• Mon. Oct 20th, 2025

24×7 Live News

Apdin News

இஷாரா செவ்வந்தி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

Byadmin

Oct 20, 2025


நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘ பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை படுகொலை செய்வதற்கு முன்னைய நாள் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனிய பிரதேசத்தில் தங்கியிருந்தோம். இதன்போது “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார். பின்னர் நானும் “கமாண்டோ சலிந்து”வும் கொழும்புக்கு சென்றோம். இதனையடுத்து நான் சட்டத்தரணி வேடத்தில், புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்ய உதவி செய்தேன்‘ என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இஷாரா செவ்வந்தியும் “கமாண்டோ சலிந்து”வும் அருண விதானகமமகே ஹேவத் கஞ்சா என்பரை கொலைசெய்வதற்காக மித்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலைசெய்வதற்காக இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin