24
இஸ்ரேலும் லெபனானும் இடையே 10 நாட்களுக்கு யுத்த நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவை முன்னதாக டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்திருந்தார்.
இன்று (17) அதிகாலை யுத்த நிறுத்தம் அமலுக்கு வரும் முன்புவரை, இஸ்ரேல் படையும் ஹிஸ்புல்லா அமைப்பும் லெபனான் எல்லைப் பகுதியில் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டிருந்தன.
இது அமைதிக்கான முக்கியமான மற்றும் வரலாற்றுச் சந்தர்ப்பம் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல்–லெபனான் பதற்றம் குறையுமா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை
அதேவேளை, இந்த யுத்த நிறுத்தம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக இருந்த ஒரு முக்கிய பிரச்சினையை நீக்கியுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres), இஸ்ரேல்–லெபனான் மோதலை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்றார். ஹிஸ்புல்லா உட்பட அனைத்து தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஐ.நா. பேச்சாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் (Stephane Dujarric), லெபனான் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறுகிய காலத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.