பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Islamic Cooperation (OIC) இரண்டாவது உச்சி மாநாடு 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது.
செளதி அரேபியாவின் அப்போதைய மன்னர் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தும் அந்த மாநாட்டில் இருந்தார்.
அந்த மாநாட்டில் உரையாற்றிய அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் சுல்ஃபிகர் அலி பூட்டோ, “நாங்கள் ஓர் ஏழ்மையான நாடு. எங்களுக்கு குறைவான அளவிலேயே வளங்கள் உள்ளன, பொருளாதார நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஒதுக்க போதுமான பணம் எங்களிடம் இல்லை. எங்களால் அந்த முறையில் பங்களிக்க முடியாது. ஆனால் அல்லாஹ்வை என் சாட்சியாக வைத்துக்கொண்டு சொல்கிறேன், இஸ்லாத்துக்கு ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் தர தயங்க மாட்டோம். இது வெறும் வார்த்தையல்ல. பாகிஸ்தானின் மக்கள் அல்லாஹ்வின் வீரர்கள், பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் அல்லாஹ்வின் வீரர்களும்தான். எதிர்காலத்தில் அதுபோன்ற ஏதேனும் மோதல் ஏற்பட்டால், பாகிஸ்தான் உதவுவதற்கு நிற்கும்,” என்று கூறியிருந்தார்.
இஸ்லாத்துக்கு ரத்தம் சிந்த தயாராக இருப்பதாக சுல்ஃபிகர் அலி பூட்டோ சூளுரைத்துக் கொண்டிருந்த நேரத்தில், இரானில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றிருக்கவில்லை. சதாம் ஹுசைன் இரான் மீது தாக்குதல் நடத்தியிருக்கவில்லை. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்திருக்கவில்லை. செளதி அரேபியா யேமனை தாக்கவில்லை. செளதி, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை கத்தாருக்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை.
வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்திருந்தது. இருந்தும், இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சுல்ஃபிகர் பூட்டோ விரும்பியதாகத் தோன்றியது.
இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் விரும்புகிறது. பாகிஸ்தான் அணுகுண்டை தயாரித்திருந்தாலும், மேற்குலகம் பல இஸ்லாமிய நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக தங்கள் விருப்பம்போல் அரசுகளை மாற்றத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக, இராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசுகள் இருக்கவில்லை. தற்போது இரானிலும் இது நடப்பதாக தோன்றுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானே உதவி செய்தது.
இஸ்லாமிய நாடுகளுக்கிடையே முரண்பாடுகள்
பட மூலாதாரம், Getty Images
இரான் மீது ஜூன் 12ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது, இந்தத் தாக்குதல்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பதிலடியாக இரானும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கியது. இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதலின் தாக்கம் மேற்காசியா முழுவதும் உணரப்படுகிறது. இந்த மோதலை இஸ்லாத்துக்கு எதிரான போராகவும் பலர் சித்தரிக்கிறார்கள்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதைப் போன்ற ஒரு சூழலில், இஸ்லாமிய நாடுகளால் ஒன்றிணைய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது கேள்வி பாகிஸ்தான் ஏன் திரும்பத் திரும்ப இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை குறித்து பேசுகிறது? உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகள் பரஸ்பர மோதல்களிலும் முரண்பாடுகளிலும் மூழ்கியுள்ளன.
செளதி அரேபியா மற்றும் இரான் இடையேயான விரோதம் இன்னமும் முடியவில்லை.
இந்தப் பகைமை, சுன்னி மற்றும் ஷியா மோதலையும் தாண்டி, செளதி அரேபியாவின் அரச மரபு ஆட்சிக்கு எதிராக இரானின் இஸ்லாமியப் புரட்சியாக இருந்து வருகிறது. அஜர்பைஜான் ஷியா மக்கள் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் நாடு, ஆனால் அது இஸ்ரேலுடன் நெருக்கமாக உள்ளது. அதேநேரம் ஷியா பெரும்பான்மை உள்ள இரானுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ளது.
இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, சதாம் ஹுசைனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த போது, இரான் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கவில்லை.
இரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்த அதே ஆண்டில், எகிப்து இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து, தூதரக உறவுகளை ஏற்படுத்த முடிவு செய்தது. ஜோர்டான் 1994-ல் இஸ்ரேலை அங்கீகரித்தது.
2020-ல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
துருக்கியின் இரட்டை நிலைப்பாடு
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தியதற்காக துருக்கி அவற்றை விமர்சித்து வந்தது. ஆனால், துருக்கி தானே இஸ்ரேலுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. துருக்கியும் இஸ்ரேலும் 1949 முதல் தூதரக உறவுகளைப் பேணி வருகின்றன.
இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு துருக்கியாகும்.
2005ஆம் ஆண்டு, துருக்கியின் அதிபர் எர்துவான், ஒரு பெரிய வணிகர் குழுவுடன் இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றார். அந்தப் பயணத்தில், அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோனை சந்தித்து, இரானின் அணு ஆயுதத் திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதற்கும் அச்சுறுத்தல் என்று கூறியிருந்தார்.
இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுகிறது.
செளதி அரேபியாவுக்கான இந்தியாவின் தூதராக இருந்த தல்மீஸ் அகமதிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது.
தல்மீஸ் அகமது கூறுகையில், “பாகிஸ்தான் மீது தற்போது பெரும் அழுத்தம் உள்ளது. இந்தியாவுடன் ராணுவ மோதல் ஏற்பட்டு, கணிசமான பாதிப்பையும் அவர்கள் சந்தித்துள்ளனர். தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டுவதற்காக பாகிஸ்தான் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகிறது. துருக்கியுடன் அவர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகரித்துள்ளனர், இரானுடனான தங்களது உறவை அதிகரிக்க விரும்புகிறார்கள். பாகிஸ்தான் முன்பு ஆப்கானிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் மூலம் மூலோபாய நன்மைகளைப் பெறுவதாகக் கூறியது. துருக்கி, இரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பனிப்போர் காலத்திலிருந்தே நெருக்கமாக இருந்திருக்கின்றன. இப்போது பாகிஸ்தான் அதற்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கிறது.” என்றார்.
“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பயனற்றதாகி விட்ட நிலையில், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான OIC ஏற்கெனவே முக்கியமற்றதாகிவிட்டது. முதலாவதாக, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்னை இஸ்லாம் தொடர்பானது அல்ல. இது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இது ஒரு மூலோபாயப் போட்டியாகும். இது ஒரு நீண்டகாலப் பகைமையாகும், இது பிராந்தியத் தலைமைத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கு இஸ்லாமிய அடையாளம் கொடுப்பதில் எந்தப் பொருளும் இல்லை. துருக்கியின் பாகிஸ்தானுடனான உறவு இஸ்லாத்தின் காரணமாக இல்லை. பாகிஸ்தானின் இரானுடனான உறவு இஸ்லாத்தின் காரணமாக இல்லை. எப்போது பார்த்தாலும் இஸ்லாமை இதில் இழுப்பது யாருக்கும் அழகல்ல,” என கூறுகிறார்.
பாலத்தீனப் பிரச்னை இஸ்லாமியர் பிரச்னையா?
பட மூலாதாரம், Getty Images
“அனைத்து அரபு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் உள்ளன. வளைகுடா முழுவதும் 70,000 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தாங்கள் நிலை கொண்டுள்ள தளங்களுக்கு வெளியேயும் உரிமைகள் (எக்ஸ்ட்ரா டெரிடோரியல் ரைட்ஸ்) உள்ளன. அதாவது, அந்த நாடுகளின் சட்டங்கள் இவர்களுக்கு பொருந்தாது. அந்த தளங்களை நிர்வகிக்க அமெரிக்காவுக்கு முழு தன்னதிகாரமும் உள்ளது. இந்த விசயத்தில் எந்த அரபு நாட்டாலும் அமெரிக்காவைத் தடுக்க முடியாது. இஸ்ரேலின் டிரோன்கள் ஜோர்டான் வழியாகத்தான் வருகின்றன. இந்த டிரோன்களைத் தடுத்திருக்க வேண்டியது ஜோர்டானின் பொறுப்பு. பல ட்ரோன்கள் ஜோர்டானிலேயே விழுந்து விடுகின்றன. டெல் அவிவுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே 2,000 கிலோமீட்டர் தூரம் உள்ளது, ஆனாலும் டிரோன்கள் மூலம் போர் நடைபெறுகிறது.” என தல்மீஸ் அகமது கூறுகிறார்.
இராக் முற்றிலும் அமெரிக்காவின் போராக இருந்ததால், இரானை இராக்குடன் ஒப்பிட முடியாது, என்கிறார் தல்மீஸ் அகமது.
“1967-க்கு முன்பு பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்னை அரபு நாடுகளின் பிரச்னையாக இருந்தது. ஆனால், 1967-ல் அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பிறகு, இது இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பிரச்னையாக மட்டுமே மாறியது. இதற்கு யாராவது தீர்வு காண முடியுமானால், அது இஸ்ரேலும் பாலத்தீனர்களும் தான்,” என அவர் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகள், பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் இரானுக்கு எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்று விரும்புகின்றன. ஆனால், இரான், பாகிஸ்தான் தங்களுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பனிப்போர் காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டணியில் இருந்தது, எனவே, இரானுடன் செல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.
பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல், ஜூன் 18 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மதிய உணவின் போது சந்தித்தார். இது இரான்-இஸ்ரேல் போருடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி கே.சி. சிங், எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “இதற்கு இரண்டு பொருள் இருக்கலாம். ஒன்று, அமெரிக்கா இரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை டிரம்ப் புரிந்து கொள்ள முயல்கிறார் அல்லது ஏற்கெனவே இரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க முடிவு செய்துவிட்டு, டிரம்ப் பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்க்கிறார்.” என தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் புவிசார் அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் மைக்கேல் குகல்மேன் தன் பதிவில், “இரானின் தற்போதைய அரசு எதிர்காலத்திலும் தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இரானுடன் பாகிஸ்தானின் நெருக்கம் வலுப்படும். செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே உறவை மேம்படுத்துவதற்கு சாதகமான சூழல் உருவாகும்.” என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளிடம் ஆதரவில்லாத நிலை
பட மூலாதாரம், Getty Images
பேச்சளவில் ஒன்றாக இருப்பதற்கும், உண்மையில் ஒன்றாக இருப்பதற்கும் ஒரு வேறுபாடு இருப்பதாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தில் இணைப் பேராசிரியராக இருக்கும் முகமது முதஸ்ஸிர் காமர் கூறுகிறார்.
முகமது முதஸ்ஸிர் காமர் கூறுகையில், “இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான பகைமைக்கு முக்கிய காரணம் ஷியா மற்றும் சுன்னி மோதல் மட்டுமல்ல. புவிசார் அரசியல் காரணங்கள் அதைவிட முக்கியமானவை. கத்தாரில் அமெரிக்காவின் விமானப்படைத் தளம் உள்ளது, இஸ்ரேல் இந்தத் தளத்தைப் பயன்படுத்தினால், அதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுக்கும் நிலையில் கத்தாரும் இல்லை. சீனாவின் முயற்சியால் இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது, ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இரான் மீதான அச்சம் இன்னும் குறையவில்லை.” என்றார்.
முகமது முதஸ்ஸிர் காமர் மேலும் கூறுகையில், “அரபு இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல், இரான் இரண்டை பார்த்துமே அஞ்சுகின்றன. இரானோ, இஸ்ரேலோ மிகவும் வலிமையடைவதை வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகள் விரும்பவில்லை. இரண்டு சூழ்நிலைகளிலும், இவர்களுக்கு சிக்கல்கள் உள்ளன. வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளிகள். எனவே, அமெரிக்காவின் மீது இவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளது. ஆனால், இரான் மீது இந்த நம்பிக்கை இல்லை. 1979-க்குப் பிறகு, 2025-ல் இரானின் நிலை மிகவும் பலவீனமடைந்துள்ளது என்பது தெளிவு. இருப்பினும், இந்தப் பிராந்தியத்தில் இரான் இன்னமும் வலிமையான நாடாகவே உள்ளது. சௌதி அரேபியாவால் இன்னமும் இரானுடன் நேரடியாகப் போரிட முடியாது.” என்றார்.
அமெரிக்கா 2003 மார்ச் மாதத்தில் இராக் மீது தாக்குதல் நடத்தியபோது, இரான் அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சதாம் ஹுசைனுடன் இரானுக்கு ஒத்துவரவில்லை. அமெரிக்கா ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோதும் கூட இரான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முகமது முதஸ்ஸிர் காமர் கூறுகையில், “இரான் எப்போதும் சதாம் ஹுசைனை ஒரு அச்சுறுத்தலாகவே பார்த்தது. ஆனால், அமெரிக்கா சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை வழங்கியது, அவர் இரானுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதால் அல்ல. அமெரிக்காவுக்கு அதன் சொந்த காரணங்கள் இருந்தன. இராக்கில் உள்ள ஷியா மக்களுக்கு ஆதரவாக இரான் எப்போதும் இருந்து வந்துள்ளது. தற்போது இரான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இரான் அமெரிக்காவுடன் நேரடியாக மோத வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி நடந்தால், இந்த மோதல் ஒரு தீர்வை தருவதாக இருக்கக்கூடும்.”
முகமது முதஸ்ஸிர் காமர் கூறுகையில், “இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் மிகவும் ஆழமானவை, அவற்றிலிருந்து அவை இதுவரை விடுபட முடியவில்லை. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக் போன்ற அமைப்புகள் உள்ளன, ஆனால் அவை பெயரளவில் மட்டுமே உள்ளன,” என கூறுகிறார்.
2003-ல் எர்துவான் துருக்கியின் பிரதமரானபோது, அமெரிக்கா இராக்கின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருந்தது. எர்துவான் சதாம் ஹுசைனுடன் நெருக்கமாக இல்லை. இராக்குக்கு எதிரான போரில் துருக்கியின் நிலப்பகுதியைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்கவும் அவர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், அவரது இந்த முன்னெடுப்பு துருக்கி நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் எர்துவானின் எண்ணம் நிறைவேறவில்லை, அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தும் இது நடந்தது. இந்த முடிவால் அப்போதைய புஷ் நிர்வாகம் மிகவும் கோபமடைந்தது. இருப்பினும், துருக்கியின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு எர்துவான் அனுமதி வழங்கியிருந்தார்.
ஒருபுறம், எர்துவான் முஸ்லிம் சுயமரியாதை மற்றும் அதன் நலன்களைப் பற்றி பேசுவது, மறுபுறம் இராக்கின் மீதான அமெரிக்கத் தாக்குதலை ஆதரித்தார். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டவையாக இருந்தன.
இரான் தோல்வியடைந்தால் என்ன நேரும்?
பட மூலாதாரம், Getty Images
இப்போது இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், எர்துவான் மீண்டும் தீவிரமாக கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்புதான் சிரியாவில் இருந்த இரான் ஆதரவு அரசு துருக்கியின் உதவியுடன் தூக்கி எறியப்பட்டது.
ஒரு வகையில், சிரியாவில் துருக்கியின் கைகளால் இரான் தோல்வியை சந்தித்தது.
எர்துவான் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ஒரு நீண்ட பதிவில் இஸ்ரேல் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்:
“இஸ்ரேல், மேற்கத்திய நாடுகளின் பரந்த ஆதரவுடன் இரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் காஸாவை அழித்து இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு நாட்டையும் அச்சுறுத்தியிருக்கிறது. தாம் என்ன செய்கிறோம் என்பதையே உண்மையில் இஸ்ரேல் உணரவில்லை.”
“எதிர்காலத்தில் இஸ்ரேல் தனது தவறை உணரலாம், ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுமோ என அஞ்சுகிறோம். பண்டைய காலத்தில் எந்த நாட்டுக்கும் தனித்த எல்லைகளோ, நிர்வாகமோ இல்லை என்பதை இஸ்ரேல் மறந்துவிடக் கூடாது. பாலத்தீன மக்கள் மற்றும் அவர்களின் நிலங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சில லட்சம் பேர் மீதானது மட்டுமல்ல. இப்போது இஸ்ரேல் இரானையும் அங்குள்ள மக்களையும் தாக்கியுள்ளது, இந்தத் தாக்குதல் இரானுக்கு மட்டும் கவலையளிக்கும் விஷயமல்ல. இந்த விவகாரம் துருக்கியை எட்டும்போது, அதன் வீச்சு மேலும் விரிவடையும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பிராந்தியத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் எதிர்காலத்துக்கு அழிவை விளைவிக்கக் கூடியதாக இருக்கக் கூடும். இஸ்ரேல் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறதோ, எவ்வளவு ரத்தம் சிந்துகிறதோ, மனிதத்துக்கு எதிராக எவ்வளவு குற்றங்களைச் செய்கிறதோ, அவ்வளவு தூரம் அது தன் இருப்பை அபாயத்துக்குட்படுத்துகிறது. முடிவில் இந்த அநீதிகளுக்காக அது வருந்தும் நிலை ஏற்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசியாவில் துருக்கியின் நலன்களும் இரானின் நலன்களும் நீண்ட காலமாக முரண்படுகின்றன. அதேபோல், வளைகுடாவின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளும் ஆழமானவை. இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக மதத்தின் அடிப்படையில் மட்டும் ஒன்றிணைவது, அதிலும் குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேலுடன் நிற்கும் போது, சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது.
இரான் தோல்வியடைந்தால் என்ன ஆகும்?
ஆங்கில நாளிதழான ‘தி இந்து’வின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் ஸ்டான்லி ஜானி, “இரான் இந்தப் போரில் தோல்வியடைந்தால், மேற்காசியாவில் இஸ்ரேலின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிரியாவில் பஷார் அல் அசாத் ஏற்கெனவே பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டார். இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் ஏற்கெனவே பலவீனமடைந்துவிட்டன.
காஸாவை இஸ்ரேல் ஏற்கெனவே அழித்துவிட்டது. மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யும். இரான் பலவீனமடைந்தால், மேற்காசியாவில் ரஷ்யாவின் எஞ்சிய செல்வாக்கும் சுருங்கிவிடும். வளைகுடாவில் உள்ள அமெரிக்கக் கூட்டாளிகளின் எண்ணெயை நம்ப வேண்டிய நிலைக்கு சீனா செல்லும்.” என எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு