இஸ்ரேல் இரானை தாக்கியதாக கூறியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் திடீரென அதிகரித்த பதற்றத்தின் விளைவாக, உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்தன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 10 சதவிகிதததுக்கும் மேல் அதிகரித்து, ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையைத் தொட்டது. அதன் பிறகு விலை சற்று குறைந்தது.
அதனையடுத்து, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல், எண்ணெய் வளம் மிக்க இந்தப் பகுதியிலிருந்து வரும் விநியோகங்களைத் தடுக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் கவலையுற்றனர்.
கச்சா எண்ணெயின் விலை உங்கள் காரில் எரிபொருள் நிரப்ப எவ்வளவு செலவாகும் என்பதிலிருந்து, பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்களின் விலை வரை அனைத்தையும் பாதிக்கிறது.
தொடக்கத்தில் உயர்ந்த எண்ணெய் விலைகள் பின்னர், சிறிது குறைந்தன. ஆனால் வியாழக்கிழமை இறுதியில் காணப்பட்ட விலையை விட, பிரென்ட் கச்சா எண்ணெய் 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 74.23 டாலருக்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமையன்று விலைகள் உயர்ந்தாலும், கடந்த ஆண்டு இதே நேரத்தில் காணப்பட்ட எண்ணெய் விலையை விட, 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே தற்போதைய விலை உள்ளது.
2022-ன் தொடக்கத்தில் ரஷ்யா யுக்ரேனில் போர் தொடங்கிய நேரத்தில், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியது. அப்போது காணப்பட்ட உச்ச நிலையைவிட தற்போது விலை மிகவும் குறைவாக உள்ளது .
வெள்ளிக்கிழமை ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பங்கு விலைகள் சரிந்தன. ஜப்பானின் நிக்கேய் பங்குச்சந்தை 0.9% சரிந்தது, பிரிட்டனின் ஃஎப்டிஎஸ்ஈ (FTSE) 100 பங்குச்சந்தை 0.39% சரிந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் இரானைத் தாக்கியதை அடுத்து உலகளவில் உயர்ந்துள்ள எண்ணெய் விலை
அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவுடன் முடிவடைந்தன.
டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (The Dow Jones Industrial Average) பங்குச்சந்தை 1.79% சரிந்தது, அதே நேரத்தில் எஸ்&பி 500 (S&P) பங்குச்சந்தை 0.69% சரிந்தது.
மறுபுறம், தங்கம் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற “பாதுகாப்பான” சொத்துக்கள் லாபம் ஈட்டின.
நிச்சயமற்ற காலங்களில் இந்தச் சொத்துக்களை மிகவும் நம்பகமான முதலீடுகளாக, சில முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
1.2% உயர்ந்த தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் 3,423.30 டாலராக இருந்தது.
இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இரான் தங்கள் நாட்டை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியது.
மோதல் மேலும் மோசமடையுமா இல்லையா என்பதை வரும் நாட்களில் எரிசக்தி வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்று ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
“இது ஒரு அபாயகரமான நிலை. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபரில் இஸ்ரேலும் இரானும் நேரடியாக தாக்கிக் கொண்டபோது, மோதல்கள் மேலும் அதிகரிக்கவில்லை. அதுபோல இப்போதும் விரைவில் சமாதானமாகலாம்,” என்று வந்தா இன்சைட்ஸின் வந்தனா ஹரி பிபிசியிடம் கூறினார்.
அதேசமயம், “இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் அளவிற்கு, ஒரு பெரிய போராக வலுக்கும் ஆபத்தும் இருக்கிறது,” என்றும் அவர் எச்சரித்தார்.
இரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தளங்களை இஸ்ரேல் தாக்கினால், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாயுக்கு 80 டாலர் முதல் 100 டாலர் வரை உயரக்கூடும் என கேபிடல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு நடந்தாலும், அத்தகைய விலை உயர்வு மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களை இன்னும் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யத் தூண்டும். அதனால், எண்ணெய் விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்படலாம். இதனால், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சமீபத்திய எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் விலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை “இவ்வளவு சீக்கிரம்” பரிசீலிக்க முடியாது என்று பிரிட்டன் மோட்டார் வாகன அமைப்பான ஆர்ஏசியின் (RAC) செய்தித் தொடர்பாளர் ராட் டென்னிஸ் கூறினார்.
”மொத்த அளவில் வாங்கப்படும் எரிபொருளின் விலை இன்னும் சில நாட்களுக்கு உயர்வாகவே இருக்குமா? விற்பனையாளர்கள் எவ்வளவு லாபத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள் ஆகிய இரண்டு முக்கியப் பங்காற்றும்” என்கிறார் அவர்.
ஒரு தீவிரமான சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள் கட்டமைப்புகள் அல்லது கப்பல் போக்குவரத்தை இரான் குறிவைத்தால், ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பீப்பாய் அளவில் நடைபெறும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படக்கூடும்.
உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக, உலகளவில் விநியோகிக்கப்படும் எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு செல்கிறது.
எந்த நேரத்திலும், மத்திய கிழக்கில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களும் அவர்களின் வாடிக்கையாளர்களும் அந்த பிராந்தியத்தில் இருந்து எரிசக்தியை கொண்டு சென்று கொண்டே இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்திக்குச் செல்லும் வழியில் அல்லது அதிலிருந்து வெளியேறும் வழியில் பல டஜன் கணக்கான டேங்கர்கள் எப்போதும் காணப்படும்.
வடக்கே இரானாலும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி, வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கிறது.
“இப்போது நாம் காணும் ஆபத்து, எதிர்வினையின் தொடக்க நிலைதான். ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில், இது எந்தளவு மோசமாகும் என்பதையும் சந்தை கணக்கில் எடுக்க வேண்டும்,” என்கிறார் எம்எஸ்டி பைனான்சியலின் எரிசக்தி ஆராய்ச்சித் தலைவர் சவுல் கவோனிக்.