ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கான உதவித் தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் உதவித் தொகையாக ரூ.350 மீனவளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மீனவர்கள் சிறைக்குள் இருக்கும் நாட்களை மொத்தமாக கணக்கீடு செய்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் அந்தந்த பகுதி மீன்வளத் துறை அலுவகம் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இது பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கான இந்த உதவித் தொகை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 25 பேர், 68 நாட்கள் சிறையில் இருந்து வெளியில் வந்தும் இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் தொழில் இன்றி அவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இனியும் தாமதம் இன்றி உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும், என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.