• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம்: நான்கு ஈரானியர்கள் கைது

Byadmin

Mar 6, 2026


இலண்டனில் யூத சமூகத்தை குறிவைத்து உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை இலண்டன் மெட்ரோப்பொலிட்டன் பொலிஸார், வெள்ளிக்கிழமை அதிகாலை வட இலண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதிகளில் முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரானியர்; மற்ற மூவர் இரட்டை குடியுரிமை பெற்ற பிரிட்டன்–ஈரான் நாட்டு குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இலண்டனில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நபர்களை கண்காணித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

பார்னெட் மற்றும் வாட்ஃபோர்ட் பகுதிகளில் உள்ள முகவரிகளில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் இந்த கைது நடைபெற்றதாக ஸ்காட்லாந்து யார்டு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையை முன்னின்று நடத்தும் இலண்டன் எதிர் பயங்கரவாத பொலிஸ் பிரிவின் தலைவர் கமாண்டர் ஹெலன் ஃப்லானகன், இது நீண்டகாலமாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகும் என்றும், தீங்கிழைக்கும் செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், பொதுமக்கள் குறிப்பாக யூத சமூகத்தினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்கிடமான எந்த செயலையும் கவனித்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனுடன் தொடர்புடையதாக ஹரோ பகுதியில் மேலும் ஆறு பேர் “குற்றவாளிக்கு உதவியதாக” சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 10 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோப்பொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By admin