• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக விளையாடியது | பயிற்றுநர் ருமேஷ் ரட்நாயக்க

Byadmin

Oct 13, 2024


ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிக மோசமாக விளையாடியதே இலங்கையின் தோல்விகளுக்கு காரணம் என தலைமைப் பயிற்றநர் ருமேஷ் ரட்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடனும் ஆசிய கிண்ணத்தை வென்ற உத்வேகத்துட னும்   மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை மகளிர் அணி களம் இறங்கியது.

ஆனால், தனது முதல் மூன்று போட்டிகளில் மிக மோசமாக விளையாடி தோல்விகளைத் தழுவிய இலங்கை 9ஆவது தடவையாக மகளிர் ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

‘அதிர்ஷ்டம் இல்லை என்பதில் நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் சுற்றுப்போட்டி முழுவதும் மிகவும் மோசமாக விளையாடியதே தோல்விகளுக்கு காரணம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றே நான் கூறுவேன். இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். மீண்டு எழுவதற்கு முயற்சி செய்தோம். பல்வேறு விடயங்களை முயற்சித்துப் பார்த்தோம். அஞ்சாமலும் சுதந்திரமாகவும் விளையாட முயற்சித்தோம். ஆனால், அவசியமான வேளைகளில் எமது ஆற்றல்கள் வெளிப்படவில்லை’ என மூன்றாவது தோல்வியின் பின்னர் ருமேஷ் ரட்நாயக்க தெரிவித்தார்.

‘சமரி மீது எல்லோரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் நாங்கள் அவருடன்  பேசினோம். அவர் சற்று ஆசுவாசமடைய  வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு தருணமாக, ஒவ்வொரு பந்தாக எதிர்கொள்ளும்போது சகலமும் சரிவரும் என கருதுகிறேன். பல விடயங்ககளில் நாங்கள் தவறுகள் இழைத்தோம். இரண்டு மாதங்கள் அணியில் இருந்த ஆற்றல்களை இப்போது காணமுடியவில்லை. அதிலும் 3 தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்தோம். எங்களுக்கு தேவைப்பட்டபோது எம்மிடம் ஆற்றல்கள் இருக்வில்லை’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந் நிலையில், இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்தை ஷார்ஜாவில் இன்று பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது.

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இனியும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கடைசிப் போட்டியில் எவ்வித அழுத்தங்களுமின்றி இலங்கை அணியினால் சுதந்திரமாக விளையாடக் கூடியதாக இருக்கும் என கருதப்படுகிறது.

மறுபக்கத்தில் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு நியூஸிலாந்து தனது அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது.

எனவே இலங்கையுடனான போட்டியில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து கடுமையாக முயற்சிக்கும். இதன் காரணமாக இலங்கைக்கு இந்தப் போட்டியும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது.

மேலும், இலங்கையும் நியூஸிலாந்தும் இதுவரை விளையாடியுள்ள 13 சர்வதேச மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 – 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

அணிகள்

இலங்கை: விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷிகா சில்வா, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோஷி ப்ரியதர்ஷனி, உதேஷிகா ப்ரபோதனி, இனோக்கா ரணவீர.

நியூஸிலாந்து: சுசி பேட்ஸ், ஜோஜியா ப்ளிம்மர், அமேலியா கேர், சொஃபி டிவைன் (தலைவி), ப்றூக் ஹாலிடே, மெடி க்றீன், இசபெல்லா கேஸ், லீ த{ஹுஹ, ரோஸ்மேரி மாய்ர், ஈடன் காசன், ப்ரான் ஜோனாஸ்.

By admin