• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

இலண்டன் நகரில் ‘மெய்சிலிர்க்க வைத்த’ ஈழத்தமிழ் நாடக விழா | படங்கள் இணைப்பு

Byadmin

Mar 3, 2026


மெய்வெளி பிரித்தானியத் தமிழ் அரங்க இயக்கத்தின் ‘தமிழ் நாடக விழா 2026’ நிகழ்வு  நேற்றைய தினம் மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஒரே அரங்கில் நான்கு நாடகங்கள் நடைபெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சுயம் திறக்கும் பெருவெளி “மெளனச் சத்தம்”, நாடு பெயர்ந்தவனின் கோலக் கதை “எங்கட சனங்கள்”, காடு சொல்லும் காலக் கதையான “நாலெழுத்து மந்திரம்” மற்றும் நிலம் இழந்த நிம்மதியின் கதை “கனவுத் தேசம்” ஆகிய நான்கு நாடகங்கள் இடம்பெற்றன.

அரங்கப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட இவ் அரங்காடல் நிகழ்வு நீண்ட நாட்களின் பின்னர் நாடகம் குறித்த மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது. சிறந்த ஒழுங்கமைப்பும்  சிறந்த அரங்க ஆற்றுகையையும்  மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை ஏற்படுத்தியது.
நாடகக் கலைஞர்களாக சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பங்குபற்றி  ஒவ்வொரு தருணங்களையும் உணர்ந்து அதனை மகிழ்ந்து நாடகப் படைப்பாக மேடையேற்றியமை நாடக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியது.

இலண்டனில், குறிப்பாக பிரித்தானியாவில் நாடக அரங்காடலுக்கும் நாடக விழாவுக்கும் உள்ள தேவையை மெய்வெளி அரங்க இயக்கம் நிரப்பியுள்ளது. அதற்காக மெய்வெளிக் குழுமம் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது.
இந்த நிகழ்வில் ஈழத்தமிழ் நாடகப் பேராளுமை தாசீசியஸ் மாஸ்ரர் அவர்களுக்கு “கண்ணுளர்கோன்” விருதினை வழங்கி தங்கள் நாடகத்துறை ஆசானுக்கு கௌரவத்தினை வழங்கி மகிழ்ந்து கொண்டனர் மெய்வெளிக் குழுமத்தினர். தாசீசியஸ் மஸ்ரருக்காக பேராசிரியர் மு நித்தியானந்தன் அவர்கள் வழங்கிய மான்பேற்றும் உரை விழாவுக்கு சிகரம் அமைத்தது.

மெய்வெளி அரங்க இயக்க நிறுவனர்கள் சாம் பிரதீபன் மற்றும் ரஜித்தா சாம்பிரதீபன் ஆகியோரின் ஆற்றல்  பாராட்டுக்களுக்கு மேற்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு இரசித்துச் சுவைத்த பின்னர், மெய்வெளிக் குழுவினரின் கடும் உழைப்புக்கும் திறமைக்கும் தமது பாராட்டுக்களை கிளி மக்கள் அமைப்பும் வணக்கம் இலண்டன் இதழும் தெரிவித்துக்கொள்கிறது.

 

 

 

By admin