67
இலண்டன் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற நகைக் கடை கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த இருவர் சுத்தியல்களைப் பயன்படுத்தி நகைக் கடையின் முன்புற ஜன்னல்களை உடைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள Gregory & Co என்ற நகைக் கடையிலேயே இந்தக் கொள்ளை சம்பவம் நடந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜன்னலை உடைத்த பின்னர், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில நகைகளை கொள்ளைக்காரர்களில் ஒருவர் எடுத்து நீல நிறப் பையில் போடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தக் கொள்ளையைத் தடுக்க முயன்ற கடை ஊழியர் ஒருவர், கடையின் உள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு கொள்ளைக்காரரை அடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாமல் இருவரும் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி 31ஆம் திகதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், நேரில் கண்டவர்களின் உதவியையும் நாடியுள்ளனர். இதுவரை இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.