ஒரு வருடத்திற்கு முன்பு புகைப்படங்கள் வந்த வண்ணமே இருந்தன.
வரலாற்றில் மிகவும் மோசமான தாக்குதலின் தாக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீண்டு வந்து கொண்டிருந்த அதே நேரத்தில், காஸா கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆளானது. பாலத்தீன – இஸ்ரேல் விவகாரத்தில் இந்த மோதல் ஒரு திருப்புமுனையாக கருதப்பட்டது.
பல ஆண்டுகளாக நம்முடைய திரைகளில் இருந்து விலகியே இருந்த இஸ்ரேல் – பாலத்தீன மோதல்கள் கடந்த ஆண்டு மீண்டும் நம் பார்வைக்கு வந்தன.
இந்த மோதல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் இந்த தாக்குதல்கள் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், “இரண்டு தசாப்தங்களாக இருந்த சூழலோடு ஒப்பிடுகையில் மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது மிகவும் அமைதியாக இருக்கிறது,” என்று கூறியிருந்தார்.
தற்போது ஓர் ஆண்டாக அந்த பிராந்தியம் எரிந்து கொண்டிருக்கிறது.
41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இறந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு கரையில் மேலும் 600 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானில் பத்து லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் முதல் நாளில் 1200 இஸ்ரேலியர்கள் இறந்தனர். அதன் பிறகு 350க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இந்த மோதலில் இறந்து போனார்கள்.
காஸாவின் எல்லையோரமும், பதட்டத்துடன் காணப்படும் லெபனான் நாட்டு எல்லையை ஒட்டிய வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹெஸ்பொலாவின் வான்வழி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
முற்றுப்பெறாத மோதல்கள்
மத்திய கிழக்கு முழுவதும் மற்ற நாடுகளும் இந்த மோதலில் இணைந்துவிட்டன.
இந்த மோதல் அதிகரிப்பதை தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட விடாப்பிடியான முயற்சிகள் அனைத்து ஒன்றும் இல்லாமல் போனது. அதிபர் சந்திப்புகள், எண்ணிக்கையற்ற ராஜ்ஜீய அதிகாரிகளின் பேச்சுவார்த்தை, பெரும் அளவிலான ராணுவ ஆயுதங்களை அனுப்புதல் என பல நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
இராக், யெமென் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன.
எதிர்பார்க்கப்பட்ட வகையில் இஸ்ரேலும் இரானும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.
அமெரிக்காவின் முயற்சிகள் செல்வாக்கற்றதாக காணப்பட்டது.
மோதல்கள் விரிவடைந்து வருகின்ற சூழலில் அதன் ஆரம்பப்புள்ளி முற்றிலுமாக பார்வையில் இருந்து மறைய துவங்கிவிட்டது.
ஊடகங்கள் அனைத்தும் மத்திய கிழக்கில் முழுமையான போர் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், அக்டோபர் 7க்கு முன்பும் சரி பின்பும் சரி, காஸா மக்களின் வாழ்க்கை மறந்து போன ஒன்றாக மாறிவிட்டது.
தங்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த நாளில் பாதிக்கப்பட்ட சில இஸ்ரேலியர்களும் கூட ஒதுக்கப்பட்டதாக உணர்கின்றனர்.
“நாங்கள் புறந்தள்ளப்பட்டோம்,” என்று கூறுகிறார் பிணைய கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிம்ரோத் கோஹெனின் தந்தை யெஹுதா கோஹென்.
கடந்த வாரம் இஸ்ரேலின் கன் செய்திகளில் பேசிய அவர், “இந்த அர்த்தமற்ற போரில் அனைத்து எதிரிகளையும் நம் பக்கம் திருப்பியதற்கு நெதன்யாகுதான் காரணம்,” என்று கூறினார்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த நிகழ்வு மிகவும் சிறிய நிகழ்வுதான் என்று உணர வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் வெற்றியுடன் செய்து கொண்டிருக்கிறார் என்றும் யெஹுதா கூறினார்.
நெதன்யாகுவின் நிலைப்பாடு என்ன?
அனைத்து இஸ்ரேலிய மக்களும் யெஹுதா கோஹெனின் குறிப்பிட்ட பார்வையுடன் உடன்படவில்லை. இஸ்ரேலின் எதிரிகள் யூத நாட்டை அழிப்பதற்கான துவக்கமாகவே ஹமாஸின் தாக்குதலை பலரும் பார்க்கின்றனர்.
உண்மையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. பேஜர்கள் வெடிப்பு, திட்டமிடப்பட்ட கொலைகள், தொலைதூரத்திற்கு சென்று இலக்கை தாக்கும் வான்வழி தாக்குதல்கள், தங்களின் பெருமையாக இஸ்ரேல் கருதும் உளவு பிரிவு மூலமான தாக்குதல்கள் என்று கடந்த ஆண்டு இழந்த தன்னம்பிக்கையை தற்போது மீட்டுள்ளது.
கடந்த வாரம் பேசிய நெதன்யாகு, மத்திய கிழக்கில் இஸ்ரேல் அணுக முடியாத பகுதி என்ற ஒன்று இல்லை என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு பிரதமருக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில் மோசமான இடத்தில் இருந்தார் நெதன்யாகு. தற்போது அதில் முன்னேறி வருவதை அவரால் காண முடிகிறது. மிகவும் தைரியமான முடிவுகளை எடுக்கும் ஒரு உரிமமாக அது மாறுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது.
ஆனால் இவை அனைத்தும் எதை நோக்கி செல்கிறது?
”எப்போது இசை முடிய போகிறது? எங்கே அனைவரும் நிற்பார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை” என்று கூறுகிறார் – பிபிசியின் டுடே பாட்காஸ்ட் நிகழ்வில் பேசிய இரானுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் சிமோன் காஸ்.
மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளை தளபதி (Centcom) மைக்கேல் குரில்லா இஸ்ரேலுக்கு வருகை புரிந்தது ராஜ்ஜீய தீர்வுகளை ஆய்வதற்கான ஒரு வருகை போல் இல்லாமல் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாகவே காணப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் நான்கு வாரங்களில் நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிக்கலானதாக இருக்கின்ற இத்தகைய சூழலில் அமெரிக்கா எந்தவிதமான புதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஏதுவான நேரம் இது அல்ல.
தற்போதைக்கு, உடனடி சவாலானது இந்த மோதல் மிகப்பெரிய பிராந்திய மோதலாக உருமாறுவதை தடுப்பது.
கடந்த வாரம் இரான் நடத்திய தாக்குதல் உட்பட அனைத்திற்கும் பதிலடி தரும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக அதன் கூட்டாளி நாடுகள் கருதுகின்றன.
இரானின் அந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் யாரும் கொல்லப்படவில்லை. இரான் இஸ்ரேலின் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தியது. இருப்பினும் கடுமையான பதிலடி வழங்குவோம் என்று நெதன்யாகு உறுதி அளித்தார்.
பல வாரங்களாக நடைபெற்ற மோதல்களில் அற்புதமான உத்திகள் மூலம் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பல பெரிய கனவுகளை காண துவங்கியுள்ளார்.
இரானிய மக்களுக்கு அவர் நேரடியாக வெளியிட்ட செய்தி ஒன்றில், தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட இருப்பதாக மறைமுகமாக கூறினார். “எப்போது இரான் விடுதலை அடையும்? மக்கள் நினைக்கும் காலத்திற்கு முன்பே அது நிகழ்ந்துவிடும். அனைத்தும் மாற்றமடையும்,” என்று அவர் கூறினார்.
இராக்கில் 2003-ஆம் ஆண்டு அமெரிக்க போர் தொடுத்த போது அமெரிக்காவின் நவீன பழமைவாதிகள் வெளியிட்ட கூற்றையே நெதன்யாகு எதிரொலிப்பதாக சிலர் கருகின்றனர்.
இஸ்ரேல் இல்லாத உலகத்தை இரானிய அரசு கனவு காணலாம்.
ஆனால் ‘எதிர்ப்பின் அச்சு’ என்று அழைக்கப்படுகின்றன இரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளான ஹெஸ்பொலாவும் ஹமாஸும் ஒடுக்கப்படும் நிலையில், இரான் அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஒரே ஒரு வல்லரசு நாடான இஸ்ரேலை போரில் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளது.
இரான் ஏற்படுத்தியுள்ள அச்சத்தை இஸ்ரேல் மிக விரைவாக கடந்து சென்றுவிட இயலும். சமீபத்திய வெற்றிகள் அதற்கு நம்பிக்கை அளித்தாலும் தனியாக அதனை செய்ய இயலாது என்பதையும் இஸ்ரேல் உணர்ந்தே இருக்கிறது.
ஆட்சி மாற்றம் என்பது ஜோ பைடனின் நோக்கத்திலும் இல்லை. அவரது துணை அதிபரான கமலா ஹாரிஸின் நோக்கத்திலும் இல்லை.
டொனால்ட் டிரம்பைப் பொறுத்தமட்டில் ஒரே ஒருமுறை தான் இரானை தாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை தெஹ்ரான் சுட்டு வீழ்த்திய பிறகு அந்த முடிவை எடுத்தார்.
இருப்பினும் இறுதி நொடியில் அந்த எண்ணத்தில் இருந்து பின்வாங்கினார். ஆனால், அதற்கடுத்த 7 மாதத்தில் இரானின் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, மத்திய கிழக்கு சில தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கிறது என்பதை வெகு சிலரே நினைத்து பார்த்திருப்பார்கள்.
காஸாவில் மோதல் துவங்கி இரண்டாம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அனைவரும், போர் நிறுத்தத்திற்கு பிறகோ, அல்லது பரந்த போரில் மொத்தமாக மூழ்கிய பிறகோ காஸாவை மீண்டும் கட்டமைப்பது எப்படி என்றும், ஆள்வது எப்படி என்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில், எப்போது ஹமாஸ், ஹெஸ்பொலாவை போதுமான அளவிற்கு ஒழித்துவிட்டோம் என்று இஸ்ரேல் நினைக்கிறதோ, இது இந்த பிராந்தியத்தை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்லாது என்று இஸ்ரேலும் இரானும் கூறுகிறதோ, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகோ, ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதுவரை, இந்த மோதலை நிறுத்த நீண்ட காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு