2
பலவிதமான தாய்மொழி கொண்டவர்களைக்கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம் வாய்ந்தது, இசை.
அதிலும் திரை இசையை ரசிப்பதற்கும் உருவாக்குவதற்கும் எந்தவிதமான எல்லைக் கோடுகளும் கிடையாது.
எந்தப் பாட்டு தன்னை எப்படி கவர்ந்து பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதை, தீர்மானமாக சொல்லிவிடமுடியாது.
என்.டி.ராமராவ், பானுமதி நடித்த சண்டிராணி படத்தின்,”வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே” என்கிற பாடல்.
அப்போதைய மதுரை மாவட்டத்தில் பண்ணைபுரம் கிராமத்தில் பிறந்த ராசையா என்ற சிறுவனை துரத்தி துரத்தி அடித்தது இந்த பாடல்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இதே மாதிரியான பாடலை, அதே சிறுவன் வளர்ந்து இசையமைப்பாளராகி தனது குருநாதர் எம் எஸ் விஸ்வநாதன் உடன் சேர்ந்து இசை அமைக்கும்போது இதே பாடலை வேண்டி விரும்பி சேர்க்கிறார்.
அதுதான் மெல்லத் திறந்தது கதவு திறந்தது பட மெகா ஹிட் பாடலான,”வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே” பாடல்.
அந்த அளவுக்கு, தாம் சிறுவனாக இருக்கும்போது ராசையா என்கிற இளையராஜா அந்தகாலத்து திரையிசை ஜாம்பவான்களை அணு அணுவாக ரசித்திருக்கிறார்.
எஸ். வி. வெங்கட்ராமன் ஜி. ராமநாதன் எஸ்.எம். சுப்பையா நாயுடு கே. வி.மகாதேவன் எம்.எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி போன்றோர் இளையராஜாவின் மனதில் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
உற்று கவனித்தால் இளையராஜா அறிமுகமான காலகட்டத்தில் இசைக்காக ரொம்ப பாடல் வரிகளை சாகடிக்கும் போக்கு அவரிடம் இருந்திருக்காது.
இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில்,” ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” பாடலைக் கேட்டுப் பாருங்கள், எஸ்பிபி மற்றும் வாணி ஜெயராம் மாறி மாறி பாடும் போது இசையின் ஆதிக்கம் அதிகம் இருக்காது.
அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் வரும் “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாடலும் இதே போலத்தான். வாணி ஜெயராம் பாடுவதற்கு முன்னும் பின்னும் தான் இளையராஜா தெறிக்க விட்டிருப்பார். ஆனால் வாணி பாடும்போது அவரின் குரல் தான் விஸ்வரூபத்தில் இருக்கும்.
அறிமுகமானதிலிருந்து எம் எஸ் விஸ்வநாதன் டாமினேஷன் இருக்கும் வரை இளையராஜாவின் பாடல்கள் இப்படித்தான் இருந்தன.
எம்.எஸ்.வி, ஜி.கே வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்கள் இடம் பணியாற்றியதால், வெகுஜன மக்களுக்கான ரசனையின் அடி நாதத்தை இளையராஜா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். தோல்வியைப் பற்றிய பயம் என்றைக்குமே இளையராஜாவிடம் இருந்ததில்லை.
முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்.. இளையராஜா அலட்டிக் கொள்ளவே இல்லை.
ஒருவேளை தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமோ இயக்குனர்கள் தேவராஜ் – மோகனோ இதை பெரிய அபசகுனமாக எடுத்துக் கொண்டிருந்தால் திரையிசைப் பயணத்தில் இளையராஜாவுக்கு கொஞ்சம் தடங்கல் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார் இளையராஜா .
ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென ஒரு பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்.
களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய போது போட்ட பாடல்கள், அவற்றில் பறந்த மண்வாசனை, அப்பப்பா அத்தனையும் வியக்கத் தக்கவை.
அதனால்தான், இயக்குநர்கள் தேவராஜ்-மோகன் தொடர்ந்து கொடுத்த வாய்ப்பை அவர் தவறவிடவேயில்லை
“நான் பேசவந்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை”( பாலூட்டி வளர்த்த கிளி),
“ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” ( உறவாடும் நெஞ்சம்),
“கண்ணன் ஒரு கை குழந்தை” (பத்ரகாளி) என மிரட்சியான ஹிட் பாடல்களை கொடுக்க முடிந்தது.
இந்த மூன்று பாடல்களுமே அப்போது விவித பாரதியில் திரும்பத் திரும்ப ஒலித்தவை.
பத்ரகாளி படத்தில் “கேட்டேளே அங்கே அத பார்த்தேளா இங்கே” என்றொரு பாடல். அதாவது ரெக்கார்ட் டான்ஸ் பாடலை விரும்பும் கணவனை திருப்திப்படுத்துவதற்காக வீட்டிற்குள்ளேயே குடும்பப் பெண் ஒருத்தி பாடும் குத்து சாங்ஸ்.
உண்மையிலேயே “யாருடா இந்த இளையராஜா? யாருடா இந்த இளையராஜா?” என்று பலரையும் கேட்க வைத்த ஜனரஞ்சகமான பாடல் அது.
பத்ரகாளி மட்டுமல்ல அதற்குப் பின்பு இளையராஜா இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாடலுக்காக அவர் பெயரை பட்டிதொட்டி எல்லாம் பேச வைக்கும்படி பார்த்துக்கொண்டார்
நடிகர் திலகம் சிவாஜிக்காக முதன்முதலாக இசையமைத்த படம் தீபம்.
டிஎம்எஸ் பாடும் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்ற டூயட் பாடல். அதேபோல “பேசாதே, வாய் உள்ள ஊமை நீ ” என்று நடிகர் திலகத்திற்கு டிஎம்எஸ் பாடும் ஒரு தத்துவ பாடல்.
இரண்டுமே இளையராஜாதான் அடித்தார் என்பதை நம்ப பலரும் மறுத்தது மனம். எம்எஸ்வி பாடல் என்றே அவை கருதப்பட்டன.
தியாகம் படத்தில் இடம்பெற்ற “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி” பாடலும் இப்படித்தான் எம்எஸ்வி பாடல் என்றே விவரம் தெரியாதவர்கள் நம்பினார்கள்.
எதற்காக சொல்கிறோம் என்றால் எம்எஸ்வி இசை என்பது நமக்கு தாய்ப்பால் மாதிரி. அதனைத் தாண்டி வெளியே வர மிகவும் கஷ்டப்பட்டோம் .
வெளி நாடுகளில் படமாக்கப்பட்ட எம்ஜிஆரின் மாபெரும் வெற்றி காவியமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு அப்புறம் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டு இசையால் மிரட்டிய படம் ரஜினியின் பிரியா.
தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் ஸ்டீரியோபோனிக் இசை என்ற பெருமை கொண்ட படம். இளையராஜாவை பொருத்தவரை 1978ஆம் ஆண்டு அவருக்கு மிக சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம்.
ஒருபக்கம் கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் பாரதிராஜா படங்களில் இசையால் அடித்து மிரட்டிய இளையராஜா இன்னொரு பக்கம் ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது, ஏசி திருலோகச்சந்தர் எஸ் பி முத்துராமன் போன்ற இயக்குநரின் படங்களில் பட்டையை கிளப்பினார்.
அதேசமயம் பாடகர் என்ற அவதாரத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. வந்த புதுசில் ’16 வயதினிலே’ படத்தில் டைட்டில் சாங் “சோளம் விதைக்கையிலே சொல்லிவிட்டு போன புள்ள” என சொந்தக்குரலில் இளையராஜா பாடினார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு டூயட் பாடும் தைரியம் வந்தது.
ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த லட்சுமி என்று ஒரு படம். அதில் கதாநாயகியின் தங்கை தனது காதலனோடு பாடும் ஒரு பாடல். அதுதான் “தென்னை மரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக் கிளியே..”
எழுபதுகளின் இறுதியில் இந்தப் பாடல் எந்த அளவுக்கு துவம்சம் செய்தது என்பதை அப்போது இளைஞர்களாக இருந்தவர்களைக் கேட்டால் தான் தெரியும்.
இளையராஜா அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு வாய்த்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், அற்புதமான பாடலாசிரியர்கள் அத்தனை பேருடனும் அவர் இணைந்து பணியாற்றியதுதான்.
கண்ணதாசன், வாலி, முத்துராமலிங்கம் புலமைப்பித்தன் என அருமையான பட்டியல் அது.
பாடலுக்கான இசையை தாண்டி பின்னணி இசையிலும் கலக்கினால் இன்னும் உச்சம் தொடலாம் என்பது 1980களின் துவக்கத்தில் புரிந்துவிட்டது. அதனால்தான் அந்த ஏரியாவில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் சென்சார் போர்டு சர்டிபிகேட்டுக்கு அப்புறம் தவறாமல் இடம் பெற்ற பெயர்கள் தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகிய இருவர்.
1980களில் இதே நிலைமைதான் இளையராஜாவுக்கும் ஏற்பட்டது. ஓர் ஆண்டில் வெளியாகும் படங்களில் முக்கால்வாசி படங்களில் இளையராஜா இசைதான் என்றானது.
இளையராஜா என்ற இசை அமைப்பாளர் தொட்ட பாடல்கள் எல்லாம் பொன்னாய் விளைந்த காலம் அது.
எண்பதுகளின் மத்தியில் பாடல்களை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போய் பின்னணி இசையின் பலத்தை தூக்கி நிறுத்துவதில் பெறும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் இளையராஜா.
அதாவது பாடல்கள் வராத காட்சிகளிலும் இசையின் வீச்சு வெளிப்பட வேண்டும் என்பதில் துடிதுடிப்புடன் செயல்பட்டார்.
முதல் மரியாதை, நாயகன், தளபதி போன்ற படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த படங்களை டிவியில் போட்டு விட்டு பக்கத்து அறையில் படுத்துக்கொண்டு இசையை மட்டும் காதில் கேட்டால் அப்படியொரு அலாதியான சுகம் கிடைக்கும். படம் முழுக்க இசையை அருவியாக ஓடவிட்டிருப்பார்.
மேலே சொன்ன மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. படம் வெளிவந்த கால கட்டங்களில் இளையராஜாவின் பின்னணி இசை பெரிதும் பேசப்படவில்லை பாடல்கள் மட்டுமே பேசப்பட்டன.
ஆனால் காலம் போக போக, இந்த படங்கள் டிவிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் போது தான், ஒவ்வொரு காட்சியிலும் இளையராஜா என்ற ஜாம்பவான் பின்னணி இசையில் எப்படி பிரித்து மேய்ந்திருக்கிறார் என்பதே புரிய ஆரம்பித்தது.
வெறும் பின்னணி இசையை ஓட விட்டாலுமே படத்தில் அது எந்த காட்சி என்று எளிதாக சொல்லிவிடும் அளவிற்கு இளையராஜா தனி ராஜாங்கம் நடத்தி இருப்பார்.
தேனிசைத் தென்றல் தேவா எஸ்.ஏ. ராஜ்குமார், சிற்பி, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ் போன்றோர் கலந்து கட்டி ஆடிய 90 களிலும் இளையராஜாவின் இசை ஓயவில்லை இசை.
புதிய இசையமைப்பாளர்களால் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட இளையராஜாவின் அப்போதைய பாடல்கள், இந்த காலகட்டத்தில் தான் தோண்டியெடுக்கப்பட்டு முழு உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கின்றன.
“வில்லோடு அம்புரெண்டும் கொல்லாமல் கொல்லுதே’ என்ற ராஜராஜ சோழன் நான் என்ற பாடல், இரட்டைவால் குருவி படம் வந்த போது சாதாரண பாடலாக தான் கடந்து சென்றது.
இன்று அந்தப் பாடலை வைத்து எத்தனை ஆயிரம் ரீல்ஸ்கள்!
பிள்ளை நிலா படத்தின் “ராஜா மகள் ரோஜா மலர்” பாடல் கூட இப்படித்தான். இளையராஜாவின் இந்தப் பாடலை அக்கு அக்காக பிரித்து இன்று எத்தனை வகையான ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில்.
திரையிசையில் தாம் தான் என ஒரு நிலை உருவானபோது…80 களின் மத்தியில் தென்றலே என்னைத்தொடு. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, சிந்து பைரவி ஆண்பாவம்..உதயகீதம். காக்கிச்சட்டை, புன்னகை மன்னன், மௌனராகம், நாயகன் என அவரின் இசை, அப்போது தொடர்ந்து தாக்கிய சுனாமிகளே..
கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சில் மோகன் கதாநாயகனாக மைக் பிடித்துக்கொண்டு நின்றால் மட்டும் போதும், இளையராஜாவின் பாடல்களை போட்டு ஹிட்டாக்கி வெள்ளிக்காசுகளை மூட்டை மூட்டையாக கொட்டவைத்த வரலாறெல்லாம் வியப்பானவை. மினி மைக் முரளியும் இதே வரிசையை சேர்ந்தவர்தான்.
டவுசர், மாடு, குடிசை வீடு காமாச்சி, மீனாச்சி என ஏதாவது இரண்டு மூன்று பெண் கேரக்டர்கள். ஹீரோவாக ராமராஜன். அப்புறம் ஒரே தேவை . இவரின் இசை. எல்லாமே பாட்டுக்காக ஓடி வசூலை வாரி வாரி குவித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்ததையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே போடணும்.
நம்மைப் பொருத்தவரை அவரின் முதல் பத்தாண்டுகள் இன்றளவும் வியப்பாகவே உள்ளது.
ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)
நானே நானா யாரோ..(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
சின்னப்பொன்னுசேலை (மலையூர் மம்பட்டியான்)
பூமாலையே தோள் ( பகல் நிலவு)
ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதர்கள்)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( தளபதி)
ஆனந்த தேன் காற்று..(மணிப்பூர் மாமியார் படம் வரவில்லை)
பூங்காற்று திரும்புமா ( முதல் மரியாதை)
1980 களின் துவக்கத்தில் பூஜை போடப்பட்ட
மணிப்பூர் மாமியார் படத்தில் ஒரு பாடல்..
ரசிகனே என் அருகில் வா என இளையராஜாவே பாடி கலக்கிய பாடல் அது.. அதில் கடைசியாக இப்படி வரும்..
”தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.”
இளையராஜாவின் வாழ்வில் என்னாளும் நல்ல இன்பம் தான்.
அன்னக்கிளி படம் இசைக்காக போற்றப்பட்டும் அன்றைய முன்னணி வார இதழ் அவரைப் பற்றி ஒரு வரி கூட விமர்சனத்தில் குறிப்பிடவில்லை.
நானூறாவது படமான நாயகனில் முழுக்க முழுக்க இசைஞானியின் ராஜாங்கம் தான் என்றாலும், படத்தின் விமர்சனத்தில் இசையமைப்பாளர் இளையராஜா என்பவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கிண்டல் அடித்தது அதே முன்னணி வார பத்திரிகை .
இதோ இன்றும் இளையராஜா இருக்கிறார் ஜாம்பவானாக இருக்கிறார்.
இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் பட்டம் இளையராஜாவை எப்போதோ வந்தடைந்து விட்டது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினராக கால் பதிக்கும் வாய்ப்பும் மூன்றாண்டுகளுக்கு முன்பே கிடைத்து விட்டது.
கடந்த மார்ச் எட்டாம் தேதி லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரங்கில் ஒரு இசைமேதையின் வாழ்நாள் கனவான சிம்பொனியை இசைத்து உலகையே வியக்க வைத்த தருணமும் இசைஞானிக்கு வசப்பட்டு விட்டது.
இசைஞானி இளையராஜாவுக்கு இது பொன்விழா ஆண்டு.
1976 இல் முழு இசையமைப்பாளராக அறிமுகமாகி 49 ஆண்டுகளைக் கடந்து 50-வது ஆண்டில் இன்றும் திரையிசை இளையராஜா வசம்.
இந்த ஆண்டிலும் அவர் கையில் பல படங்கள்.
இன்று 82 ஆவது பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜா இன்றும் இளைஞனைப் போல் இசை உலகில் துள்ளித் திரிந்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்.
நன்றி : பத்திரிகை.காம்