• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை வந்தார் ஐ.நா. ஆணையாளர்! – பிரதமருடன் முதல் சந்திப்பு

Byadmin

Jun 25, 2025


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

அவர் நாளைமறுதினம் வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

கொழும்புக்கு நேற்று வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றார்.

அதன்பின்னர் வோல்கர் டர்க், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையில் உள்ள பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் நடத்தவும் அவர் திட்டமிடப்பட்டுள்ளார்.

வோல்கர் டர்க், தலதா மாளிகையில் வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் அவர் திட்டமிடப்பட்டுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

By admin