• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

“இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு” | நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்

Byadmin

Mar 6, 2026


இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட உலக பக்கவாத அமைப்பின் (WSO) தலைவர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், இலங்கைக்கும் தனக்குமான உறவு மற்றும் பக்கவாத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெகிழ்ச்சி  தெரிவித்தார்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கு வரும்போதெல்லாம் எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. என்னிடம் பலர் இதுதான் உங்களது முதல் வருகையா எனக் கேட்கிறார்கள். ஆனால், எத்தனை முறை இங்கு வந்துள்ளேன் என்பதை எண்ணுவதே எனக்குக் கடினமாக உள்ளது.

அவுஸ்திரேலியாவை எனது இரண்டாவது வீடாகக் கருதினேன், ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நான் அங்குச் சென்றதை விட அதிகமுறை இலங்கைக்கு வந்துள்ளேன். இப்போது அவுஸ்திரேலியாவை விட இலங்கையே எனது இல்லமாகத் தோன்றுகிறது

மாநாட்டின் கருப்பொருளான “ஒருங்கிணைந்த நரம்பியல்” (Integrated Neurology) குறித்துப் பேசினால், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விதிமுறைகளைத் தாண்டி, நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானமும் அனுதாபமுமே (Empathy) மிக முக்கியமானது.

நரம்பியல் துறையானது தற்போது டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் துல்லியமான மருத்துவம் (Precision Medicine) ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது.

உலகளவில் பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் ஊனங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நிகழ்கின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிக இளம் வயதிலேயே மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இது குடும்பங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக அமைகிறது.

இலங்கை நரம்பியல் நிபுணர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சில முக்கிய திட்டங்களாக  ஆறு நாடுகளில் முன்னெடுக்கப்படும் பக்கவாத சிகிச்சை திட்டங்களுக்கு உலக பக்கவாத அமைப்பு நிதியுதவி வழங்கி வருகிறது.

நரம்பியல் துறையில் அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், சுமார் 100 நிபுணர்களுக்கு இரண்டு ஆண்டுகால தீவிரப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பு, அவசர சிகிச்சை மற்றும் நீண்டகாலப் புனர்வாழ்வு (Rehabilitation) ஆகிய மூன்று நிலைகளிலும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கம்.

உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சேவைகளை இலங்கையில் வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கு (ASN) தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

The post “இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு” | நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் appeared first on Vanakkam London.

By admin