1
ஈரானின் புதிய உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மறைந்த ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Khamenei) மூத்த மகனாக அறியப்படுகிறார்.
1969ஆம் ஆண்டு பிறந்த முஜ்தபா கமேனி, தற்போது 56 வயதாகிறார். இவர் உயர்நிலை மதத்தலைவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. மேலும், ஈரானில் எந்த அதிகாரப்பூர்வ அரசியல் பதவியையும் இதுவரை வகித்ததில்லை. எனினும், நாட்டின் அதிகார வளையங்களில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
முஜ்தபாவுக்கு ஈரானியப் புரட்சிப் படையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அதன் துணைப் படைப்பிரிவுகளுடன் உறவு வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான்–ஈராக் போரின் போது அவர் போரில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு எதிராக அமெரிக்கா 2019ஆம் ஆண்டு தடைகள் விதித்திருந்தது.
இந்நிலையில், முஜ்தபா கமேனியை ஈரான் நிபுணர்கள் சபை தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஈரானியப் புரட்சிப் படையின் அழுத்தத்தின் கீழ், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நியமனம் ஈரானில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காரணம், ஈரான் பரம்பரை ஆட்சியை ஆதரிக்கும் நாடாகப் பார்க்கப்படுவதில்லை. குறிப்பாக, ஷியா மதத் தலைமை அமைப்பில் தந்தையிடமிருந்து மகனுக்குப் பதவி மாற்றம் செய்வது சாதகமாகக் கருதப்படுவதில்லை.
மேலும், மறைந்த ஆயத்துல்லா கமேனி தனது பின்னணித் தலைவர்களின் பட்டியலில் மகன் முஜ்தபாவின் பெயரைச் சேர்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்தத் தீர்மானம் எதிர்காலத்தில் அரசியல் மற்றும் மத ரீதியான விவாதங்களைத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.