15
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள 14க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்க பிரஜைகள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், தற்போது கிடைக்கக்கூடிய வணிக ரீதியிலான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது நடத்திய சரமாரியான தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஈரான் அந்தப் பிராந்தியம் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வழக்கமாக இத்தகைய முக்கிய அறிவிப்புகள் சிக்கலான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மூலம் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை வெளியுறவுத்துறையின் உதவிச் செயலாளர் மோரா நம்தார் சமூக வலைதளமான X தளத்தில் இதனைப் பதிவிட்டமை மிகவும் விசித்திரமானது என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை எழுந்துள்ளது.
அச்சுறுத்தல் காரணமாக ஜோர்டானின் அம்மான் நகரில் உள்ள அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துக் கூறுகையில், இந்த மோதல் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று கணிக்கப்பட்டதாகவும், ஆனால், இது அதைவிட நீண்ட காலம் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.