8
ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க இங்கிலாந்து பொலிஸாருக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த நால்வரையும் மார்ச் 13 வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்; மற்ற மூவர் இங்கிலாந்து–ஈரான் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
22, 40, 52 மற்றும் 55 வயதுடைய இந்த நால்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஹாரோ, வாட்ஃபோர்டு மற்றும் பார்னெட் பகுதிகளில் உள்ள முகவரிகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், ஹாரோவில் உள்ள அதே இடத்தில் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் 20 முதல் 49 வயதுக்குள் உள்ள ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிடன் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் மேலதிக விசாரணை நடைபெறும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரை பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக சந்தேகித்து கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.