47
இலண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டமை வருத்தமளிக்கும் சம்பவம் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளமான X தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பல்கலைக்கழகங்கள் விவாதங்களுக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்குமான வெளிகளாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்களின் மூலம் அவற்றை மௌனப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல தலைமுறைகளின் அறிவாற்றல் பாரம்பரியத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலுடன் இருந்ததாகவும், அவை இரத்து செய்யப்பட்டமை தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், தனது கருத்துகளை கடுமையாக எதிர்ப்பவர்களுடன்கூட நேரடியாக விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆரோக்கியமான கருத்து மோதல்களை எப்போதும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி – நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து உரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பால் ரத்து!
மேலும், Oxford மற்றும் Cambridge பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த விவாத நிகழ்வுகளுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
