4
ஈரானுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், கராச்சி நகரில் மாத்திரம் 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (மார்ச் 1) கராச்சியில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தூதரக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர். வட பாகிஸ்தானின் ஸ்கந்து நகரில் இடம்பெற்ற சம்பவங்களில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், அங்கு அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.