திறந்திருக்கும்.(விடுமுறை நாட்கள் உட்பட)

தொடர்பு எண்: சுமித்ரயோ – 011-2692909,011- 2683555,011- 269666

முகவரி : 60பி, ஹோட்டன் பிலேஸ், கொழும்பு 7 (சுமித்ரயோ)Beaches & Islands

மின்னஞ்சல்: [email protected] / [email protected]

இணையத்தளம்: www.sumithrayo.org 

By admin