பட மூலாதாரம், Getty Images
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப் பிறகு அந்த எல்லை பாகிஸ்தானுடனான எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் மிகவும் ஆழமானதாக உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்விரு நாடுகளுக்குமான ரஜ்ஜீய ரீதியிலான உறவு 1950 மார்ச் 15-ல் ஆரம்பமானது. ஆனால் 1979-ஆம் ஆண்டு இரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அனைத்தும் வேகமாக மாறின.
1978-ஆம் ஆண்டு துவங்கி 1993-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இவ்விரு நாட்டுப் பிரதமர்கள், அதிபர்கள் பரஸ்பர நாடுகளுக்கு வருகை புரியவில்லை.
1993 செப்டம்பரில், அன்றைய இந்திய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இரானுக்குச் சென்றார். ஒரு வருடத்திற்கு முன்புதான், அதாவது 1992-ல், இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்த அவர் விரும்பினார்.
மேற்கு ஆசியாவில் உள்ள இரான், உலக விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வருகிறது. அதே போன்று உலக நாடுகள் ஒரு நாட்டின் உத்தரவின் கீழ் செயல்படக்கூடாது என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்தியா பல்முனை கொண்ட உலகைப் பற்றி பேசுகிறது. பனிப்போர் 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனை பிளவுபடுத்தி முடிவுக்கு வந்தது. உலகம் இருமுனையில் இருந்து ஒற்றைத்துருவ அதிகாரத்தின் கீழ் வந்தது.
ஆனால் தற்போது அமெரிக்கா, பொருளாதார ரீதியில் சீனாவின் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது.
இரான் ஒன்றும் வல்லரசு இல்லை. ஆனால் அமெரிக்கா அதிகாரத்தின் கீழ் இயங்கும் உலகத்தில் இரான் ஒரு முள்ளாகவே இருக்கிறது. அதுவும் 1979-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு.
தற்போது இஸ்ரேல் இரானை தாக்கியது. இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
பல முனை உலகில் என்ன நடைபெறும்?
மற்றொரு புறம் இரான் தனித்துவிடப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இரானுக்கு உதவவில்லை. இந்தியா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் கூட பதிவிடவில்லை.
இது போன்ற சூழலில், மேற்கு ஆசியாவில் இரான் வலுவிழந்தால், இந்தியா விரும்பும் பல்முனை உலகில் எத்தகைய மாற்றம் ஏற்படும்? என்ற கேள்வி எழுகிறது.
மேலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் வலிமையடைந்து வருகின்ற சூழலில் இந்த பல்முனை உலகிற்கான இந்தியாவின் கனவு நிஜமாகுமா?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மேற்காசியப் பாடப்பிரிவு மையத்தின் பேராசிரியராக இருக்கும் அஷ்வினி மாஹபத்ரா, ”இரான் தோல்வி அடையும் பட்சத்தில் பல்முனை உலகம் குறித்த கருத்தாக்கத்தில் பின்னடைவு ஏற்படலாம். மேற்காசியாவில் இருக்கும் இரானை பலவீனப்படுத்திய பிறகும் அமெரிக்காவால் நினைத்ததை செய்வது கடினம்” என்று குறிப்பிட்டார்.
“மேற்காசியாவின் புவி அரசியல் மிகவும் சிக்கலானது. ஒரு தனி நாடு, தலைவர் இங்கே ஆதிக்கம் செலுத்த இயலாது. இரானில் அதிகார மாற்றம் என்பது ஏற்படாது. இந்த செயல்பாடுகளால் இரான் பலவீனம் அடைந்தாலும் இஸ்ரேலோ அமெரிக்காவோ மேற்காசியாவை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாது. இரான் பலவீனம் அடைந்தால் மேற்காசியாவில் ஸ்திரமற்ற தன்மை தீவிரமாகும். இராக், லிபியா மற்றும் சிரியாவில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா. ஆனால் அங்கே அதன் ஆதிக்கத்தை அதிகரிக்க முடிந்ததா? ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்புகிறார் மஹாபத்ரா.
“இரான் தோற்கடிக்கப்பட்டாலும் கூட, அமெரிக்காவால் அதன் ஆதிக்கத்தை நீண்ட காலத்திற்கு மேற்காசியா மீது செலுத்த இயலாது, பல நாடுகள் மேற்காசியாவில் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டன. அதுவும் மேற்கத்திய நாடுகளால் ஏற்படுத்தப்பட்டன. உலக அரசியல் தற்போது ஒற்றை துருவத்தின் கீழ் செயல்பட இயலாது,” என்றும் கூறுகிறார் மஹாபத்ரா.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு இரான் எவ்வளவு முக்கியமானது?
சௌதி அரேபியாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தல்மிஸ் அஹ்மது இது குறித்து பேசும் போது, “இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையேயான மோதலை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. தெற்கு உலகம் (Global South) தொடர்பான நம்முடைய பார்வை மாறிவிட்டது. அதே போன்று அணிசேரா கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான மோதலில் இந்தியா எந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதில் தெளிவில்லை. அதில் குழப்பம் இருப்பதை நான் பார்க்கிறேன்,” என்று கூறினார்.
“வெளியுறவுக் கொள்கைகளில் இந்த அரசு ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை என்று நம்புகிறேன். உள்ளூர் அரசியலில் மட்டுமே ஆர்வம் செலுத்துகிறது. நம்முடைய தலைவர்கள் இந்தியாவின் அடிப்படை மதிப்புகளை மாற்ற முடியும் என்று நினைக்கின்றனர். இத்தகைய அணுகுமுறை சமீபத்திய நாட்களில் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெளியுறவுக் கொள்கை நம் தலைவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அதே நேரத்தில் நாட்டின் கண்ணோட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்மதிப்பை ஏற்படுத்தும்” என்றும் தல்மிஸ் கூறுகிறார்.
டிரம்ப் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரானுடனான வர்த்தக உறவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டது இந்தியா. தற்போது வர்த்தக மதிப்பானது ஒரு பில்லியன் டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது.
முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபிலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், ”இந்தியாவின் வெளியுறவுத்துறை விவகாரங்களில் உள்நாட்டு அரசியலின் தாக்கம் அதிகமாக இருப்பது போன்று தோன்றுகிறது. இது இந்தியாவின் நலன்கள் சார்ந்ததாக இல்லை” என்று குறிப்பிட்டார்.
சிவசங்கர் மேனன் இஸ்ரேலுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
”90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றனர். பில்லியன் கணக்கில் சம்பாதித்து அதனை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவின் எண்ணெய் தேவையும் அந்த பிராந்தியத்தை அதிகம் சார்ந்துள்ளது. நம்முடைய அண்டைய நாடுகளில் போரின் நெருப்பு பற்றிக் கொள்ளும் போது நம்முடைய நலன்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பிகிறார்.
முன்னாள் தூதரக அதிகாரிகளான தல்மிஸ் அஹ்மது மற்றும் விவேக் கத்ஜு போன்றோரும் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
வளைகுடா நாடுகளில் இந்தியாவுக்கு நற்பெயர் இருந்தது. ஆனால் இஸ்ரேல் – இரான் மோதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு அந்த நற்பெயருக்கு மோசமான பாதிப்பை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
இது குறித்து விரிவாகப் பேசும் தல்மிஸ் அஹ்மது, “இந்தியா அமெரிக்காவுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக உணர்த்திவிட்டது. தற்போது விவாதிக்கக் கூடிய அளவுக்கு இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே வலுவான உறவு என்ற ஒன்றில்லை. கச்சாப் பொருட்களோ, எரிவாயுவோ நாம் இரானிடம் இருந்து பெறவில்லை. கூட்டு ஸ்தாபனங்கள் என்றும் கூட ஒன்றும் எல்லை. சபஹாரில் எந்த விதமான முன்னேற்றத்தையும் நம்மால் காண இயலவில்லை. இந்தியாவுக்கு இதில் அதிக ஆர்வம் இல்லை என்ற தெளிவான செய்தியை இரான் உணர்ந்து கொண்டது,” என்று கூறினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மேற்காசியப் பாடப்பிரிவு மையத்தின் துணைப் பேராசிரியரான முனைவர் முதாஸிர் கமார், மேற்காசியா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு சமநிலையில் இருப்பதாக கருதுகிறார்.
“இந்தியா இரானைக் காட்டிலும் இஸ்ரேலுக்கு அதிக முக்கியத்துவம் தர காரணங்கள் இருக்கின்றன. இஸ்ரேலுடனான இரு நாட்டு உறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்கு ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கிறது. இந்தியாவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது.” என்று அவர் கூறினார்.
“இந்திய வெளியுறவு கொள்கைக்கு மிகப்பெரிய சவாலாக இரான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு இரான் மிகவும் முக்கிய நாடு. ஏன் என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து, மத்திய ஆசியாவுக்கு செல்வதற்கான வர்த்தக வழிகள் இரான் மூலமே சாத்தியமாகும்.
பாரசீக வளைகுடா குறித்து பேச்சு எழும் போதெல்லாம் இரான் இந்தியாவுக்கு ஒரு சுமையாக மாறிவிடுகிறது. ஏன் என்றால் இந்த பிராந்தியத்தில் எந்த நாட்டிற்கும் இரானைப் பிடிக்கவில்லை. அங்கே பிரச்னை நீடிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு சவாலாக இல்லை. மாறாக உதவியே செய்கிறது,” என்று விவரிக்கிறார் அவர்.
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?
கடந்த வாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது. இந்தியாவின் நிலைப்பாடு வெளியுறவுக் கொள்கைகளில் வளர்ந்து வரும் சவாலாக மாறி வருகிறது.
நெருக்கடியான காலகட்டங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் சமநிலையில் கடைபிடிக்கிறது இந்தியா.
ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. உண்மையில் முந்தைய காங்கிரஸ் அரசுகளும் இதே நிலைப்பாட்டை மோதல் போன்ற சூழலில் எடுத்துள்ளது.
ஹங்கேரியில் சோவியத் யூனியனின் தலையீட்டிற்குப் பிறகு, ஓராண்டு கழித்து, 1957-ல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர் இந்தியா ஏன் சோவியத் யூனியனை இந்த தாக்குதலின் போது கண்டிக்கவில்லை என்பதை விளக்கினார்.
“இந்த உலகில் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பல நாம் விரும்பாததும் அடங்கும். பிரச்னைக்கு ஒருவர் தீர்வு காணும் போது எந்தவிதமான கண்டனமும் உதவாது. எனவே நாம் கண்டிக்கத் தேவையில்லை,” என்று நேரு தெரிவித்தார்.
சோவியத் யூனியன் 1956-ல் ஹங்கேரி, 1968-ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாகியா,1979-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு ராணுவத்தை அனுப்பியபோது இந்தியாவின் நிலைப்பாடு ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. 2003-ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கை தாக்கிய போதும் அதே நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில் மோதியின் நிலைப்பாடும் அதே போன்று தான் இருக்கிறது.
1978-ஆம் ஆண்டு இஸ்ரேல், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகளுடன் சேர்ந்து கேம்ப் டேவிட் என்ற ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
இதன் கீழ் சில நாடுகள் இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவை ஏற்படுத்த முடிவு செய்தன. இதே ஒப்பந்தம்தான், இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்தது.
அமெரிக்கா இரான் இடையேயான உறவு
அமெரிக்கா மீதான இரானின் எதிர்ப்பு மன நிலை 1953-ல் ஆரம்பமானது. அந்த ஆண்டு தான் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ, பிரிட்டனுடன் இணைந்து இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது.
அமெரிக்கா வெளிநாட்டின் தலைவர் ஒருவரை அமைதியான முறையில் பதவியில் இருந்து நீக்கியது இதுவே முதல்முறை. அதன் பிறகு அமெரிக்காவுடன் தொடர்புடைய பல்வேறு ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறியுள்ளன.
1953-ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பின் எதிர்வினையே 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட இரானியப் புரட்சி. அந்த புரட்சிக்குப் பிறகு இரானில் நடைபெற்று வரும் ஆட்சியே இன்றும் நீடிக்கிறது. அதை அமெரிக்கா இன்று வரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறது.
இந்த நெருக்கடியில் இருந்து எப்படி வெளியே வருவது என்று இரானுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறுகிறார் தல்மிஸ் அஹ்மது.
“சதாம் ஹுசைன் இரானைத் தாக்கிய போது, லட்சக்கணக்கான இரானியர்கள் கொல்லப்பட்டனர். பல நகரங்கள் அழிந்து போயின. ஆனால் இரான் மீண்டு வந்தது. தற்போதும் பிரச்னையில் சிக்கியிருக்கிறது இரான். ஆனால் மீண்டு வரும்,” என்று கூறுகிறார் அஹ்மது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு