• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

ஈரான் ஆட்சி இன்னும் நிலைத்துள்ளது; இராணுவ திறன்கள் சிதைந்துள்ளன | அமெரிக்க தேசிய உளவுத்துறை

Byadmin

Mar 20, 2026


ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழுவில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், ஈரான் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் இராணுவ கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் “பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என உளவுத்துறை மதிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் தற்போது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும், முன்னைய சேதத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலா (Imminent Threat) என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க துளசி கப்பார்ட் மறுத்தார். “எது அச்சுறுத்தல் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து உளவுத்துறை முன்னதாகவே கணித்திருந்ததாகவும், அதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் அந்த நீரிணையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்ற அபாயமும் முன்கூட்டியே மதிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் விசாரணையின் போது, சிஐஏ பணிப்பாளர் ஜோன்ன் ரொட்க்ளிஃப் (John Ratcliffe) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் ஈரான் “உடனடி அச்சுறுத்தல் இல்லை” எனக் கூறி பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், ரொட்க்ளிஃப் அதற்கு மாறாக, ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக வாதிட்டுள்ளார்.

விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றிலும் அழிக்கப்பட்டது” என்ற எழுத்துபூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கவில்லை எனக் கூறப்பட்டதால் அரசியல் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய செனட்டர் ஒருவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலைப்பாட்டுக்கு முரணான பகுதிகள் தவிர்க்கப்பட்டதா என சந்தேகம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த கப்பார்ட், அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகள் சுருக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2025 ஜூனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திறனை குறிவைத்து நடத்திய 12 நாள் இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தற்போதைய அரசியல் மற்றும் உளவுத்துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

By admin