படக்குறிப்பு, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிகட்டுரை தகவல்
இஸ்ரேல் – இரான் மோதலின் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆயதுல்லா அலி காமனெயி இல்லாதது குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 26 அன்று அவர் தொலைக்காட்சியில் தோன்றினார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் ஒரு வீடியோவில் தோன்றியுள்ளார்.
இஸ்ரேல், இரான் இடையிலான மோதல் தொடங்கி 12 நாட்களில் திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது இந்தக் காணொளிச் செய்தி வந்துள்ளது. இந்தக் காலகட்டம் முழுவதும் காமனெயி அசாதாரணமான மௌனத்தைக் கடைபிடித்தார்.
ஆயதுல்லா அலி காமனெயி நாட்டின் உச்ச தலைவர் மட்டுமல்ல, இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியும் என்பதால், இஸ்ரேலுடனான போர் போன்ற மிகவும் முக்கியமான சம்பவத்தில் அவரிடம் இருந்து எந்தவித செய்தியும் வராதது கவலைகளை அதிகரித்தது. அவரது உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கியமான முடிவுகளில் அவருக்கு உள்ள கட்டுப்பாடு தொடர்பாக வதந்திகள் பரவின.
அதிலும், அவர் தனது கடைசி காணொளியில், கடுமையான நெருக்கடியின்போது சாதாரணமாகப் பேசியது அசாதாரணமாகக் கருதப்பட்டது என்ற போதிலும், அவர் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றியதன் மூலம், பல ஊகங்களுக்குத் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.
ஆனால் இரான் இதுவரை இல்லாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருந்தபோது அவர் நீண்ட காலம் மௌனமாக இருந்ததற்கான காரணங்கள் மற்றும் அதிகாரத்தின் மீதான அவரது கட்டுப்பாடு குறித்த கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன.
மக்கள் கடைசியாக எப்போது ஆயதுல்லா அலி காமனெயியை பார்த்தார்கள்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயியை ஆதரிக்கும் இரானியர்கள்
ஜூன் 26 அன்று தொலைக்காட்சியில் அவர் பேசியபோது, தனது மௌனத்தை காமனெயி கலைத்தார். ஜூன் 13ஆம் தேதி இரான்-இஸ்ரேல் மோதல் தொடங்கிய பிறகு அவர் பொதுமக்களுக்கு வழங்கிய மூன்றாவது செய்தி இது.
முன்னதாக ஜூன் 18 அன்று அவர் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். அதோடு, “நிபந்தனையற்ற சரணடைதல்” தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை நிராகரித்தார்.
காமனெயியின் அதிகாரப்பூர்வ வலைதளம் வழக்கமாக அவரது உரைகளின் பல புகைப்படங்களை வெளியிடும். ஆனால் ஜூன் 18 அன்று உச்ச தலைவரின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது. ஜூன் 26 உரையுடனும் ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது.
ஜூன் 18 அன்று காமனெயி அளித்த காணொளி உரை, வித்தியாசமாகவும் அசாதாரணமாகவும் தோன்றியது. அதன் பிறகே, அவர் இருக்கும் இடம் குறித்த ஊகங்கள் அதிகரித்தன.
இஸ்ரேல், இரான் இடையிலான போரை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த பிறகும், 48 மணிநேரத்திற்கும் மேலாக இரான் உச்ச தலைவர் காமனெயி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.
இந்த மௌனம், பல ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் வழிவகுத்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள், காமனெயியின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்துடன் வெளியானதா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இரானிய அரசமைப்பின் 110வது பிரிவின் கீழ், நாட்டின் உச்ச தலைவருக்கு போர் அல்லது அமைதியை அறிவிக்கும் அதிகாரம் உள்ளது. அத்துடன் காமனெயி ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார்.
இதையும் மீறி, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) வெளியிட்ட போர் நிறுத்தம் குறித்த அறிக்கையில், காமனெயியின் ஆதரவு அல்லது அவரது பங்களிப்பு தொடர்பான எந்தவிதக் குறிப்பும் இல்லை.
இரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கோ அல்லது கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத் தளமான அல்-உதெய்ட் மீதான இரானின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும்கூட காமனெயி எந்த எதிர்வினையையும் பொதுவெளியில் தெரிவிக்காதபோது நிலைமை மேலும் மர்மமாக மாறியது.
அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவங்கள் குறித்து காமனெயியுடன் எந்த உரையாடலும் நடந்ததாக இரானிய மூத்த அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
காமனெயி வெளிப்படையாக கருத்து சொல்லாததற்கான காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஹ்ரானில் போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் மக்கள்
ஆயதுல்லா அலி காமனெயியின் அமைதிக்கு அவரது பாதுகாப்பு தொடர்பான கவலைகள் ஒரு காரணமாக இருக்கலாம். மூத்த அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொள்ளாததும் இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரான்-இஸ்ரேல் மோதலின்போது காமனெயி குறிவைக்கப்படலாம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் சூசகமாகத் தெரிவித்திருந்தனர். இஸ்ரேலிய தாக்குதல்களில் இரானிய தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதால், இந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க முடியவில்லை.
ஜூன் 21 அன்று, நியூயார்க் டைம்ஸ், காமனெயி ‘ஒரு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளார்’ என்று பெயர் குறிப்பிடப்படாத இரானிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
ஆயதுல்லா அலி காமனெயி, ஒரு நம்பகமான உதவியாளர் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டதாகவும், அவர் இருக்கும் இடம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மின்னணு தகவல் தொடர்புகளையும் அணைத்துவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.
ஜூன் 24 அன்று காமனெயியின் அலுவலகத்தில் மூத்த அதிகாரியான மெஹ்தி ஃபஸேலி, காமனெயி பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒப்புக்கொண்டபோது இது ஓரளவு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இது தவிர அவர் வேறு எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காமனெயியின் பாதுகாப்புக் கவலைகளும் அவரது மௌனத்திற்குக் காரணமாக இருக்கலாம்
இந்த விஷயத்தில் தொலைகாட்சி சேனல்களும், ஆன்லைன் பயனர்களும் பல ஊகங்களை முன்வைத்தனர். போர் நிறுத்தத்தை வெளிப்படையாக ஆதரித்தால், இரானுக்குள் உள்ள தீவிரவாதக் குழுக்களின் சீற்றத்தை இரானின் உச்ச தலைவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகவே காமனெயி மௌனமாக இருப்பதை ஓர் உத்தியாகக் கடைபிடித்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இரானின் உச்ச தலைவர், தனது இறுதி உரையில் ‘போர் நிறுத்தம்’ அல்லது ‘ஒப்பந்தம்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை, ‘வெற்றி’ என்ற வார்த்தையை மட்டுமே அவர் அழுத்திக் கூறினார்.
காமனெயியின் கொள்கைகள் பெரும்பாலும் மூலோபாய தெளிவின்மையைப் பிரதிபலிக்கின்றன. கடந்த கால நெருக்கடிகளில் இருந்து அவர் தன்னை விலக்கி வைத்துள்ளார்.
சிலர், அவர் தற்போது பிரச்னையான நேரத்தில் தோன்றாததும் அவரது பழைய உத்தியின் ஒரு பகுதிதான் என்றும், எந்தவொரு பிரச்னையிலும் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு தீவிரவாத பிரிவின் நிலைப்பாட்டிற்காகக் காத்திருந்து பின்னர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார் என்றும் கூறுகின்றனர்.
காமனெயியின் தலைமறைவு குறித்து சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் ஆட்சியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் தொடர்கின்றன
காமனெயி முக்கியமான நேரத்தில் தோன்றாதது அல்லது மெளனமாக இருந்தது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இரானியர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெருமளவில் விமர்சித்தனர்.
அதேபோல, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் மீம்ஸ்கள் மற்றும் நையாண்டியான பதிவுகள் பரவலாகப் பகிரப்பட்டன. தேசிய நெருக்கடியின் போது “தலைமறைவானதற்காக” அவர் கேலி செய்யப்பட்டார்.
சில சமூக ஊடகப் பயனர்கள், இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாகவோ அல்லது தேசிய அளவிலான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை காமனெயியிடம் இருந்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பறித்துக் கொண்டதாகவோ ஊகித்தனர்.
இருப்பினும், காமனெயியின் மௌனம் என்பது ‘ஆச்சரியமான மீள்வருகையை ஏற்படுத்தி அடையாள வெற்றியை அறிவிக்க அவர் கையாண்ட, நன்கு சிந்தித்துத் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதி’ என்று பலர் கருத்து வெளியிட்டனர்.
ஆனால் சமூக ஊடகப் பயனர்களில் சிலர், காமனெயி தற்காலிகமாக ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகப் பதிவிட்டு, அவரை சிரியாவின் அதிபர் பஷார் அல்-அசத்துடன் ஒப்பிட்டார்கள். இருப்பினும், 1989ஆம் ஆண்டு உச்ச தலைவரானதில் இருந்து இரானை விட்டு காமனெயி வெளியே செல்லாததால், இந்தக் கூற்றை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரானின் அதிபராக இருந்தபோது 1989ஆம் ஆண்டில் வட கொரியா சென்றதுதான் ஆயதுல்லா அலி காமனெயியின் கடைசி வெளிநாட்டுப் பயணம் என்று அறியப்படுகிறது.
அவர் அண்மையில் பொதுவில் தோன்றியது பல்வேறு வதந்திகள் மற்றும் ஊகங்களுக்குத் தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால் இரானுக்குள் அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கான தொடரும் போராட்டங்கள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று கூறலாம்.
ஜூன் 26 அன்று வெளியான ஒரு வீடியோ செய்தியில் காமனெயி சோர்வாகவும் பலவீனமாகவும் தோன்றியதாகப் பலர் கூறுகின்றனர். இது அவரது வயது (86) மற்றும் உடல்நலம் குறித்த புதிய ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.