• Thu. Feb 12th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டன் பள்ளியில் கத்திக்குத்து: 13 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

Byadmin

Feb 12, 2026


வடமேற்கு இலண்டனில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களைக் கத்தியால் குத்திய விவகாரத்தில், 13 வயது சிறுவன் ஒருவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரெண்ட் (Brent) பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளியில் (Kingsbury High School) மதிய உணவு நேரத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது. இந்தத் தாக்குதலில் 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி – பள்ளியில் இரட்டை கத்திக்குத்து – 12, 13 வயது மாணவர்கள் தீவிர நிலையில்; 13 வயது சிறுவன் கைது!

கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் மீது கொலை முயற்சி தவிர, பள்ளி வளாகத்தில் கத்தி வைத்திருந்தமை மற்றும் மூன்றாவது சிறுவன் மீது பூச்சிக்கொல்லி தெளித்தமை போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சட்ட ரீதியான காரணங்களால் அந்தச் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரி ஹெலன் பிளனகன், “சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பள்ளி சமூகத்திற்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster Magistrates’ Court) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி தற்போது 7 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூடப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் பள்ளி முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin